Thursday, April 30, 2015

a so so film by mani rathnam

ஐ.ட்டி என்றாலே
கொழுத்த பணம்,
ஒழுக்க அத்துமீறல்கள் கொண்டது
என்பது ஒரு பொதுப்புத்தி.

ஒரு தமிழ் இயக்குநரின் தமிழ் மனம்

*
எம்.ஜி.சுரேஷ்


றாராகச் சொல்வதென்றால், தமிழில் புதுவகை சினிமாவை அறிமுகப் படுத்தியவர்களாக மகேந்திரனையும், பாலு மகேந்திராவையும் மட்டுமே குறிப்பிட முடியும். மற்ற இயக்குநர்கள் எல்லோருமே புதுவகை சினிமாவைப் போன்ற சினிமாவைத்தான் எடுத்தார்கள். எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பாரதிராஜாவின் சினிமா ஒரு வகை மசாலா என்றால், பாலசந்தரின் சினிமா இன்னொருவகை மசாலா. அமீர், பாலா போன்றவர்கள் தயாரிக்கும் மசாலாக்கள்  வேறு தினுசான மசாலாக்கள். இவர்கள் ஃபார்முலாக்களை உடைக்க வந்தவர்கள். தங்களுக்கு என்று புதிய ஃபார்முலாக்களை உருவாக்கிக் கொண்டு, சிலந்தி தன் வலையிலேயே சிக்கிக்கொண்டது போல், அதிலேயே சிக்கிகொண்டு திணறியவர்கள். இவர்களைப் போன்றும், அப்படி இல்லாமலும் படம் எடுக்கும்  ஒரு இயக்குநர் நம்மிடையே இருக்கிறார். அவர்தான் மணிரத்னம்.

மணிரத்னத்தின் மனம் உயர் மத்தியவர்க்க மனம். தீவிரவாதிகளைக் கெட்டவர்களாகவும், திருத்தப்படவேண்டியவர்களாகவும் பார்க்கும் மனம். தீவிரவாதிகள் ஏன் உருவாகிறார்கள், அதற்கு யார் காரணம் என்பதைப் பார்க்கத் தவறும் மனம். ரோஜா படத்தில் வரும் தீவிரவாதி ‘மனம் திருந்தும்’ சம்பவத்தை எடுத்துரைப்பது இந்த மத்தியதர வர்க்க மனம்தான். ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும் ஒரு டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய முன்வந்தால் என்ன ஆகும். அப்படித்தான் இவரும் இவரது படங்களும் ஆகி விடுகின்றன.

இதற்கு உதாரணமாக, அண்மையில் வெளி வந்த அவரது ஓகே கண்மணி படத்தைக் கூறலாம்.


படம் ஆரம்பிக்கிறது. கதாநாயகனின் அறிமுகத்துக்குப் பின் கதாநாயகியின் அறிமுகம். கதாநாயகி தாரா (நித்யா மேனன்) ஒரு ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் நிற்கிறாள். பிளாட்பாரத்தின் ஓரத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதன் முன் விழ முயல்கிறாள். நமக்கோ பகீர் என்கிறது. உலகப் புகழ் பெற்ற கொரியன் திரைப்படமான ‘மை சாஸி கேர்ல்’ என்ற திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியல்லவா இது? நல்லவேளையாக, மணி யூ டர்ன் அடித்துத் திரும்பி கதையை வேறு பக்கம் நகர்த்துகிறார்.

மும்பையில் ஒரு ஐ. ட்டி கம்பெனியில் வேலை கிடைத்து வருகிறான் கதாநாயகன். வழக்கமாக தமிழ் சினிமாவில் நிகழ்வது போலவே கதாநாயகியை ரயில்வே ஸ்டேஷன், சர்ச் என்று எதிர்பாராதவிதமாகச் சந்திக்கிறான். இருவருக்கும் பிடித்துப் போகிறது. கதாநாயகன் ஒரு வயதான தம்பதிகளின் வீட்டில் பேயிங் கெஸ்டாகத் தங்குகிறான். கதாநாயகியையும் தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறான். இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இது போன்ற கதைகளை ஹாலிவுட் அரைத்துத் தேய்த்து விட்டது. ‘நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்ட்’, ‘ஃப்ரண்ட்ஸ் வித் பெனெஃபிட்ஸ்’ போன்ற பல படங்கள் ஹாலிவுட்டில் வந்து போய்விட்டன. அந்தப் படங்கள் மணிக்கு ஆதர்சமாக இருந்திருக்க வேண்டும். மணி அதுபோன்ற படங்களை   பார்த்துச் சுட்டுவிட்டார் என்று பிலாக்கணம் பிடிப்பதல்ல நமது நோக்கம். அதிலுள்ள ஜீவனைப் பயன்படுத்தத் தவறிவிட்டாரே என்பதுதான் நமது ஆதங்கம்.

பேருக்குத்தான் கதை ஐ.ட்டி உலகத்தைப் பற்றிப் பேசுகிறதே தவிர, அந்த உலக மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதில் பதுங்கி ஒளிகிறது. அமெரிக்காவில் ஐ.ட்டி மக்கள் ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது சர்வ சாதாரணம். அவர்களுக்குள் பற்றிக் கொள்வதும் அதைவிட சாதாரணம். ஆண் - பெண் என்கிற பாலியல் வேறுபாட்டைத் தவிர, வேறு எந்தவிதமான செண்டிமெண்டுக்கும் அங்கே இடமில்லை. மணியின் படத்தில் வரும் கதாநாயகி தன் சொத்துக்கு ஆசைப்படாத, தன்னை மட்டுமே காதலிக்கிற ஒரு கதாநாயகனைத் தேடுகிறாள். இது ஐ.ட்டி மனம் அல்ல. இந்திய மனம். அதிலும் தமிழ் மனம். இது சராசரி கதைக்குரிய கதாநாயகிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டிய மனம். ஒரு ஐ.ட்டி துறையில் இருக்கும் பெண்ணுக்கு இருக்க சாத்தியமில்லாத மனம். கல்யாணமில்லாமல் உடலுறவு கொள்ளும் ஒரு இளம் ஜோடி, வயதான இன்னொரு ஜோடியின் அன்னியோன்னியத்தைப் பார்த்து திருமணம்தான் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்களாம். இதுதான் இந்தப் படம் முன்வைக்கும் நீதி.

ஐ.ட்டியில் வேலை பார்ப்பவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல. நம்மிடையே வாழ்பவர்கள்தான். வேலையின் நிமித்தம் அவர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் காதலிக்க முடிவதில்லை. திருமணம் செய்ய முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் பிராஜக்ட் பிராஜக்ட் என்றே ஓடுகிறது. காமத்தை மனம் மறுத்தாலும் உடல் மறுப்பதில்லை. இது ஒரு நெருக்கடி. இதற்கு அளவுகோல்கள் இல்லை. ஒழுக்கவிதிகள் இல்லை. காமம் என்பது ஓர் உடல் உபாதை. அதை அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள். அது அவர்கள் செய்து கொண்டிருக்கும் பிராஜக்டுக்கு உதவியாக இருக்கிறது. எனவே, கல்யாணத்தைவிட இது பரவாயில்லாமல் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நவீன சித்தாந்தம். இவர்கள் தங்களையும் அறியாமல் அதைத் தகர்க்கிறார்கள். தங்களுக்கே தெரியாமல் இவர்கள் குடும்பம் என்ற நிறுவனத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்.

இதே போன்ற கதையமைப்புக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் எதிர்பாராத விதமாகக் கர்ப்பம் தரித்து விடுவார்கள். அவர்கள் துறக்க விரும்பும் குடும்பம் என்ற நிறுவனம் அவர்களின் காதைப் பிடித்துத் திருகி இழுத்துப் போகும் வேடிக்கையை ரசிக்கும்படி எடுத்துரைப்பார்கள். மணியின் நிலையோ ரெண்டும் கெட்டான் நிலைமை. ஐ.ட்டி கதையையும் எடுக்க வேண்டும். ஆனால், தமிழ் மனத்துக்கு எதிராகவும் போய்விடக்கூடாது. காதலிக்கும் போது நவீன உடைகளில் திரியும் கதாநாயகி, சட்டென்று தழையத் தழைய புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டித் திருமணம் செய்து கொள்வது பழைய தமிழ் மரபு. அதைத் தான் ஓகே கண்மணியும் செய்கிறாள். அதனால் மணிரத்னத்தின் மற்ற படங்களான, அக்னிநட்சத்திரத்தில் வரும் அமலா, இதயத்தைத் திருடாதே படத்தில் வரும் கதாநாயகி ஆகியோரைவிட பின்தங்கி இருக்கிறாள்.

கல்யாணம் ஆகாமலேயே ஒரு பெண் உடலுறவு கொள்வது காலங்காலமாக நடந்துதான் வருகிறது. மகாபாரதத்தில் குந்தி கல்யாணம் ஆகாமல்தான் கர்ப்பம் தரித்தாள். அதுவும் ஐந்து முறை! அது தாய்வழிச் சமூகம். பின்னாளில் தந்தைவழிச் சமூகம் வந்தபோதுதான், தனி சொத்துரிமையைக் காக்கும் பொருட்டு, ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற சொல்லாடல்கள் பிறந்தன. தனக்குப் பின் தனது சொத்து தன்னுடைய விதையில் பிறந்த குழந்தைக்குத்தான் போய்ச்சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான் திருமணம் என்ற சடங்கும், குடும்பம் என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டன. மணி நினைப்பது போல் கல்யாணமாகமாலேயே கன்னி கழிவது சாகச வேலை அல்ல. அதைப்பார்த்து மூக்கில் விரல் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அது தரும் அதிர்ச்சி முக்கியமானது. அதை இந்தப் படம் தரவே இல்லை.

ஐ.ட்டி மனிதரும் எழுத்தாளருமான சேத்தன் பகத்தின் நாவல் ஒன்றில் ஒரு காட்சி வரும். ஒரு கார். அதில் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் உடலுறவு கொள்வார்கள். உடலுறவு முடிந்ததும், அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அவளிடம் கேட்பான். உரையாடல் கிட்டத்தட்ட இந்த ரீதியில் இருக்கும்.

‘எப்ப கல்யாணம்?’

‘அடுத்தவாரம்’

‘மாப்பிள்ளை எங்கே இருக்கிறான்?’

‘யு.எஸ்ஸில்.’

-    ‘கல்யாணம் ஆகிவிட்டால் உன்னைப் பார்க்க முடியாதே. அதனால்; உன்னுடன் ஒருதடவை இருந்துவிட்டுப் போக விரும்பினேன்’ என்பாள் அவள்.

அப்போதுதான் நமக்குத் தெரியும், அந்தப் பெண்ணும் அந்த ஆணும் காமம் வேறு கல்யாணம் வேறு என்ற கோட்பாட்டில் இருக்கிறார்கள் என்று. இதுதான் ஐ.ட்டி கலாசாரம். இந்தக் காட்சி தரும் அதிர்ச்சி சற்றும் எதிர்ப்பாராதது. இது ஒரு நிதர்சன உண்மை. இதுபோன்ற ஒரே ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் இல்லை. தவிரவும், இந்தப் படத்தில் வரும் ஐ.ட்டி இளைஞன் தாறுமாறான வேலை நேரத்தில் சிக்குண்டு அலைக்கழிக்கப் படுவதில்லை. நினைத்த நேரத்தில் தன் அலுவலகத்தை விட்டு வெளியேறி, காதலியுடன் வெளியூர் எல்லாம் போகிறான். அவனைக் கம்பெனி ‘எஸ்கலேட்’ செய்வதில்லை. அந்தப் பெண்ணும் தனது அலுவலகத்துக்குள் நுழைந்ததும், இவன் போனில் அழைக்க உடனே வெளியேறிப் போய்விடுகிறாள். அவனுடன் பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஓர் இடத்தில் காஃபி சாப்பிடுகிறாள். இதெல்லாம் கல்லூரியில் படிக்கும் காதலர்களுக்கான காட்சிகள். ஐ.ட்டி மக்களுக்கான காட்சிகள் அல்ல. இப்படி நிறைய சொல்லலாம். இந்தக் கதையை ஐ.ட்டி பின்புலத்தில் வைத்துத்தான் எடுத்திருக்க வேண்டும் என்றில்லை. வேறு எந்தப் புலத்தில் வைத்து வேண்டுமானாலும் எடுத்திருக்க முடியும். இதில் ஐ.ட்டி மக்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசப்படவே இல்லை. ஐ.ட்டி என்றாலே கொழுத்த பணம், ஒழுக்க அத்துமீறல்கள் கொண்டது என்பது ஒரு பொதுப்புத்தி. இது மத்தியவர்க்க மனித மனத்தால்  கட்டமைக்கப்பட்டது. மணியின் பொதுப்புத்தியும் அதுவே. அதைத்தான் மணி இந்தப் படத்தில் விநியோகம் செய்திருக்கிறார்.

                          <><><><><>




Friday, April 24, 2015

திரைப்படம் / கியூபா - சவத்துடன் ஒரு பயணம்


சவத்துடன் ஒரு பயணம்
(guantanamera – Cuba - 1995)
• • •
எம்.ஜி. சுரேஷ்


கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் வசிக்கும் யோயிதாவுக்கு திடீரென்று ஓர் ஆசை முளைக்கிறது. தனது சொந்த ஊரான குவாண்டனமோவுக்குப் போக வேண்டும் என்பதுதான் அது. அங்கிருந்து ஹவானாவுக்கு வந்த பிறகு, கடந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில் ஒரு தடவை கூட குவாண்டனமோவுக்கு அவள் போனதே இல்லை. தனது உற்றார், உறவினர், நண்பர்கள் என்று பலரும் குவாண்டனமோவில்தான் இருக்கிறார்கள். சாவதற்குள் ஒருமுறை அவர்களைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கான சந்தர்ப்பமும் வருகிறது. யோயிதா ஒரு பாடகி. அவளை குவாண்டனமோ ஊர் மக்கள் பாராட்டி கௌரவிக்க விரும்புகிறார்கள். அதற்கான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். உடனே அவளும் புறப்பட்டு வருகிறாள்.

     குவாண்டனமேரா என்றால் குவாண்டனமோவைச் சேர்ந்த பெண் என்பது பொருள். தவிரவும் குவாண்டனமேரா என்பது புகழ்பெற்ற கியூபாவின் நாடோடிப் பாடலும் கூட. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான யோயிதா ஒரு பாடகி என்பதால், இந்தப் படத்தில் அந்தப் பாடல் ஆங்காங்கே பின்னணியாக இசைக்கப்பட்டிருப்பது நேர்த்தியாகவும் பொருத்தமாகவும்  இருக்கிறது.

     குவாண்டனமோ விமானநிலையத்துக்குப் பறந்து வரும் உலோகப்பறவை தரை இறங்கி, ரன்வேயைத் தொடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. இவளை வரவேற்பதற்காக உறவுக்காரியான ஜார்ஜினா விமான நிலையத்துக்கு வந்திருக்கிறாள். அவளைப்பார்த்ததும் யோயிதா பரவசமடைகிறாள். தொடர்ந்து போகும் வழியில் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பலரைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள். எல்லாவற்றுக்கும் உச்சமாக கிழவர் கேண்டிடோவைப் பார்த்து அளவற்ற ஆனந்தம் அடைகிறாள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கேண்டிடோ அவளது காதலனாக இருந்தார். இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர். அந்தக் காலத்து நினைவுகள் அவர்களை எங்கெங்கோ இழுத்துப் போகின்றன. 

     ’உனக்குத் தெரியுமா? நீ கொடுத்த நீல ரிப்பனை நான் இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறேன்?’ என்கிறார் கேண்டிடோ.

     ’அப்படியா?’ என்று அளவற்ற வியப்புடன் கேட்கி|றாள் யோயிதா. மனம் நெகிழ்ந்து அப்படியே அவரை அணைத்துக் கொள்கிறாள். அவரும் அவளை பதிலுக்கு அணைத்துக் கொள்கிறார். உணர்ச்சிப் பெருக்கில் அவள் கைகால்கள் துவள்கின்றன. அந்தத் தருணத்தில் அவள் உயிர் சட்டென்று பிரிந்து விடுகிறது.

     இப்போது ஒரு பிரச்சனை முளைக்கிறது. யோயிதாவின் உடலை இங்கிருந்து ஹவானாவுக்குக் கொண்டு போகவேண்டும். அங்குதான் சவ அடக்கம் செய்ய வேண்டும். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், அது அத்தனை சுலபமான காரியம் அல்ல.

     கியூபா நாட்டுச்சட்டப்படி ஒருவர் எங்கு இறக்கிறாரோ, அந்தப் பிராந்தியத்துக்குரிய நகரசபைதான் அந்தச் சடலத்துக்குப் பொறுப்பு. இறந்த நபர் அதே ஊரில் அடக்கம் செய்யப்படாமல், வேறு ஊருக்குக் கொண்டுபோய் அடக்கம் செய்யக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுமானால், அதற்கான ஏற்பாடுகளையும் அந்த நகரசபைதான் செய்ய வேண்டும். அதாவது, இறந்த உடலை, எந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டுமோ, அந்த ஊருக்கு நகரசபைதான் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான வாகனம், ஓட்டுநர், எரிபொருள் எல்லாவற்றையும் அதுதான் ஏற்க வேண்டும்.

வழக்கமான இந்தச் சட்டத்தை அரசு உயர் அதிகாரியான அடால்ஃபினோ மாற்றுகிறான். அவனது புதிய சட்டப்படி, ஒரு சடலத்தை வேறு ஊருக்குக் கொண்டுபோக வேண்டுமானால், அந்தச் சடலத்தை அப்படியே ஒரே வண்டியில், போக வேண்டிய ஊருக்குக் கொண்டு போய்விடமுடியாது. வழியில் வரும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கல்லறை நிலையங்களில் வண்டியை நிறுத்தி, அங்கிருந்து வேறு ஒரு வண்டியில் சடலத்தை மாற்றி வைத்துக் கொண்டு அடுத்த ஊர் வரை கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் வாகனம், எரிபொருள், டிரைவர் பயன்பாடு ஆகியவற்றில் சோஷலிசத்தை பிரயோகம் செய்ய முடியும். அடால்ஃபினோ ஜார்ஜினாவின் கணவன். ஜார்ஜினாவின் அத்தையான யோயிதாவின் மரணத்தின் மூலம் இப்போது அவன் குடும்பத்திலேயே ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது. தனது புதிய சட்டத்தைத் தானே பரிசோதித்து சரிபார்க்க முடியும். அதில் அவனுக்கு மகிழ்ச்சி.

     இப்போது யோயிதாவின் உடலை குவாண்டனமோவிலிருந்து ஹவானாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை ஜார்ஜினாவின் கணவன் அடோல்ஃபோ சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான். அடால்ஃபோ ஒரு சிடுமூஞ்சி. ஆணாதிக்கவாதி. மனைவியை அடிமைபோல் நடத்துபவன். ஜார்ஜினா அவனுடன் விருப்பமின்றி வாழ்க்கை நடத்துகிறாள். கம்யூனிஸ்ட் கியூபாவின் அதிகார வர்க்கத்தினரில் அவனும் ஒருவன். சடலத்தை ஆங்காங்கே மாற்றி மாற்றி எடுத்துப் போக வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்திருக்கிறான். எனவே, இப்போது இது வெற்றி அடைந்தால் இந்த முறை தொடர்ந்து கையாளப்படும். அவனுக்கும் பேரும் பதவி உயர்வும் கிடைக்கும்.

      அடோல்ஃபோ, அவன் மனைவி ஜார்ஜினா, யோயிதாவின் பால்யகால காதலர் கேண்டிடோ ஆகிய மூவரும் ஒரு காரில் டிரைவருடன் ஹவானாவுக்குப் புறப்படுகின்றனர். அவர்களுக்கு முன்பாக யோயிதாவின் உடலைச் சுமந்து செல்லும் சவ ஊர்தி போகிறது.

     இவர்கள் மூவரும் புறப்படும் அதே சமயத்தில், குவாண்டனமோவிலிருந்து இரண்டு பேர் ஹவானாவுக்குப் புறப்படுகின்றனர். டிரைவர் மரியானோவும் அவனது நண்பர் ரேமனும்தான் அந்த இரண்டு பேர். ஆங்கிலத்தில் friend, philosopher, guide என்று சொல்வார்களே அதைப் போல்தான் மரியானோவுக்கு ரேமன். அவனுக்கு சதா அறிவுரைகள் வழங்கியபடியே இருப்பார். மரியானோ பாவாடைகளின் பின்னால் சுற்றித் திரிபவன். லாரி டிரைவரான அவனுக்குப் போகும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு காதலி இருக்கிறாள். அவர்களைச் சமாளிப்பதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. இப்போது கூட அவன் ஹவானாவுக்குப் போவதே தனது உள்ளூர்க் காதலியிடமிருந்து (மணமாகி கணவனுடன் வாழ்பவள்!) தப்பி ஒடுவதற்காகவே. அவளுக்குப் பயந்து ஹவானாவுக்குத் தெறித்து ஓடுகிறான். ரேமன் அவனுக்கு அறிவுரை கூறுகிறார். ‘இப்படி எத்தனை நாளைக்குத்தான் ஓடிக்கொண்டிருப்பாய்? யாராவது ஒருத்தியுடன் செட்டில் ஆகப்பார். இளமையில் இந்த வாழ்க்கை ருசியாகத்தான் இருக்கும். வயதான பின் யாரும் வரமாட்டார்கள். நீ தனிமையில் வாழ்ந்து சாக வேண்டும். நீ சாகும்போது உன் கண்களை மூட, கண்ணீர் சிந்த ஒரு பெண் வேண்டாமா? யோசி’

     லாரியில் ஏறும் முன் ரேமன் மதுவைக் கொப்பளித்து லாரியின் டயர்களில் துப்புகிறான். பின்பு சிகரெட்டைப் பிடித்து டயர்களில் ஊதுகிறான். இது கியூப நாட்டு ஐதீகம். நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது, இப்படிச் செய்தால், போகும் வழியில் வாகனத்துக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்பது நம்பிக்கை. பின்பு, இருவரும் லாரியில் ஏற லாரி புறப்படுகிறது.

     போகும் வழியில் ஒரு உணவு விடுதியில் ரேமன் வண்டியை நிறுத்துகிறான். அங்கே ஒரு பெண்ணின் மீது மரியானோ இடித்துக் கொள்கிறான். ‘ஸாரி’ சொல்லத் திரும்பும் அவன் திடுக்கிடுகிறான். இடிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் திகைக்கிறாள். இருவர் மனங்களிலும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன. அந்தப் பெண் வேறு யாருமல்ல. அடோல்ஃபோவின் மனைவி ஜார்ஜினாதான். பல ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் இப்போது எதிர்பாராதவிதமாக மரியானோவும் ஜார்ஜினாவும் சந்தித்திருக்கின்றனர்.  வியப்பில் ஆழ்கின்றனர். அவள் அவனது முதல் காதலி. வாழ்க்கையில் மறக்கவே முடியாத விஷயங்களில் ஒன்று முதல் காதல் அல்லவா?

மரியானோ கல்லூரியில் படித்த காலத்தில், அதே கல்லூரியில் ஜார்ஜினா பேராசிரியராக இருந்தாள். இளைஞனான மரியானோவுக்கு அவள் மேல் ஒரு மயக்கம் இருந்தது. அவளோ ஓர் ஆசிரியை. இவனோ மாணவன். இவர்களுக்குள் காதல் எப்படி சாத்தியப்படும்? எனவே, அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துவதில் அவனுக்கு மனத்தடை இருந்தது. இருந்தாலும் ஒருநாள், அவன் தன் காதலை வெளிப்படுத்தி ஒரு கடிதம் எழுதி ஒரு புத்தகத்தில் வைத்து அவளிடம் கொடுத்து விட்டான். அதன் பிறகு அவளை அவன் பார்க்கவே இல்லை. அந்தக் கடிதத்துக்கான அவளின் எதிர்வினையைக் கூட அவனால் பெற முடியவில்லை. அதற்குப் பின் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நடந்து விட்டன. அவள் தன் வேலையை விட்டு விட்டாள். அடோல்ஃபோவுடன் திருமணம் ஆகிவிட்டது. இவன் பொறியியல் படிப்புப் படித்துவிட்டு லாரி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். காலம்தான் எத்தனை விரைவாக ஓடிவிட்டது. அந்த நிகழ்வுக்குப் பின்னர் இப்போதுதான் அவளை மீண்டும் பார்க்கிறான். அவளும்தான்.

     இந்தச் சந்திப்பு இருவருக்குள்ளும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தி விடுகிறது. இருவராலும் ஒன்றும் பேச முடிவதில்லை. பக்கத்தில் சிடுமூஞ்சிக் கணவன் அடோல்ஃபோ. கூடவே இருக்கும் வயோதிகர் கேண்டிடோ. நடப்பதையெல்லாம் உற்றுக் கவனிக்கும் டிரைவர். இவர்கள் முன்னிலையில் என்ன பேசுவது. ஹலோ, சௌக்கியமா போன்ற முகமன் வார்த்தைகளுடன் அந்தச் சந்திப்பு அகாலமாக முடிந்துவிடுகிறது. இருவரும் மனச்சுமையுடன் அவரவர் வாகனங்களில் புறப்பட்டுப் போகின்றனர். அதன் பிறகு அவர்கள் தொடரும் தங்கள் பயணத்தில் வழி நெடுக அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். பெட்ரோல் பங்க், உணவு விடுதி, சிற்றூர், வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில்வே கேட், சவத்தை வேறு வண்டியில் மாற்றும் நிலையங்கள் என்று பல இடங்களில் அவர்களுக்கிடையே சந்திப்புகள் நிகழ்கின்றன. அந்த இடங்களில் முன்னாள் காதலிகளைச் சந்திக்கும் தருணங்களும் நிகழ்கின்றன. பழைய காதலிகள் ஜார்ஜினாவின் கணகளில் படாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு அவனைப் பிடித்து ஆட்டுகிறது.

     அடிக்கடி நிகழும் இந்தச் சந்திப்புகளின் போது இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் துண்டுத் துண்டாகத் தெரிந்து கொள்கின்றனர். இருவருக்குள்ளும் ஒளிந்திருந்த காதல் துளிர்விட ஆரம்பிக்கிறது.

     இதற்கிடையில் யோயிதாவின் சடலம் ஆங்காங்கே சவ நிலையங்களில் நிறுத்தப்பட்டு வேறு வேறு வாகனங்களில் மாற்றப்படுகிறது. அடோல்ஃபோ எரிச்சலும் கோபமுமாக இருக்கிறான். கார்ப்பயணத்தின் போது, ஜார்ஜினாவும் கிழவர் கேண்டிடோவும் சகஜமாகப் பேசிகொண்டே வருகின்றனர். கிழவர் யோயிதாவின் மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி உருகுகிறாள் ஜார்ஜினா. தன் கணவன் இப்படி இல்லையே என்று நினைக்கிறாள். கிழவரும் தன் மனைவி ஜார்ஜினாவும் இப்படி வழி நெடுகப் பேசியபடியே வருவது அடோல்ஃபோவுக்குப் பிடிப்பதில்லை.

போகும் வழிதோறும் தொண்ணூறுகளில் இருந்த கியூபா படம் பிடித்துக் காட்டப்படுகிறது. கியூபாவின் வீடுகள், சாலைகள், நிலப்பரப்பு ஆகியன அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாடுகளில் கியூபாவும் ஒன்று. கியூபாவில் உடனடியாக பணவீக்கம், உற்பத்தியில் தேக்கம், அத்தியாசவசியமான பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியன ஏற்படுகின்றன. கடைகளில் கியூபாவின் கரன்சியை யாரும் மதிப்பதில்லை. அமெரிக்க டாலர் இருந்தால்தான் பொருள் வாங்க முடியும். மக்கள் வேண்டிய உணவுப் பொருள் கிடைக்காமல் வாழைப்பழங்களைத் தின்று காலத்தை ஓட்டுகின்றனர். எங்கும் ரேஷன். எதிலும் ரேஷன். தொண்ணூறுகளில் கியூபா கடத்தல்காரர்களின் சொர்க்கமாக இருந்தது. படித்தவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காது. பயணம் செய்பவர்களுக்கு நேரத்துக்கு பஸ் கிடைக்காது. வழியில் வரும் லாரி, வேன் என்று எது கிடைக்கிறதோ அதில்தான் பிரயாணம் செய்ய முடியும்..  அது கூட நிம்மதியான பயணமாக இராது. பாதி வழியில், யாராவது ஓர் அரசு அதிகாரி நினைத்தால் போதும். போகும் வாகனத்தின் செல்லும் திசையை மாற்றிவிட முடியும். கிழக்கு நோக்கிப் பயணம் செய்பவன் தன் விருப்பத்துக்கு மாறாக மேற்கு நோக்கிப் பயணம் செய்ய வேண்டிய தர்மசங்கடம் நேரும். கியூப மக்களின் வாழ்க்கையில் அரசின் அதிகாரவர்க்கம் (Bureacracy) நுழைந்து எப்படியெல்லாம் மக்களை அலைகழிக்கிறது என்பதை இந்தப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.

இவர்கள் பயணம் தொடர்கிறது. மக்கள் ஆங்காங்கே அகதிகள் போல் திக்குத் தெரியாமல், திசை புரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் தெருவில் ஒரு ஆள் வெள்ளைப்பூண்டு விற்றுக் கொண்டிருக்கிறான். உடனே, அடோல்ஃபோவும், கார் டிரைவரும் அவனிடம் பூண்டு வாங்கிக் கொள்கின்றனர். எந்தப் பொருள் எங்கே கிடைக்கிறதோ அதை உடனே வாங்கிக் கொண்டால்தான் உண்டு. இப்போது விட்டால் அப்புறம் கிடைக்காது. இந்த அவலமான சூழ்நிலையில் மரியானோ - ஜார்ஜினாவின் காதல் பூத்துக் குலுங்குவது இயற்கையின் விசித்திரம்.

ஒரு துணிக்கடையில் பெண்களுக்கான அழகிய உடை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கிழவர் அதை ஜார்ஜினாவிடம் சுட்டிக் காட்டி, ’என்ன அழகான உடை, இதை யோயித அணிந்தால் எத்தனை அழகாக இருக்கும் தெரியுமா?’ என்கிறார். ஜார்ஜினாவுக்கு அந்த உடையைப் பிடித்து விடுகிறது. அவள் உடனே அதை வாங்கி அணிந்து கொள்கிறாள். இதைப் பார்த்த அடோல்ஃபோ, ‘என்ன சிங்காரம் வேண்டிக் கிடக்கிறது? என்று அவளைத்திட்டுகிறான். ‘எல்லாம் இந்தக் கிழப்பயாலால் வந்தது, என்று அவரைத் திட்டுகிறான். பின்பு தன் மனைவியை சாலையில் அடி அடி என்று அடித்து நொறுக்குகிறான். அப்போது அங்கே வரும் மரியானோ ஓடி வந்து ஜார்ஜினாவைக் காப்பாற்றுகிறான். கிழவர் காரை விட்டு இறங்கி விடுகிறார். தனியே ஹவானாவுக்குப் போக முடிவு செய்கிறார். பல வாகனங்களில் மாறி மாறி அவர் பயணம் செய்கிறார்.

போகு வழியில் ஒரு ரயில்வே கிராஸிங்கில் வேலை செய்யும் ஒரு பெண் மரியானோவிடம் நெருக்கமாக நடந்து கொள்கிறாள். இதைப் பார்க்கும் ஜார்ஜினா மனம் உடைந்து போகிறாள். அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு அழுதபடியே போகிறாள். மரியானோவும் செய்வதறியாது விழிக்கிறான்.

போகும் வழி முழுக்க அடோல்ஃபோவும், ஜார்ஜினாவும் சண்டை போடுகின்றனர். அவள் அணிந்திருக்கும் புதிய உடை நாகரிகமாக இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதைக் கழற்றி எறியுமாறு வற்புறுத்துகிறான். அவள் முடியாது என்று மறுக்கிறாள். ஒரு வழியாக கார் ஓரிடத்தில் உணவுக்காக நிற்கிறது. அப்போது அங்கு வரும் மரியானோ ஜார்ஜினாவிடம் கொடுக்குமாறு சொல்லி ஒரு கடிதத்தை டிரைவரிடம்  கொடுக்கிறான். அவன் வாங்கி வைத்துக் கொண்டு அடோல்ஃபோவுக்குத் தெரியாமல் ஜார்ஜினாவிடம் ரகசியமாகக் கொடுக்கிறான். அதைப் படிக்கும் ஜார்ஜினா ஒரு முடிவுக்கு வருகிறாள்.

கடைசியில் அவர்கள் ஹவானாவுக்கு வருகின்றனர். அங்கே இருக்கும் கல்லறை அலுவலகத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கே கிழவரும் வந்து சேர்கிறார். யோயிதாவின் சவப்பெட்டி ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் திறந்து பார்க்கும் கிழவர் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுகிறார். அனைவரும் கிழவரை நோக்கி ஓடி வருகின்றனர்.  மூடி திறந்த நிலையில் இருக்கும் சவப்பெட்டியை எட்டிப்  பார்க்கும் அடோல்ஃபோ திடுக்கிடுகிறான். ஏனெனில், அதில் யோயிதாவின் சடலம் இல்லை. வேறு யாரோ ஒரு ஆப்பிரிக்க மனிதனின் சவம் இருக்கிறது. அதைப் பார்த்துதான் கிழவர் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். யாரும் கவனிக்கவில்லை. யாரும் பார்ப்பதற்குள் சட்டென்று சவப்பெட்டியை மூடிவிடுகிறான் அடோல்ஃபோ. வழி நெடுக சவப்பெட்டிகளை மாற்றி மாற்றிக் கொண்டு வந்ததில் குளறுபடி நேர்ந்துவிட்டது தெரிகிறது. வழியில் எங்கோ பிணம் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. மயங்கி விழுந்த  கிழவரும் சுவாதீனம் வராமல் இறந்து விடுகிறார். பிணம் மாறியதற்கு ஒரே சாட்சி அவர்தான். அவரும் இறந்து விட்டார். தனது புதிய திட்டம் தோல்வி அடைந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் கமுக்கமாக இருந்துவிடுகிறான். பின்பு சவப்பெட்டியை அதற்குரிய காஸ்கட்டில் போட்டு மூடிவிடுகிறான்.

பிணம் மாறிவிட்ட உண்மையை மறைத்துவிட்டு தனது இரங்கல் உரையை நிகழ்த்துகிறான் அடோல்ஃபோ. யோயிதா எவ்வளவு சிறந்த பெண்மணி. அன்பான ஆத்மா. என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறான். பக்கத்திலேயே கிழவரின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. இருவரும் எவ்வளவு சிறந்த காதலர்கள். இறக்கும் போது இப்படி சேர்ந்து விட்டார்களெ என்றெல்லாம் பேசுகிறான். அப்போது மழை பிடித்துக் கொள்கிறது. அடாத மழையிலும் விடாது பேசுகிறான் அடால்ஃபோ.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, ஜார்ஜினா அங்கிருந்து தனியே புறப்பட்டுப் போகிறாள். அடோல்ஃபோவிடமிருந்து விலகும் மனோபாவம் அவளிடம் தெரிகிறது. சற்றுத் தொலைவுக்கு வரும் அவளை நோக்கி ஒரு சைக்கிள் வருகிறது. அதை மரியானோ ஓட்டி வருகிறான். அவளருகே வந்து நிறுத்துகிறான். இருவரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அதில் ஆயிரம் அர்த்தங்கள் தெரிகின்றன. மரியானோ ஜார்ஜினாவை முத்தமிடுகிறான். பின்னர், ஜார்ஜினா சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து கொள்ள மரியானோ ஒட்டிக்கொண்டு போகிறான். இவ்விதமாக இந்தப் படம் முடிகிறது. கியூபாவில் அதிகாரவர்க்கம் கொண்டு வரும் எந்தச் சீர்த்திருத்தமும் நடைமுறையில் வெற்றி அடைவதில்லை என்ற விமர்சனத்தை இந்தப் படம் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது.

கியூபாவின் மாபெரும் இயக்குநரான தாமஸ் ஏலியா தனது படங்களுக்காக இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இப்படத்தை இயக்கிய போது, படம் முடியும் தருவாயில் மரணமடைந்து விட்டார். எனவே, படத்தின் இணை இயக்குநரான யுவான் கார்லோஸ் டேப்லோ முடித்துத் தந்தார்.  இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவு செய்திருப்பது ஹான்ஸ் பர்மன். அவரது ஒளிப்பதிவு யதார்த்தமான வெளிச்சத்தில் கியூபாவைக் காட்டுகிறது. படம் முழுக்க நகைச்சுவை. கிண்டல் தெறிக்கிறது. தொண்ணூறுகளில் இருந்த கியூபாவின் அரசியல், பொருளாதாரச் சூழல், மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார். ஏலியா. அப்போதிருந்த கியூபாவில் உயிருள்ளவனும் நிம்மதியாக இல்லை; செத்தவனுக்கும் நிம்மதியான சவ அடக்கம் கிடைக்கவில்லை என்ற கடும் விமர்சனத்தை வைக்கும் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. வெனிஸ், சன் டான்ஸ், ஹவானா, ஹுயெல்வா சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றது.

ஒரு சோஷலிஸ தேசத்தை ஒரு சோஷலிஸ்டே இப்படி விமர்சிக்கலாமா என்று எழுந்த கேள்விக்கு, ஏலியா பின்வருமாறு பதில் சொன்னார்: ‘புரட்சி வளர்வதற்கும், நமது தேசம் சுபிட்சம் பெறுவதற்கும், விமர்சனம் கண்டிப்பாக அவசியம்’


நமது யுகத்தில் திரைப்படங்கள் வெறும் கதையையும் கேளிக்கைகளையும் மட்டுமே நம்பி இருக்கலாகாது. கதையை மீறிய சமூக அக்கறை மற்றும் உள்ளொளி பாய்ச்சும் தருணங்களையும் கொண்டதாக அது இருக்க வேண்டும். அதுதான் நமது காலத்தின் தேவை. இந்தப்படம் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. 

• • •

Friday, April 17, 2015

king jong un - N Korea இடதுசாரி மன்னரின் அந்தப்புரம்

king jong un
*
இடதுசாரி மன்னரின்
அ ந் த ப் பு ர ம்
*
எம்.ஜி.சுரேஷ்

ன்னராட்சிக் காலத்தில் பெண்கள் ஆணின் உடைமைகளாக, போகப் பொருள்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். இன்றைய நாகரிக யுகத்திலும் அந்தப்புரங்கள் இருக்கின்றன, அதில் பெண்கள் அலங்காரப் பதுமைகளாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் செய்தியாகும். எகிப்திய அதிபர் கடாஃபி கொல்லப்பட்டபோது,அவரது அரண்மனையிலிருந்து பல அழகான இளம்பெண்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதேபோல், முன்னாள் இத்தாலிய அதிபர் பெர்லுஸ்கோனி பல அழகிகளுடன் தகாத உறவுகள் வைத்திருந்ததால் பெயர் கெட்டுப்போய் மூலையில் உட்கார வைக்கப்பட்டார். இவர்களெல்லாம் முதலாளியவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். ஆனால், கம்யூனிஸ்டுகளின் தலைவர் ஒருவரே அப்படி இருக்கிறார் என்பது அதிர வைக்கும் விஷயமாக்கும்.

வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் யூன் தனக்கென்று ஓர் அந்தப்புரத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது நம்பமுடியாத உண்மையாகும். ஜாங் சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல. பாரம்பரியம் மிக்க கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய அப்பா முன்னாள் கொரியாவின் அதிபர். அவருடைய தாத்தாவும் முன்னாள் அதிபரே. 2010 ஆம் ஆண்டு இவரது தாத்தா காலமானபோது இவர் அதிபரானார். ‘இவர் தனது தாத்தா, அப்பா ஆகியோரைப் போலவே, கருத்தியல், தலைமைப்பண்பு, நற்குணங்கள், மன உறுதி ஆகியவற்றுடன் இருப்பதாக’ இவர் பதவி ஏற்றபோது கொண்டாடப்பட்டார். ஆனால், அந்தப்புரம் அமைக்கும் அளவுக்கு முற்போக்காக இருப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சோவியத் யூனியனில் புரட்சி நடந்து, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த போது அக்கம் பக்கத்திலிருந்த நாடுகளான வியத்நாம், கொரியா போன்ற நாடுகளும் கம்யூனிசத்தின் கைகளில் விழுந்தன. உலகமே கம்யூனிசமயமாகப் போகிறது என்ற எண்ணம் உலகத்தைக் கலக்கியது. கொரியாவின் முதல் அதிபராக கிம் இல் சுங் பதவி ஏற்றபோது உலகம் அவரை ஒரு லெனின் போல் பார்த்தது. கொரியாவை வறுமையிலிருந்து நல்ல நிலைமைக்கு அவர்தான் உயர்த்தினார். 46 ஆண்டுகளவர் வடகொரியாவின் அதிபராக இருந்தார். வெகு காலம் அதிகாரம் ஒருவர் கையில் இருந்தால் அது துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் இருக்கிறது போலும். பொதுவாக ஒரு மனிதன் ஒழுங்காக இருக்க விரும்பினாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை. அதன் விளைவாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

32 வயதான இவருக்கு ஓர் ‘இன்பக்குழு’ தேவையாம். அதற்காக, இளம் பெண்களை நியமிக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறார். ஊரில் உள்ள இளம் அழகிகளின் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். இத்தனைக்கும் இவர் ஏற்கெனெவே திருமணமானவர். ஒரு பாடகியை மணந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகவும் இருக்கிறார். இவர் அப்படிச் செய்வதில் திடுக்கிட ஒன்றும் இல்லை. இவர் தந்தையார் கிம் ஜாங் இல்லும் இப்படிப்பட்டவர்தான். அவர்காலத்தில் அரசு ஊழியர்களின் வேலை, தலைவருக்கு அழகான இளம் பெண்களை வேட்டையாடித் தருவதுதான். பழைய தலைவர் காலமானதும், அவரது ‘இன்பக்குழு’ இழுத்து மூடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இன்பக்குழுவின் சேவை உணரப்பட்டதால், அதற்கான வேலைகள் நடக்கின்றன.

இந்தப் பழக்கம் இவரது தாத்தா கொரிய அதிபராக இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது என்றும் ஒரு கருத்து உலவுகிறது. அவர் காலத்தில் இன்பக்குழுவைத் தேடிப்பிடிக்க ஒரு அலுவலர்குழுவே முழு வீச்சில் இயங்கியதாம். அவர்கள் ஆண்டுக்கு முப்பது, நாற்பது அழகிய பெண்களை அள்ளிக்கொண்டு வருவார்களாம். அவர்களுக்கு நேர்முகத்தேர்வின் மூலம் தகுதிக்கேற்ப பணிப்பெண், பாடகி, நடன மங்கை போன்ற பதவிகள் தரப்படுமாம். அவர்களில் மிக அழகான பெண் தலைவரின் ஆசை நாயகியாக அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ளப்படுவாளாம்.. புதிய பெண்கள் வர வர பழைய பெண்கள் கீழே இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவார்களாம். ஒவ்வொரு பெண்ணுக்கு 4,000 டாலர் சன்மானமும், வீட்டுக்கான பொருட்களும் வழங்கப்படுமாம்.
ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரம் கைக்கு வரும் போது மனிதன் ஒரேமாதிரிதான் நடந்து கொள்கிறான் என்று தெரிகிறது. அதிகாரம் ஓர் இடத்தில் குவியும் போது இது தவிர்க்க முடியாதுதான். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் அதிகார மையம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. சோவியத் உடைந்தது.

நாளைய தினம் வட கொரியாவில் மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தால் கம்யூனிசத்துக்கு எதிரான மக்கள் புரட்சி என்றே அது பார்க்கப்படும். அது கம்யுனிசக் கோட்பாட்டுக்கு நல்லதல்லவே.
எனவே, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு முக்கியமான விஷயம். இது பற்றி கம்யூனிஸ்டுகள் சிந்திக்க வேண்டும்.


Friday, April 10, 2015

ஜெயகாந்தன் 

நினைவுகள்

எம்.ஜி.சுரேஷ்
*

·       
இன்று தலித் இலக்கியம் என்று அறியப்படும் எழுத்துகளை 
அறுபதுகளிலேயே அவரால் எழுத முடிந்திருக்கிறது. 
அவரால் ஏக காலத்தில் தலித் சமூகம் சார்ந்த கதையையும், 
பிராமண சமூகம் சார்ந்த கதையையும் எழுத முடிந்தது 
என்பது குறிப்பிடத்தக்கது.
*


ஜெயகாந்தன் காலமாகிவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்த போது நான் ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டேன். சில வினாடிகளில் மீண்டேன். யோசித்துப் பார்க்கையில், அவருக்கும் எனக்குமான பரிச்சயம் என் மனத்தில் மின் வெட்டாய் ஒடி மறைந்தது.

அவர் மரணம் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. ஏனெனில், அவர் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர். தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சமூகத்தையும் செதுக்க வந்தவர். சமரனில் எழுதினாலும், குமுதத்தில் எழுதினாலும் ஒரே அடர்த்தியிலான கதைகளை எழுதியவர். தமிழ்ச்சூழலில் வெறும் எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். வாழ்நாளில் ஒரு தமிழ் எழுத்தாளன் அடையமுடியாத கௌரவங்களையும் அடைந்தவர். தமிழ்நாட்டைக் கடந்து வெளியேயும் புகழ் பெற்றவர். விருதுகள் அவர் காலடியில் வந்து விழுந்தன. அவர் ஒரு சகாப்தமாக இருந்தவர். இதற்கு மேல் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்? மரணம் என்பது ஒரு உயிரியல் மாற்றம். அது அவர் உடலுக்கு மட்டுமே தவிர, அவரது பிரதிகளுக்கல்லவே?

எழுபதுகளில் படித்து முடித்துவிட்டு, மேற்கொண்டும் படிக்க முடியாமல், வேலைக்கும் போகாமல் திரிந்து கொண்டிருந்த எனக்கு நூலகங்கள்தான் புகலிடங்களாக இருந்தன. எதிர்ப்படும் எந்தக் காகிததையும் கடித்துத் தின்றுவிடும் புத்தகப்பூச்சியைப் போல் நான் இருந்தேன். வெகு ஜன இதழ்கள், சிற்றிதழ்கள், நாளிதழ், வார இதழ் என்று எது கையில் கிடைத்தாலும் நான் விடுவதில்லை. முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை படித்து விடுவேன். பொருளாதாரச் சிக்கல்களில் நசுங்கிக் கொண்டிருந்த எனக்குப் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுதலையைப் பெற இந்தச் செயல்பாடு  உதவியது. எனக்கே தெரியாமல் வாசிப்பு ஒரு தெரபியைப் போல் எனக்குப் பயன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த வாசிப்பின் மூலம் பலவிதமான பிரதிகளை நான் கடந்து செல்ல நேர்ந்தது. பெரும்பாலோரைப் போலவே, நானும், கல்கி, அகிலன், நா.பா., சாண்டில்யன், ராஜேந்திரகுமார் (ராஜேஷ்குமார் அல்ல) ஸ்ரீவேணுகோபாலன், ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் அடர்த்தி குறைவான கதைகளைப் படித்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது.

என்னுடைய மாமா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என்று வாசிப்பவர். அவர் ஜெயகாந்தனின் ரசிகர். அவர் மூலம்தான் எனக்கு மார்க்ஸியமும் அறிமுகமானது. ஜெயகாந்தனும் அறிமுகமானார்.

நான் மாமா வீட்டில் வளர்ந்தேன். மாமா வாரா வாரம் ஜன சக்தி, தாமரையுடன் குமுதம், விகடனும் வாங்குவார். விகடனில் அப்போதெல்லாம் முத்திரைக் கதைகள் வெளிவரும்.  ஜெயகாந்தன் எழுதிய முத்திரைக் கதைகள் அடிக்கடி வரும். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை உரக்க வாசிக்குமாறு மாமா என்னிடம் சொல்லுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். நான் அருகில் தரையில் உட்கார்ந்து உரக்க வாசிப்பேன். வாசித்து முடித்ததும் அந்தக் கதையைப் பற்றி என்னிடம் பேசுவார். இப்படித்தான் ஜெயகாந்தனின் கதைகள் எனக்கு அறிமுகமாயின.

ஒருதடவை ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் ‘இருளில் ஒரு துணை’ என்ற கதை வெளியாகி இருந்தது. கோபுலுவின் கோட்டோவியம். இந்தக் கணத்திலும் விகடனின் அந்தப் பக்கம் என் நினைவில் துலக்கமாக இருக்கிறது. அந்தக் கதையையும் நான் மாமாவுக்காக உரக்க  வாசித்தேன். கதையை வாசித்து முடித்ததும் மாமா சொன்னார். ‘இது தியாகராஜ பாகவதரின் கடைசிக்காலம். அதை வைத்து எழுதி இருக்கிறார்’ இந்த விஷயத்தை இதைவிட யாரும் இவ்வளவு சிறப்பாக எழுதி விட முடியாது. நம்ப ஊரு மாக்ஸிம் கார்க்கி இவர்’ என்றார்.

அதன் பிறகு ஜெயகாந்தன் எழுதும் எழுத்து எந்தப் பத்திரிகையில் வெளி வந்தாலும், அதைத் தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன்.      அதன்பிறகு வேறு யார் கதைகளிலும் எனக்கு ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. பின்பு என் மாமா மூலம் ருஷ்ய இலக்கியம் எனக்குப் பரிச்சயமாயிற்று. மாக்ஸிம் கார்க்கி, செகாவ், கோகோல் தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் என்று எனது வாசிப்பு விஸ்தாரமானது.  அப்போதுதான் ஜெயகாந்தன் உலகத்தரத்தில் எழுதுகிறார் என்று தெரிந்து கொண்டேன். எனக்கும் அதுபோல் கதைகள் எழுதவேண்டும் என்று ஆசை வந்தது. இருந்தாலும் அதற்கான தைரியம் இல்லை.

தீபம், தாமரை போன்ற இதழ்களில் ஓரிரு கவிதைகள் எழுதினேன். அதன் மூலம் ஒரு நண்பர் எனக்குக் கிடைத்தார். அவர் பெயர் இளவேனில். அவர் கார்க்கி என்ற இடது சாரி இலக்கிய இதழ் நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு சிறுகதை கொடுக்குமாறு கேட்டார். நான் திகைத்தேன். நானா… சிறுகதையா, அதெல்லாம் நமக்கு வருமா.. என்று யோசித்தேன். அவர் கொடுத்த தைரியத்தில் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதை இளவேனிலுக்குப் பிடித்தது. அது உடனே வெளி வந்தது.

ஜெயகாந்தன் ஆரம்பத்தில் சமரன், சரஸ்வதி போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளில் கதைகள் எழுதினார்.  அவரது எழுத்துகள் கல்கி, விகடன் போன்ற பத்திரிகைகளின் கதைகளுக்கு மற்றமையாக (other) இருந்தன. பின்னர் அதே மாதிரி கதைகளை விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளிலும் எழுதி அனைவரையும் திடுக்கிட வைத்தார்.  இன்று தலித் இலக்கியம் என்று அறியப்படும் எழுத்துகளை அறுபதுகளிலேயே அவரால் எழுத முடிந்திருக்கிறது. அவரால் ஏக காலத்தில் தலித் சமூகம் சார்ந்த கதையையும், பிராமண சமூகம் சார்ந்த கதையையும் எழுத முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது. அதுவும் நிறைவேறியது.

இளவேனிலுக்கு ஜெயகாந்தனுடன் பரிச்சயம் உண்டு. அவர் மூலம் எனக்கு ஜெயகாந்தனின் பரிச்சயம் கிடைத்தது. ரஜினி ரசிகனுக்கு ரஜினியின் நேர்ப்பழக்கம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பிறகு அவரை அடிக்கடி நான் போய்ப்பார்க்க ஆரம்பித்தேன். என்னைத் தனியாக ‘சுரேஷ்’ என்று அழைத்துப் பேசும் அளவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்தும் கொண்டேன். அப்போது சென்னை, எல்டாம்ஸ் ரோடு முடியும் இடத்தில், சற்றுத் தள்ளி வலது புறம் இருந்த ஒரு வீட்டின் மாடியில் அவரது அலுவலகம் இருந்தது. அங்கு நான் தினமும் போய்விடுவேன். ம.வே.சிவகுமார், விமலாதித்த மாமல்லன், சி.ஏ.பாலன், எடிட்டர் லெனின், இயக்குநர் கே.விஜயன் என்று பலர் அங்கு வருவார்கள்.

எழுபதுகளில் சிறுபத்திரிகைகள் மூலம் சுந்தரராமசாமி, சா. கந்தசாமி, நகுலன், பிரமிள் போன்ற தீவிர இலக்கியவாதிகள் பலருடைய பிரதிகளையும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். க.நா.சு வின் எழுத்துகளின் பரிச்சயமும், அவரது நேர்ப்பழக்கமும் ஏற்பட்டன. ஜெயகாந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார் அவரைத் தீவிர இலக்கியவாதிகளுடன் சேர்க்க முடியாது என்றெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை. எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் ஜெயகாந்தன் ஜெயகாந்தன்தான் என்றே எனக்குத் தோன்றும். அவரது கதைகள் வெகுஜனப் பத்திரிகைகளுக்குத் தீனி போடுவதற்காக எழுதப் பட்டவை அல்ல. மாறாக, வெகுஜனப் பத்திரிகைகளின் தரத்தை உயர்த்திய கதைகள்.

அதன் பிறகு எனக்கு உலக இலக்கியம், பின் நவீனத்துவம் போன்ற பல விஷயங்கள் பரிச்சயமாயின. அவை என்னை மலைக்க வைத்தன. அப்போதும் கூட ஜெயகாந்தனின் மீதான எனது வியப்பு குறையவே இல்லை. அதுதான் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரின் ஆளுமை என்று எனக்குப்படுகிறது. இந்த ஆளுமை தனித்துவமானது. ஓரிரு வருஷங்கள் எழுதாமல் இருந்தாலே, ஒரு எழுத்தாளனை மறந்துவிடும் சமூகம் நம் தமிழ்ச் சமூகம். ஜெயகாந்தன் கிட்டத்தட்ட 40 வருஷங்கள் எழுதாமலேயே இருந்திருக்கிறார். இருந்தும் அவருக்கான புகழோ, பெருமையோ சற்றும் குறைந்துவிடவில்லை என்பது முக்கியமானது. மறுவாசிப்பில் புதுமைப்பித்தனையும், சுந்தரராமசாமியையும் குற்றம் சொல்பவர்கள் கூட ஜெயகாந்தன் மேல் குறைகள் எதும் சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது அரசியல் கொள்கைகள், சார்ந்து நின்ற கருத்தியல்கள் யாவும் சர்ச்சைக்குரியனவாக இருந்த போதிலும், அவரது கலை ஆளுமை எப்போதும் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது. அவரது எதிரிகள் கூட அவரை ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

ஜெயகாந்தன் திமிர் பிடித்தவர் என்றும், யாரையும் மதிக்காதவர் என்றும் அவருக்கு ஒரு படிமம் உண்டு. ஆனால், பழகுவதற்கு இனிய நண்பர் என்பதை அவரை நன்கறிந்த பலரும் அறிவார்கள். அவர் மனம் நுட்பமானது. எளிதில் எரிச்சலடைந்து விடுவார். பார்ப்பதற்கு அது கர்வம் போல் தோன்றும்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு சாகித்ய அகடமி பரிசு கிடைத்த போது அதைக் கிண்டல் செய்து ‘பிரம்ம தரிசனம்’ என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதினேன். ஜெயகாந்தன் கோப்படுவார் என்றே நினைத்தேன். பயந்து அவரைப் பார்க்காமல் இருந்தேன். நண்பர்களிடம் சொல்லி என்னை வரச்சொல்லி அனுப்பினார். அதை அவர் சகஜமாக எடுத்துக் கொண்டார். ‘நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர். இந்த மாதிரியெல்லாம் எழுதி உங்கள் திறமையை வீணாக்க வேண்டாமே’ என்று சிரித்துக் கொண்டே அன்புடன் சொன்னார்.

என்னுடைய கான்க்ரீட்வனம் என்ற நாவலுக்கு முன்னுரை எழுதினார். அதில் என்னை புதுமைப்பித்தனுடன் ஒப்பிட்டு எழுதி இருந்தார். என்னுடைய அட்லாண்டிஸ் மனிதன் என்ற நாவலை வெளியிட்டு என்னைப் புகழ்ந்து பேசினார். இதெல்லாம் அவர் எனக்குத் தந்த கௌரவங்கள்.

மௌனி எழுதிய ‘மாறுதல்’ என்ற கதை அவருக்குப் பிடிக்கும். மரணம் என்பது மாறுதல் என்ற கோணத்தில் மௌனி அந்தக் கதையை எழுதியிருப்பார். தான் விரும்பிய சிறுகதை கூறுவது போலவே, ஜெயகாந்தன் மரணம் என்ற மாறுதலை எய்திவிட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பொருள் ஸ்தூலமாக இருக்கிறது. அப்போது அது சொரூபம். பின்பு, ஸ்தூலத்தன்மையை இழக்கிறது. அப்போது அது அரூபம். சொரூபமாக இருந்த ஜெயகாந்தன் அரூபமாகிவிட்டார். இருத்தல் என்பது சொரூபமாக இருப்பது மட்டுமல்ல. அரூபமாக இருப்பதும் கூட. சாதாரண மனிதர்கள் சொரூபமாக இருக்கும்போது தெரிவார்கள். அரூபமானதும் காணாமல் போய்விடுவார்கள். அரூபமான பின்பும் இருப்பவர்கள் வெகுசிலரே. கம்பன். சேக்ஸ்பியர், செகாவ் ஆகியோரைத் தொடர்ந்து ஜெயகாந்தனும், தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து அரூபமாக  இருந்து கொண்டிருப்பார். அது போதும் என்று தோன்றுகிறது.

                     <><><><><>

Friday, April 3, 2015

Korean Cunema - Director Kim Ki Duk





ஒரு படகுப் பயணம்

எம்.ஜி.சுரேஷ்

* * *
யணங்கள் உயிருள்ள மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. திரைப்படக் கதாப்பாத்திரங்களுக்கும் உரியவையே. மனிதர்கள் பயணம் செய்வதைப்போல் அவர்களின் நிழல் உருவங்களும் பயணம் செய்கின்றன என்பது சுவாரஸ்யமானது. மக்கன்னாஸ் கோல்ட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முதல் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்று எல்லாக் கதாபாத்திரங்களும் குதிரைகளில் ஏறிப் பயணம் செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ‘பேக் டு தி பியூச்சர்’ என்ற படத்தில் வரும் கதாநாயகனும் அவனது குருவும் கால யந்திரத்தில் ஏறி இறந்த காலம், எதிர்காலம் என்று எல்லாக்காலங்களுக்கும் மாறி மாறிப் பயணம் செய்தார்கள். இன்னும் பல படங்களில் பயணங்கள் பலவிதத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

     நவீன கொரியத் திரைப்படத்தின் முகத்தை மாற்றியவர்களில் ஒருவர் கிம் கி டுக். தீவு (the isle), கனவு (Dream), த்ரீ அயர்ன் (3 iron), பைட்டா (Pieta) போன்ற நூதனமான, திகைக்க வைக்கும் படங்களை இயக்கியவர் அவர். ஏககாலத்தில் இரண்டு சிறந்த இயக்குநருக்கான விருதுகளைப் பெற்றவரும் கூட. அவர் ஒரு படம் எடுத்தார். அதில் மூன்றே கதாபாத்திரங்கள். ஒன்று, அறுபது வயதான ஒரு கிழவர். இரண்டு. பதினாறு வயதான இளம்பெண். மூன்று, ஒரு படகு. இந்த மூன்றே கதாபாத்திரங்களை வைத்து ஒரு  அற்புதமான படத்தை கிம் கி டுக் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். இது ஒரு பயணம். படகுப் பயணம். கிழவரும், இளம் பெண்ணும் சேர்ந்து பயணிக்கும் பயணம். இந்தப் பயணம் அவர்கள் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணத்துக்கு ஒரு குறியீடாக இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் வில் (the bow).

     எப்போதும் சிடுசிடுக்கும் கிழவர். சதா புன்னகையை அணிந்து வலம் வரும் இளம் பெண். இவர்கள் இருவரையும் சுமக்கும் படகு. அந்தப் படகு நாற்பது அடி நீளம் கொண்டது. ஒற்றை அறை வசிப்பிடம் போல் படுக்க, சமைக்க, பொருட்களைச் சேமித்து வைக்கக் கூடிய அளவுக்கு இடம் கொண்டது.  அந்தக் கிழவர் வில் வித்தையில் தேர்ந்தவர். குறி தவறாமல் அம்பு ;எய்வதில் வல்லவர். அந்தப் பெண் கிழவருக்கு உதவியாக இருக்கிறாள். அந்தக் கிழவரிடம் வில்லைப் பயன்படுத்துவது தவிர, இன்னொரு திறமையும் இருக்கிறது. அது குறி சொல்வது. அவரிடம் குறி கேட்பதற்காகப் பலர் வருவதுண்டு. அவர் சொல்வது பெரும்பாலும் பலிப்பதால் அவரை பலர் மதிக்கிறார்கள். தவிரவும், கிழவருக்கு வேண்டிய பொருட்களை விற்பதற்கும் வணிகர்கள் வருவதுண்டு. இவரைப் பார்க்க வரும் மனிதர்கள் அந்தப் பெண்ணையும், கிழவரையும் வைத்து விவாதிப்பார்கள்.

     ’அந்தப் பெண் யாரோ. கிழவன் அவளைக் கடத்திக் கொண்டு வந்துவிட்டான்’

     ’ஆறு வயதாக இருக்கும் போதே அவளின் பெற்றோரிடமிருந்து அவளைக் கொண்டு வந்து விட்டான். அவளது பெற்றோர் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்’

     ’ஒருவேளை அவள் அவனது மகளாக இருப்பாளோ?’

     என்றெல்லாம் வதந்திகள் கால் முளைத்து நடமாடும்.

     கிழவரின் மனத்தில் இருப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

     படம் ஆரம்பித்ததும் வரும் முதல் ஷாட். ஒரு வண்ண ஓவியம் காட்டப்படுகிறது. கொரியத் தொன்மம் சார்ந்த ஓவியம். அந்த ஓவியம் ஒரு மரச்சுவரில் வரையப்பட்டிருப்பது தெரிகிறது. அப்போது க்ளோஸ்-அப்பில் ஒரு கை ஃபிரேமினுள் எட்டிப்பார்க்கிறது. அந்தக் கையில் ஒரு வில்லின் நுனி இருக்கிறது. அந்தக் கை வில்லில் நாணைப் பூட்டுகிறது. பின்பு நாணை ஏற்றிக் குறி பார்க்கிறது. தொடர்ந்து ஒரு கிழவரின் முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. பின்பு அந்தக் கிழவர் அந்த வில்லில் ஒரு சிறு தோல் கருவியை மாட்டுகிறார். ஏக காலத்தில் வில்லாகவும், வாத்தியமாகவும் இயங்கும் ஒரு கருவி அது என்பது பார்வையாளனுக்குப் புரிந்து விடுகிறது. கிழவர் இப்போது அந்தக் கருவியை ஓர் இசைக்கருவியாகப் பயன்படுத்துகிறார். அவர் இசைக்க அந்த இசையின் பின்னணியில் ஓர் அழகான இளம்பெண்ணின் முகம் காட்டப்படுகிறது. புன்னகை தவழும் முகம். ஒரு தேவதையைப் போன்ற வசீகரம். அந்தப் பெண் தன் கண்களுக்கருகே மூன்று வண்ணப்புள்ளிகளை இட்டுக் கொள்கிறாள். மாசு மருவற்ற தனது முகத்தின் வாயிலாக ஒரு புன்னகையை வெளியிடுகிறாள்.

     அந்தப் படகின் பக்கவாட்டில் ஒரு நீண்ட கயிறுகளால் பிணிக்கப்பட்ட ஓர் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. அதில் உட்கார்ந்து ஆடினால் கால்கள் தண்ணீரில் படும். கால்களை அதில் அளைந்தவாறே ஊஞ்சலாடுவது அவளுக்குப் பிடிக்கும்.

     அவ்வப்போது அந்தப் படகை நோக்கிப் பல படகுகள் வரும். அவற்றில் யாராவது அந்நியர்கள் வந்து போவார்கள். கிழவரிடம் குறி கேட்பதற்காகவோ அல்லது அரிசி, பருப்பை விற்கவோ அவர்கள் வருவார்கள். அவர்கள் இந்தப்பெண்ணைச் சீண்டி கேலி பேசுவார்கள். கிழவருக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. அவர்கள் அருகே அம்பு எய்து எச்சரிப்பார். அவர்கள் பயந்து அடங்கிப் போவார்கள்.

     இப்படியே காலம் போய்க்கொண்டிருக்கிறது.

     ஒரு நாள் சிலர் கிழவரைத் தேடி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணிடம் சீண்டி விளையாடுகிறான். கிழவர் அம்பு எய்து அச்சுறுத்துகிறார். அப்போதுதான் அவர்கள் பேச்சில் கிழவர் இந்தப்பெண்ணை அவளது 17ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ளப்போகும் செய்தி பற்றிப் பேசுகிறார்கள். அவர்களில் ஒருவன் கிழவரிடம் குறி கேட்கிறான்.

     கிழவர் குறி சொல்லும் விதம் அபாயகரமானது.

     முதலில் அந்தப் பெண் படகின் பக்கவாட்டில் தொங்கும் ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து ஆட ஆரம்பிப்பாள். அவள் முன்னும் பின்னும் போய் போய் வருவாள். படகின் பக்கவாட்டுப் பகுதி பின்னணியாகத் தெரியும். அந்தப் பின்னணியில் ஒரு பெரிய புத்தரின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். கிழவர் அவளுக்கு எதிரே போய் வேறொர் படகின் மேல் ஏறி நிற்பார். அங்கிருந்து தனது வில்லிலிருந்து அம்புகள் எய்வார். அந்த அம்புகள் அந்தப் படத்தின் எந்தஎந்தப் பகுதிகளில் பாய்ந்திருக்கிறதோ அதையொட்டி குறி சொல்லுவார்.

     கிழவர் தினமும் அந்தப் பெண்ணை இரவில் குளிப்பாட்டுவார். பின்னர் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு காலண்டரில் ஒரு நாள் கழிந்ததற்கு அடையாளமாக அந்தத் தேதிக்குப் பெருக்கல் குறியிடுவார்.

     ஒரு நாள் கிழவர் மணப்பெண்ணுக்கான காலணி ஒன்றை வாங்கி வந்து அலமாரியில் வைத்துப் பூட்டுகிறார். அவர் முகம் மகிழ்ச்சியில் ஆழ்கிறது.

     ஒரு சமயம் ஒரு படகு வருகிறது. அதில் வரும் இரு அயோக்கியர்கள் கிழவரைக் கட்டிப்போட்டுவிட்டு, அந்தப் பெண்ணைக் கெடுக்கத் திட்டமிடுகிறார்கள். அந்தப் பெண் புத்திசாலித்தனமாக அவர்களிடமிருந்து தப்பி அவர்களை அம்புகள் எய்து காயப்படுத்தி விடுகிறாள். தன்னையும் கிழவரையும் காப்பாற்றுகிறாள்.

     ஒரு நாள் ஒரு படகு வருகிறது. அதில் சிலர் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அழகான இளைஞன். அவன் பால் இவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவனையே ஆசையாகப் பார்க்கிறாள். இதை கிழவர் கவனிக்கிறார். அவருக்கு இது எரிச்சலூட்டுகிறது.

     அந்த இளைஞன் ஒரு வாக்-மேன் வைத்திருக்கிறான். அதை அவள் காதில் வைத்துப் பாட்டுக் கேட்குமாறு செய்கிறான். கிழவர் அந்த வாக்-மேனைப் பிடுங்கி எறிகிறார். அவள் கோபம் கொள்கிறாள். அந்த இளைஞனுக்கும் அவளுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. கிழவரை விட்டு விட்டு அவனுடேயே ஓடிபோக அவள் தயாராகிறாள். உடனே கிழவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். உடனே மனம் மாறி அந்தப் பெண் கிழவரிடமே திரும்பி வந்து அவரையே திருமணம் செய்து கொள்கிறாள். அந்த இளைஞன் விரக்தி அடைந்து அவளை விட்டுவிட்டு தன் படகில் போகிறான். அந்தக் கிழவரோ கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான். படகில் அவள் மட்டும் தனியெ இருக்க, படகு மூழ்குகிறது. அந்த இளைஞன் இதைக் கவனியாமல் போய் விடுகிறான். அவள் அவன் போன திசையிலேயே கையசைத்தபடியே படகோடு சேர்ந்து கடலில் மூழ்கி விடுகிறாள்.

     இவ்விதம் இந்தப் படம் முடிகிறது.

     கிம் கி டுக்கின் படங்கள் குறைவாகப் பேசுவது வழக்கம். வழக்கம் போலவே இந்தப் படத்திலும் கதாபாத்திரங்கள் குறைந்த அளவு வசனங்களே பேசுகின்றன. கிழவராக வரும் சியாங் ஹ்வாங் ஜியோன் மிக அழகாக நடித்திருக்கிறார். சின்னப் பெண்ணாக வரும் யியோ ரியும் ஹான் கண்கொள்ளா அழகி. அவள் சிரிக்கும் போது அவள் உதடுகள் மட்டுமல்ல, கண்களும் சேர்ந்து சிரிக்கின்றன.

     இந்தப் படத்தைப் பற்றி விமர்சகர்கள் பேசும் போது இதை பௌத்தத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். வில் தியானம் செய்வதற்கான குறியீடு. கிழவர் ஆன்மா. பெண் பர்ம்பொருள். இரண்டும் இணையத் துடிக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு இது வேறு மாதிரி தோன்றுகிறது.

     1962 ஆம் ஆண்டு ரோமன் போலான்ஸ்கி ஒரு படம் எடுத்தார். அதன் பெயர் நைஃப் இன் தி வாட்டர். அதுவும் இதே போல் பயணம் சார்ந்த படமே. அதிலும் ஒரு படகு வரும். அதிலும் ஒரு வயதான மனிதரும் அவரது இளம் மனைவியும் வருவார்கள். அதிலும் ஒரு இளைஞன் வருவான். அந்தப் படத்தில் அந்த இளம்பெண் அந்த இளைஞனுடன் உடலுறவு கொள்வாள். இந்தப் படத்தில் இந்தப் பெண் தன் கணவனுடன் சேர்ந்து சாகிறாள். போலான்ஸ்கியின் படம் மேற்கத்தியப் பெண்ணின் மனநிலையைக் காட்டுகிறது. இந்தப் படம் கிழக்கத்திய மனநிலையைக் காட்டுகிறது. அந்தப் படத்துக்கான கீழை நாட்டு எதிர்வினைதான் இந்தப் படமோ என்று சொல்லத்தோன்றுகிறது.

                         #########


Friday, March 27, 2015

on every saturday

மலேஷியக் கவிஞர் 
கோ. புண்ணியவானின் 
கவிதைத் தொகுப்பு
*

                 இடறிய விரல்கள்
எம்.ஜி.சுரேஷ்
 * * *

ந்தக் கவிதைத் தொகுப்பு என் கைகளில் தன்னை விரித்துக் கொண்டு என்னை உற்றுப் பார்க்கிறது. பதிலுக்கு நானும் பார்க்கிறேன்.பின்பு, கவிதைகளை வாசிக்கவும் செய்கிறேன். எனக்குள் தோன்றுகிறது.

கவிஞர் புண்ணியவான் பல ஆண்டுகளாகத் தமிழில் இயங்கி வருபவர். சிறப்பான கவிதைகள் பல எழுதியவர். ஆனால் அவரது கவிதைகளையும் அவரது பெயரையும் இத்தனை காலம்  நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இந்த எண்ணம் வந்ததும் நான் வெட்கமடைகிறேன்.

இது நேர்ந்தது எதனால்?

கணங்கள் தோறும் கவிதைகள் மனசில் சூல் கொள்கின்றன. அவற்றில் சில கருவாகி, உருவாகி கை நழுவி வெளியே வந்து காகிதத்தில் விழுந்து திருவாகின்றன.   வெளிப்படுத்தப்பட்ட கவிதைகள் தனது வாசகனைத் தேடிப் படபடக்கும் தாள்களில் காத்திருக்கின்றன. அவற்றில் சில தன்னைத் தேர்ந்து கொள்ளும் வாசகனின் மனதைத் தொடுகின்றன. அவை அவர்களுக்காக எழுதப்பட்டவை.  சில தொடாமல் எட்டி நிற்கின்றன. ஏனெனில், அவை அவர்களுக்காக எழுதப்படவில்லை.  எனினும், கவிஞர்கள் பலர் முகம் தெரியாத வாசகனுக்காகத்  தங்கள் கவிதைகளைத் தொடர்ந்து எழுதவே செய்கின்றனர்.

ஒவ்வொரு கவிதைக்கும் அதை உருவாக்கிய  ஒரு கவிஞன் இருப்பதைப் போல், அதை வாசிப்பதற்கென்றே ஒரு வாசகனும் இருக்கிறான் என்பது முக்கியமானது. கவிதையும் அதற்குரிய வாசகனும் உடனே சந்திக்கலாம்; தாமதமாகச் சந்திக்கலாம். உரிய காலத்தில் ஒரு நல்ல கவிதை அதற்குரிய வாசகனைச் சேர்ந்தே தீரும். குறுந்தொகைக் கவிஞர்கள் உடனே அடையாளம் காணப்பட்டார்கள். திருவள்ளுவரும்,  திருத்தக்கத் தேவரும் தாமதமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள். இது கவிதையின் விதி; கவிஞனின் விதி.  இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது என்னுள் எழும் உணர்வுகள் இவை. பிரமிளையும், ஞானக்கூத்தனையும் உடனே அடையாளம் கண்ட நான் இப்போது சற்று தாமதமாக ஒரு திருத்தக்கதேவரைக் கண்டு கொண்டிருக்கிறேன். அவர் தான் கோ.புண்ணியவான்.

கவிஞர் கோ. புண்ணியவானின் பெயரும், அவரது கவிதைகளும் எனக்கு ‘மௌனம்’ இதழ் மூலமே பரிச்சயம். அவரது எந்த ஒரு கவிதையும் நன்கு எழுதப் பழகிய ஒரு கையிலிருந்து தான் வெளி வந்திருப்பதைக் கால் பரப்பி நின்று சொல்லும். சில உரத்துப் பேசும்; சில நெகிழ்ந்து உருகும்; சில எள்ளி நகையாடும்; வேறு சில குமுறும். எண் சுவைகளைப் பற்றித் தண்டி அலங்காரம் பேசுகிறது. எண் சுவைகளில் கோ. புண்ணியவானின் கவிதைகள் பேசுகின்றன. பொதுவாகவே, பெரும்பாலான  கவிஞர்கள் தங்களை ஏதாவது ஒரு பாணிக்குள் போட்டு அடைத்துக் கொள்வார்கள். அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பார்கள். விக்கிரமாதித்யனின் கவிதைகள் தன்னிரக்கத்தை நாடி நிற்கும். ஞானக்கூத்தனின் பாணி அங்கதம். வண்ணதாசனின் கவிதைகள் பார்க்கும் எதையும் வியந்து பார்க்கும்; விதந்தோதும்.ஏங்கும்.  பிரமிளின் கவிதைகள் படிமங்களில் மூழ்கிக் கிடக்கும். கோ.புண்ணியவானின் கவிதைகள் தங்களை எவ்வித அடைப்புக்கும் அடைத்துக் கொள்ளாதவை என்பது சிறப்பு.விலகி நின்று உலகைப் பார்ப்பது அவரது தன்மை.  அவரைப் போலவே அவரது கவிதைகளும் வழக்கமான தன்மைகளிலிருந்து  விலகி நிற்பவையே. இவரால் வித விதமாகச் சிந்திக்க முடிகிறது;  தினுசு தினுசாக எழுத முடிகிறது. எள்ளல் தன்மையுடனும் (என் அரிசி), தார்மீகக் கோபத்துடனும் (எதேச்சாதிகாரம்), பரிவுடனும் (தாயுமான மண்), குறும்புடனும் (பகிரங்கம்) எரிச்சலுடனும் (இன்னும் வேண்டுமா ரத்தம்), அங்கதச்சுவையுடனும் (கடவுள்) இவரால் எழுத முடிகிறது. இந்தத் தன்மையே இவரை மற்ற கவிஞர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது.

தற்காலக்கவிஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் பின் பற்றி எழுதுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் குருநாதர் என்றாலும் அவர் சாயலில் தன் குழந்தை இருப்பதை எந்த ஒரு சிஷ்யனும் விரும்பக்கூடாது தானே? ஆனால், இவர்கள்  விரும்புகிறார்கள். இது போன்ற அசட்டுத்தனங்கள் புண்ணியவானிடம் இல்லை. தனது ஆதர்ச கவிஞர்களின் சாயல் அவர் கவிதைகளில் இல்லை. இது ஆறுதல் தருகிறது.

கவிதை என்பது கவிஞன் என்ற கடவுளால் அருளிச்செய்யப்படும் தெய்வீகக் கோட்பாடு அல்ல. மாறாக அது ஒரு பன்முகப்பட்ட பரிமாணங்கள் கொண்ட வெளியாகும். அங்கே பலதரப்பட்ட சிந்தனைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. இன்றைய பின் நவீன சூழலில் ‘நகரும் நகரம்’, ‘அலையும் கதவு’ என்றெல்லாம் நவீன காலத் தலைப்புகளை வைத்துப் பின் நவீன வாசகனை ஏமாற்ற முடியாது. நமக்குக் கறாரான சொற்கள் தேவை. வார்த்தை விரயம் தவிர்க்கப்படவேண்டும். வாசகனை மகிழ்விக்க இயல்பாகவே கவிதை தன்னுள் பொய்களைச் சுமக்கிறது. அது போதாமல் மேலும் மேலும் படிமங்களின் மூலம் கவிதையின் மேல் கூடுதல்  சுமைகளை ஏற்றுவது கவிதை தள்ளாடுவதில் போய் முடியும்.
எடுத்துக் காட்டாக, நிலவொளி அழகானது என்ற வாக்கியத்தைப் பார்ப்போம். அந்த வாக்கியத்தில்  இருக்கும் நிலவொளி என்பது உண்மை. அழகானது என்பது பொய். நிலவொளி பார்ப்பதற்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அதன் அழகுதான் என்று கவிஞன் நம்புகிறான். அந்த நம்பிக்கையைத் தன் கவிதையில் விதைக்கிறான். அவனது நம்பிக்கைக்கான மதிப்பீடு ஏற்கெனவே சமுகத்தால் அவனுக்கு விநியோகம் செய்யப்பட்டது, அதை இவன் மறு விநியோகம் செய்கிறான். அவ்வளவுதான். எனவே தான் பின் நவீனத்துவம் படிமங்கள் நீக்கிய, மிகை உணர்ச்சிகள் இல்லாத, கறாரான சொற்கள் கொண்ட (அப்படிப்பட்ட சொற்கள் இல்லைதான் எனினும்) கவிதைகளைக் கோருகிறது. புண்ணியவானின் கவிதைகள் படிமங்கள் அற்று,மிகை உணர்ச்சி இல்லாமல், தோளில் கை போட்டுக் கொண்டு உரையாடும் தோழனைப் போல் பேசுகின்றன. கவிதையைத் தனக்கும் தனது வாசகனுக்கும் இடையேயான ஓர் அந்தரங்கமான உரையாடலாக அவர் மாற்றிக் காட்டுகிறார்.

’ஒவ்வொரு அரிசியிலும் அது இன்னாருக்கு என்று அவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது’ என்பது ஓர் உருதுப் பழமொழி.  அதை அங்கதம் தெறிக்க இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா என்று திகைக்க வைக்கிறார் கவிஞர்.

எனக்கான அரிசியில் என் பெயர்
எழுதப்பட்டிருக்கிறதாம்
எந்த உலையில் யார் வாயில்
போய்த்தேடுவது?

என்று ஆரம்பித்து கவிதை நெடுகக் கேள்விகள் கேட்டுத்  திகைப்பை ஏற்படுத்துகிறார்.  அதே போல் ‘கொப்பரைசில்’ நல்ல அங்கதக்கவிதை. பக்தன் கடவுளுக்காக உடைத்த தேங்காய்ச் சில் அவர் காலில் பட்டு கடவுளுக்கு செப்டிக் ஆகி விடுகிறது. கோபிக்கும் கடவுளிடம் பக்தன் மன்னிப்புக் கோருகிறான். அதற்குப் பிரீதியாக அடுத்த முறை ஆயிரம் தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக் கொள்கிறான். இது போன்ற அங்கதம் புதுமைப்பித்தனை நினைக்க வைக்கிறது.

‘நெரிசலின் இடுக்கில்’, ‘புதிர்’, ‘மௌனவதம்’, ‘திலகம்’, ‘விழுங்கப்பட்டவை’ போன்ற கவிதைகள் வாழ்க்கையின் அபத்தத்தையும், அதன் குரூரத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றன. இந்தக் கவிதைகளில் இருத்தலியல் (existentialism) தன்மை இருக்கின்றன எனலாம்.

பல கவிதைகளில் கடவுளை வம்புக்கிழுக்கிறார் புண்ணியவான். பக்தனின் கொப்பரை சில்லினால் செப்டிக் ஆன கடவுள், தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட கடவுள், வரும் வழியில் குண்டு பாய்ந்து இறந்த கடவுள் என்று கடவுள் இவரது அங்கதத்தில் சிக்கிப் படாத பாடு படுகிறார்.

எங்கோ பட்டரைக் கல்லில் அடிபடுகிறது இரும்பு; அதன் அதிர்வில் இங்கே  அதிர்கிறது  என் வீட்டு ஜன்னல் கதவு. இது போல் அதிர்வதுதான் கவிமனம். அத்தகைய கவிமனம் கவிஞர் புண்ணியவானுக்கு வாய்த்திருக்கிறது. அதற்கு இத்தொகுப்பில் உள்ள கவிதைகளே சான்று.

இத்தொகுப்பிலேயே மிக முக்கியமான கவிதையாக நான் கருதுவது, ‘தமிழன்’ என்ற தலைப்பில் இவர் எழுதி இருக்கும் கவிதையே.  இது இவர் தொகுப்பில் உள்ள கவிதைகளில்மட்டுமல்ல;  சிங்கப்பூர், மலேசிய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் இதுவரை எத்தனை வந்திருக்குமோ அத்தனைத் தொகுப்புகளிலும் வெளிவந்திருக்கும் அத்தனை கவிதைகளிலும் (நான் படித்த வரைக்கும்) சிறந்த கவிதையாக இதுதான் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழில் இதுவரை எழுதப்பட்ட ஹைகூ கவிதையிலேயே சிறந்த கவிதையாக,

நள்ளிரவில்தான் பெற்றோம்
இன்று வரை விடியவில்லை

என்ற கவிதையைத்தான் சுட்டிக் காட்டுவார்கள். அது போல் மலேசிய-சிங்கப்பூர் கவிதைகளிலேயே சிறந்த புதுக்கவிதையாக, ‘தமிழன்’ என்ற  இந்தக் கவிதையை நான் பரிந்துரை செய்கிறேன். ஒரு பின் நவீன கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இக்கவிதையை ஓர் எடுத்துக் காட்டாகக் கூற முடியும்.

’நல்ல கவிதை எது?’ என்ற கேள்விக்கு ஒரு முறை இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியன் பதில்  சொன்னார்: ’படித்தவுடன் மறந்து விடுவது மோசமான கவிதை; படித்த பின் பலகாலம் நினைவில் தங்கி இருப்பது நல்ல கவிதை’ அவரது அளவுகோளின் படி பார்த்தால் கவிஞர் புண்ணியவான பல நல்ல கவிதைகளை இந்தத் தொகுப்பில் எழுதி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

                                @@@@@@

Friday, March 20, 2015

முனைவர் சிரிஷாவின் ஆய்வுகள்

ஆய்வுக் கட்டுரைகள்
வெறுமைவெளியும்
பன்மைமொழியும்
முனைவர் தா.அ.சிரிஷா

 அணிந்துரை
கவனத்தை ஈர்க்கும்

முக்கியமான வரவு

எம்.ஜி.சுரேஷ்
* * *

பெரும்பாலான இந்தியப் பெண்களைப் போலவே, குடும்பம் என்ற நிறுவனத்தின் வன்முறையில் சிக்குண்டு, வீட்டு வேலை, வெளியில் போய் பொருள் நிமித்தம் செய்யும் வேலை ஆகிய இரு வேடம் தரித்து ஓர் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்காக ஆண்களால் சிந்தித்து விநியோகிக்கப்படும் பெண்ணியம் சார்ந்து மதிப்பீடுகளை எதிர்கொள்ளும் வாழ்க்கை இந்நூலாசிரியர் திருமதி சிரிஷாவினுடையது.

‘வரலாற்றில் பெண்கள் இரண்டாவது பாலினமாக்கப்பட்டார்கள். ஆண்களால் வடிவமைக்கப்பட்ட உலகில் பிரவேசிக்கும் பெண்கள் ஆண்களால் வரையறுக்கப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில் பெண்களான நாங்கள் எவ்வாறு சுதந்திரமானவர்களாக இருக்கமுடியும்?’ என்று தனது நூலான ‘செகண்ட் செக்ஸில்’ கேள்வி எழுப்பினார் பிரெஞ்சு பெண்ணியவாதியான சீமோன் தி புவா.
    
’குடும்பம் என்பது ஓர் ஆலமரம்’, ‘உறவுகளுக்காகச் சுயத்தைத் தொலைத்து வாழும் வாழ்க்கை இனிப்பது’ ‘கைவேலைகளும், சமையலும் ஒழிந்த நேரத்தில்தான் படிப்பதற்கு யோசிப்பதற்கும் நொடிப்பொழுதுகள் வாய்க்கின்றன’ என்றெல்லாம் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒட்டகம் முள் செடிகளை விரும்பிச்சாப்பிடும். முள் செடியில் உள்ள முட்கள் ஒட்டகத்தில் உதடு, ஈறு, நாக்கைக் கிழிக்கும். இருந்தாலும் ஒட்டகம் முள் செடியைத் தான் விரும்பிச்சாப்பிடும்.  இதுபோல்தான் நம் நாட்டுப் பெண்கள் குடும்ப நிறுவனம் என்ற நுகத்தடியில் சிக்கிக்கொண்டு, அல்லல் பல இருப்பினும் அதையே ஏற்றுக்கொண்டு சுவைத்தபடி  வாழ்ந்து மகிழ்கிறார்கள். ஒரு முதலாளிய சமூகத்தில் இதைத் தவிர்க்க இயலாதுதான். ஏன், சோவியத் யூனியனும் கூட இதற்கு விலக்கல்ல என்பதை சோவியத் யூனியனில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் புரட்சிக்காரியான அலெக்சாண்ட்ரா கொலொண்டாயின் பதிவுகள் நிரூபிக்கின்றன. இருப்பினும் அவர்களுக்குள் இயங்கும் பெண்மனம் தங்களை ஆளும் ஆணாதிக்கத்தின் மீதான விமர்சனங்களை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றன. அத்தகைய முயற்சிகளின் நீட்சியாகவே இந்தக் கட்டுரைத் தொகுப்பினை நாம் பார்க்க முடியும்.

     இத்தொகுப்பில் 16 கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பெண்ணியம் சார்ந்தே இயங்குகின்றன. அகநானூற்று மருதத் திணைப் பாடல்களாக இருந்தாலும் சரி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான, ‘சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுப்பாக இருந்தாலும் சரி அனைத்திலும் ஆணாதிக்கத்தின் தடித்தனத்தை நோக்கி பெண்மனத்தின் சுட்டு விரல் உயர்வதை நம்மால் கவனிக்க முடிகிறது.

     இத்தொகுப்பின் முதல் கட்டுரை, அகநானூற்றில் இடம் பெற்றுள்ள மருதத் திணைப் பாடல்களில் தலைவி எவ்விதம் தலைவனை விமர்சிக்கிறாள் என்பது குறித்துப் பேசுகிறது.

‘ஆண்மக்களுக்கு சமூகத்தில் இருந்த கட்டற்ற பாலியல் சுதந்திரமும், அதனைத் தட்டிக் கேட்க இயலாத பெண்களின் இறுக்கமான சமூக மௌனமும் இப்பாடல்களில் புதையுண்டுள்ளன’ என்கிறார் ஆசிரியர்.

பண்டைய சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகம். அங்கே பெண் என்பவள் ஆணின் உடைமைப் பொருள் மட்டுமே. ஓர் ஆணுக்குப் பெருமை அவன் எத்தனை வேலி நிலம் வைத்திருக்கிறான், எத்தனை ஆடு, மாடுகள் வைத்திருக்கிறான் என்பது போல் எத்தனை மனைவிகள் வைத்திருக்கிறான் என்பதுடன் சம்பந்தப்பட்டது. ஆதியில் ஒருவனுக்கு ஒருத்தி, ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் வரையறுக்கப்படவில்லை. அது பிற்காலத்தில் தனிநபர் என்கிற ஆசாமி தோன்றிய போது ஏற்பட்டது.

பிரெடரிக் நீயட்ஷே, ‘ஒற்றை அறம் என்று எதுவும் இல்லை.  ஒருவன் எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது ஆண்டான்களின் அறம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அடிமைகளின் அறம். அடிமைகளே ஆண்டான்களின் அறத்தைக் கைப்பற்றுங்கள்’ என்றார்.

இந்தச் சங்க கால தலைவன் தலைவி உறவுப் பிரச்சனை நிலப்பிரபுத்துவ ஆதிபத்தியம் சார்ந்தது. இது இயல்பானதே. ஆதியில் பெண்களின் நிலைமை உலகம் முழுதும் இப்படித்தான் இருந்தது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில், ‘பெண்கள் மிருகம் போன்றவர்கள். அவர்களை பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக மாற்றவேண்டும் (tamed animal)’ என்கிறார்.

அவருடைய குருநாதரான பிளேட்டோ பெண்களை வெறுத்தார். ’அவர்களால்தான் குழந்தை பெறவேண்டிய தருணம் வருகிறது. அவர்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய ஆபத்து ஏற்படுகிறது. என்றார். பெண் ஒரு பிரச்சனை. ஆண்-பெண் திருமணம் என்பதே தடை செய்யப்பட வேண்டும்’ என்றார்.

அவருடைய குருநாதரான சாக்ரட்டீஸ் சொன்னார். ‘என்னால் எல்லாவிதமான மனிதர்களுடனும் சகித்துக் கொண்டு இருக்கமுடியும். யாராலுமே என்னை தொல்லைப் படுத்திவிட முடியாது. ஏனேனில் என் மனைவி ஷாந்திப்பெயின் எனக்குத் தரும்  தொல்லைகளுக்குப் பழகியவன் நான். அவளை விட வேறு யார் எனக்கு அதிகத் தொல்லை தர முடியும்?

ஆக, பெண் என்பவள் ‘விலங்காக’, ‘பிரச்சனை’யாக, ‘தொல்லை தருபவளாக’வே காலங்கள் தோறும் வர்ணிக்கப்பட்டாள்.  வரலாறு என்பது ஆண்களைப் பற்றி ஆண்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கு இடமில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.

இப்படிப்பட்ட ஒரு ஆதிபத்திய சூழ்நிலையில், சுயம் இழந்த ஒரு மற்றமையாக வாழ நேர்ந்த தலைவி, ஒழுக்கம் தவறிய தன் தலைவனை, எருமை, நீர்நாய், வரால் மீன் ஆகியவற்றுடன் ஒப்பிடுவது தன் உடல்மீதான அடக்கு முறைக்கு எதிரான கலகக்குரல் என்றுதான் சொல்லவேண்டும். இதைத் தக்க ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரையில் ஆசிரியர் நிறுவி இருப்பது சிறப்புடன் மிளிர்கிறது. பழைய பக்கங்களில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

மரபிலிருந்து நவீனத்துவம் தன்னைத் துண்டித்துக் கொண்டது.  செய்யுள் மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட நவீன பிரதிதான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். நாவல் என்ற ஆங்கிலச்சொல்லின் போருள் நவீனம் என்பது. எனவே அதன் பெயரிலேயே நவீனம் இருக்கிறது. எனவே, அதில் இருக்கும் நவீனப்பண்புகள் குறித்து கேள்விகள் எழுப்பத்தேவை இல்லை. கலை இலக்கியத்தின் பண்புகளை சோதனைச்சாலை பரிசோதனைக் குழாயில் போட்டு கறாராகச் சோதிக்க முடியாது. சிவப்பு லிட்மஸை நீல லிட்மஸாக மாறுகிறதா இல்லையா என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கலை தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. பத்துத் தலை ராவணன் இருந்தான் என்பது கதை. பத்து தலையோடு ஒருவன் எப்படி இருக்க முடியும் என்று விசாரணை செய்வது தர்க்கம். பத்துத் தலைகளை வைத்துக் கொண்டு அவன் எப்படி பக்கவாட்டில் படுத்தான். சளி பிடித்தால் பத்துத் மூக்குகளாலும் சீந்துவானா என்றெல்லாம் கேட்பது கலையைக் கொல்ல முற்படும் தர்க்கம். ஏற்கனவே, பிரதாப முதலியார் சரித்திரம் பற்றி மொண்ணையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை இந்த நூலின் ஆசிரியர் செய்திருக்கும் விமர்சனம் சரியானதாகவும், நியாயமானதாகவும் படுகிறது. இந்த விமர்சனத்தில் ஆசிரியர் தர்க்கம் பார்க்கவில்லை. சிவப்பு லிட்மஸ் நீல லிட்மஸாக மாறியதா இல்லையா என்றெல்லாம் பார்த்து, தானும் பயந்து பிறரையும் பயமுறுத்தவில்லை.

தொடர்ந்து இவரது விமர்சனப் பார்வையிலிருந்து எதுவுமே தப்புவதில்லை. பூந்துருத்தி காடநம்பியின் பக்தி வெளிப்பாடாக இருந்தாலும் சரி, பாமாவின் மனுஷியாக இருந்தாலும் சரி ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத பல்வேறு பிரதிகள் பற்றி இவர் தனது பார்வையைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. பாரதியாரின் கவிதைகளில், பெண் நோக்கு. மீன்காரத்தெரு பிரதியில் பெண்ணின் இடம். சல்மா, ரேவதி, ஆர். சூடாமணி போன்ற பெண் எழுத்தாளர்களின் பிரதிகள் மீதான ஆய்வு என்று விரியும் இவரது பணி புத்தகப் பிரதிகளுடன் நிற்பதில்லை. உன்னைபோல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மீதான விமர்சனமாகவும் நீள்கிறது.

பூந்துருத்தி காடநம்பியின்  பக்தி வெளிப்பாடு என்பது சைவ அரசியலை முன் வைக்கிறது. அன்பே சிவம் என்று சொல்லிவிட்டு சமணர்களை கழுவில் ஏற்றி மகிழ்ந்த பேரன்பு சைவர்களுடையது. பிரதியில் நிலவும் அரசியல் பற்றி இந்தக் கட்டுரை பேசாமல், புலவரை விதந்தோதும் காரியத்தை மட்டுமே செய்கிறது. இது விமர்சனம் அல்ல. பூச்சொரிதல் மட்டுமே.

பாமாவின் மனுஷி நாவலைப் பற்றிய இவரது பார்வை சரியான உள்வாங்கல்.  நியாயமாக விமர்சித்திருக்கிறார். இதற்காக இந்நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.

பெண் நோக்கில் பாரதியாரின் மூன்று கதைகள் என்று இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பாரதியாரின் அந்தக் கதைகளில் ஏதோ பெண்ணியம் இருப்பதாக நினைத்து மெய் சிலிர்த்திருக்கிறார். பாரதியார் பெரிய கவிஞர்தான். தேசியகவிதான். அதற்காக அவர் எழுதிய எல்லாவற்றையும் முழுவதும் ஏற்க முடியாது. அவர் பாடல்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ எழுதிய அதே பாரதிதான் இங்கிலாந்து இளவரசர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்திப் பாட்டு எழுதியவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பாரதியிடம் புதுமைக் கருத்துகள் இருந்தது போல் பழமைவாதமும் இருந்தன.  தான் உண்மை என்று கருதுவதை அதிகாரம் சமூகத்தில் விநியோகம் செய்கிறது. கவிஞர்களும், எழுத்தாளர்களும் அதை மறு விநியோகம் செய்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்றால் அவளைக் கொண்டாடவேண்டும். எனவேதான், பெண்ணை தேவதையாக, அழகியாக, கற்புக்கரசியாக ஆண் வடிவமைத்தான். அவளை அந்தப் பாத்திரங்களை வகிப்பதற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திதான்.

அதன்படி முதல் கதை ‘அமெரிக்கப் பெண் கல்யாணத்துக்கு முன் தன் கணவன் முகத்தைப் பார்ப்பாள். கல்யாணத்துக்குப் பின் பிற ஆடவர் முகத்தைப் பார்ப்பாள். ஆனால், ஒரு கிழக்கு தேசப் பெண்ணுக்கோ கல்யாணத்துக்கு முன் தன் கணவன் முகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருவதில்லை; ஆன பின்னர் அவர் முகத்தை மட்டுமே பார்ப்பாள்’ என்று சொல்கிறது. இந்தியப் பெண்ணின் கற்பை விதந்தோதும் தன்மை இதில் இருக்கிறது. கற்பைப் பற்றி அதிகாரம் விநியோகம் செய்திருக்கும் கருத்தின் மறு விநியோகமே இது.

இரண்டாவது கதைப்படி, ‘விக்கிரமாதித்தன் தன் மனைவி ஸ்ரீமுகி இறந்தால், தானும் உடன்கட்டை ஏறுவதாகக் கூறுகிறான்’

பாரதியார் ஒரு தடவை ஒரு தலித் இளைஞனுக்கு பூணூல் போட்டு அவனை பிராமணனாக்கினார். அதைப் போலத்தான் இருக்கிறது. ‘நான் இறந்தால் நீ உடன்கட்டை ஏறுவாய் அல்லவா? அது போல் நீ இறந்தால் நான் உடன் கட்டை ஏறுவேன் என்பது. உடன்கட்டைக்கு பதில் உடன்கட்டை என்று இதற்கு அர்த்தம் கற்பிக்கலாம்.  பாரதியார் தலித் இளைஞனுக்கு பூணூல் போட்டதை விட, இவரது பூணூலை அறுத்து எறிந்து விட்டு அவனை தனக்கு சமமாக்கிக் கொண்டு இருந்து இருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. பாரதியின் பழமை மீதான பிடிப்பை இதன் மூலம் கண்டறியலாம்.   

‘ஒரு விதவைப் பெண்ணை காவி கட்ட வைத்து தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்’

இது மூன்றாவது கதை. இதில் வரும் விதவைப் பெண்ணுக்கும் சதியில் வைத்து எரிக்கப்படும் அபலைப் பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இக்கதையில் வரும் விதவைப் பெண்ணை சதியில் வைத்து எரிக்கவில்லையே தவிர, உடல் முழுக்க மிளகாய் தடவி தெய்வம் ஆக்கி வணங்குகிறார்கள். சதியில் இறந்தவள் இறந்த தெய்வம். இவள் உயிர் இருந்தும் செத்துக் கொண்டிருக்கும் தெய்வம். விதவைப் பெண் ஒருத்தியை தெய்வமாகக் காட்டுவது புதுமை என்று புல்லரிக்கிறார் ஆசிரியர். இதில் என்ன புதுமை இருக்கிறது. ‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? கணவனைத் தொழுது எழும் பெண், ’மழையே நீ பெய்’ என்றால் பெய்யுமாம். இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மனோபாவம். இதை வள்ளுவர் கால அதிகாரம் விநியோகம் செய்தது. அதை வள்ளுவர் மறு விநியோகம் செய்தார். சதியை எதிர்க்கும் பாரதி விதவை தெய்வமாவதை ஆதரிப்பது ஒரு நகைமுரண்.

அதிலும் அந்தப் பெண் நீண்ட வசனம் பேசுவது ஒட்டாமல் இருக்கிறது. அது அந்தப்பெண் பேசுவது போல் இல்லை. பாரதியார் பேசுவது போல் இருக்கிறது. தனது கருத்தைச் சொல்வதற்கு ஒரு mouth piece ஆக அந்தப் பெண் கதாபாத்திரத்தை பாரதியார் பயன் படுத்தி இருக்கிறார். அவ்வளவுதான்.

இந்த மூன்று கதைகளிலும் பாரதியார் காட்டும் பெண் புதிய சமுதாயத்தின் பிரதிநிதியாகத் திகழ்கிறாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று மூக்கில் விரல் வைக்கிறார் ஆசிரியர். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

பாரதிதாசன் ஒரு மரபுக் கவிஞர். அவரது மூன்று குறுங்காப்பியங்களில் மரபு மீறல் நிகழ்ந்துள்ளது என்பதை ஆசிரியர் நிறுவுகிறார். மரபார்ந்த இலக்கியங்களில் தலைவனைப் பார்த்துத் தலைவி அஞ்சுவாள். பாரதிதாசனின் சஞ்ஜீவிபர்வதத்தின் சாரல் என்ற குறுங்காவியத்தில் வரும் தலைவி தலைவனை வெருட்டுகிறாள். புரட்சிக்கவி என்னும் குறுங்காவியத்தில் வரும் வர்ணனைகள் மரபார்ந்த அழகியல் வர்ணனைகளுக்கு மாறாக, சமூகப்பிரக்ஞையுடன் கூடிய வர்ணனைகளாக இயற்றப்பட்டுள்ளன. வீரத்தாய் என்ற குறுங்காவியத்தில் வரும் அரசி விஜயராணி முடியாட்சிக்குப் பதிலாகக் குடியாட்சியை நிறுவுகிறாள். பாரதிதாசனின் இக்குறுங்காவியங்கள் பெண்களை போரில் ஈடுபடுத்துதல், சாதி எதிர்ப்பை மொழிதல், மன்னராட்சியை வெறுத்து மக்களாட்சியை நிறுவுதல் போன்ற தன்மைகள் மூலம் பாரதிதாசனின் பிரதிகள் ‘மரபு மீறலை’ நிகழ்த்தி இருக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘மீன்காரத்தெரு’ என்ற நாவலின் விமர்சனத்தில் ஜாகிர் ராஜாவை எழுத்தாளர் வண்ணநிலவனுடன் ஒப்பீடு செய்கிறார். மீன்காரத்தெருவில் நிலவும் ஆணாதிக்க நிலவரம். பெண்கள் உடல்களாக உபயோகிக்கப்படும் அவலம். முஸ்லீம்களுக்குள்ளேயே நிலவும் கலாசார ஒடுக்குமுறைகள், அனைத்தையும் நாவல் பேசுகிறது. சமூக அடுக்கில் கீழிருந்து மேலாக விரியும் ஒரு மாற்றுப் புனைவு என்று இந்த நாவலை ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார்.. இது சரியான பார்வையே.

ஒரு ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவலின் தலைப்போ என்று புத்தம் வீடு என்ற நாவல் வந்தபோது வாசகர்கள் நினைத்தார்கள். பின்பு ஆசிரியரின் பெயரைப் பார்த்து மலையாள மொழிபெயர்ப்பாக இருக்குமோ என்றும் யோசித்தார்கள். பின்புதான் அது ஒரு தமிழ் நாவல் என்று தெரிந்தது. அதன் இடம் தமிழில் முக்கியமானது என்றும் தெரிந்தது.  அந்த நாவலைப் பற்றிச் சொல்வதென்றால் பெரிய வீட்டுப் பெண் லிஸிக்கும், பனையேறி வீட்டுப்பையன் தங்கராஜ் ஆகிய இருவுக்கும் இடையே வந்த காதலும், அதன் விளைவாக நிகழும் போராட்டங்களும் என்று சொல்லலாம்.

உன்னைபோல் ஒருவன் என்ற திரைப்படத்தின் விமர்சனத்தையும் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒரு புது முயற்சியை இந்தப் படம் எடுத்துக் காட்டியது. இது ஒரு புது முயற்சி. அவ்வளவுதான்.. இதைப்பற்றிப் பேசும் போது,’சமூக மாற்றத்துக்குப் பாடுபட்டு வரும் போராட்ட இயக்கங்களின் பங்களிப்பைப் பற்றி இப்படம் ஏன் மௌனம் சாதிக்கிறது? என்று கேட்பது அழகியல் ஃபாசிசம் (aesthetic facism). தன்னுடைய கதை, கதாபாத்திரங்கள், வசனம், இயக்கம் போன்ற எல்லாமே ஒரு இயக்குநர் என்ற கலஞனின் தேர்வு சார்ந்தது. அதில் அவன் என்ன பிழை செய்திருக்கிறான் என்பதுதான் ஒரு விமர்சகனின் வேலை. அந்த ‘அது’ ஏன் அப்படி இல்லை. இந்த ‘இது’ ஏன் இப்படி இல்லை என்று குற்றம் சாட்டுவது தன் விருப்பத்தை ஒரு பிரதியின் மேல் திணிப்பதாகும். அது ஒரு வன்முறை.  அது இந்த விமர்சனத்தில் நிகழ்கிறது.

சொல்லாத சேதிகள் என்ற ஈழப்பெண்களின் கவிதைத் தொகுப்பு, சல்மாவின் சாபம் சிறுகதைத் தொகுப்பு, குறித்த விமர்சனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. குடும்ப நிறுவனமும் சரி, புற உலகும் சரி பெண்களை விரோத பாவத்துடனேயே கண்காணிக்கின்றன என்கிற கசப்பான உண்மையை எடுத்துரைக்கின்றன.

வெ.இறையன்புவின் சாகாவரம் நாவல், மரணத்தைப் பற்றிப் பேசுகிறது. ’மரணம் நிச்சயம் என்று ஆனபின்பு வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?’ என்கிறது இருத்தலியம். இறையன்புவின் நாவலோ ‘சாவாமை சாபம்’ என்கிறது.

ரேவதி என்கிற அரவாணியின் முதல் நூலைப் பற்றிய தனது விமர்சனத்தை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காலங்காலமாக அரவாணியர் மேல் இருந்த பயம் கலந்த வெறுப்புணர்வை இந்த நூல் போக்குகிறது என்கிறார். இந்த நூல் அரவாணிகளை சரிநிகர் சமானமாக நடத்த வேண்டும் என்று கோருகிறது. இன்னும் இரண்டாவது பாலினமான பெண்ணே ஆணுக்கு சரிநிகர் சமானமாக நடத்தப்படவில்லை எனும் போது மூன்றாம் பாலினமான அரவாணிகள் அந்த இலக்கை எப்போது எட்டுவார்களோ, தெரியவில்லை.

ஆர்.சூடாமணி குடும்பம் என்ற நிறுவனத்தின் மேல் வெறுப்புக் கொண்டவர். ஐரோப்பியப் பெண்ணியவாதிகளைப் போல்,’நான் தனி, என் உணர்வுகள் தனி. எனக்குக் குடும்பமும், கணவனும், குழந்தையும் வேண்டாம்’ என்ற கொள்கை கொண்டவர். தனது கருத்தின் சாயலில் யாமினி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, ‘இரவுச்சுடர்’ என்ற நாவலை எழுதி இருக்கிறார். யாமினி ஒரு புரட்சிப் பெண். மற்றவர்களால் புரிந்து கொள்ள்ப்பட இயலாதவள். அவளுக்குத் திருமணம் நடக்கவே செய்கிறது. ஆனாலும், அவளாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. கணவனையும் மகிழ்ச்சி அடைய விடுவதில்லை. இறுதியில் அவள் இறந்தும் போகிறாள். பெண்ணிருப்பின் பூரணத்துவத்துக்கு இவளைப் போன்ற பெண்களும் தேவைப்படுகிறார்கள் என்கிறார் ஆசிரியர். அது என்ன ’பெண்ணிருப்பின் பூரணத்துவம்’ என்று தெரியவில்லை.

இத்தொகுப்பின் அடுத்த கட்டுரையாக கவிஞர் இன்குலாப்பின், இன்குலாப் கவிதைகள் இடம் பெற்றுள்ளது. ‘சரிநிகர் சமானமான புதுத் தமிழ்ச்சமூகத்தைக் கட்டி எழுப்பும் ஓர் இலக்குடன் இன்குலாப்பின் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன’ என்று கண்டு சொல்லும் ஆசிரியர் ‘தமிழ்ச்சமூகத்தில் உருவாக வேண்டிய புதிய புரட்சிகரமான மாறுதல்களுக்கான உந்து விசைகளாய்’ இன்குலாப் கவிதைகள் திகழ்வதாக’ கருத்துரைக்கிறார். அவற்றில் உண்மையில் ‘கவிதை’யாக இருப்பது எத்தனை, வெறும் பிரசாரங்களாக இருப்பது எத்தனை என்பது பற்றிப் பேசவில்லை.

இறுதியாக சங்க இலக்கியத்தில் ‘ஒரு பாடல் மட்டுமே எழுதிய பெண்பாற்புலவர்கள்’ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. புறநானூற்றில் மொத்தம் 17 பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.  அவர்களால் பாடப்பட்ட பாடல்கள் 62. இவர்களில் ஒரு பாடல் மட்டும் பாடிய புலவர்கள் பத்து பேர். அவர்கள் எழுதிய அந்தப் பாடல் எது, அதைப் பற்றிய விவரணை என்ன ஆகியவற்றை கட்டுரை விரித்துரைக்கிறது.இது ஒரு நல்ல கட்டுரை என்றே சொல்லலாம்.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை அகநானூறு கூறும் பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இறுதிக் கட்டுரை புறநானூறு தெரிவிக்கும் பெண்பாற்புலவர்கள் பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறது. இது ஒரு நல்ல உத்தி என்று சொல்லலாம்.

எழுத்து இரண்டு விதம். ஒன்று எடுத்துரைப்பு விவரணை (Descriptive narrative)  இரண்டு கேள்விக்குள்ளாக்கும் விவரணை (Interrogative narrative) நவீன பிரதிகள் யாவும் எடுத்துரைப்பு விவரணை என்ற பிரிவைச் சேர்ந்தவை. உள்ளதை உள்ளபடி விவரிப்பவை அவை. பின் நவீன பிரதி என்பது கேள்விக்குள்ளாக்கும் பிரதியாகும். இவை வெறுமனே கதையை மட்டும் விவரித்துவிட்டுப் போகாது. எடுத்துக்காட்டாக கல்கியின் பிரதிகள் எடுத்துரைப்புப் பிரதிகள். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ போல் எழுதப்பட்ட பிரதிகள் கேள்விக்குள்ளாக்கும் பிரதிகள். இவை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும்.

விமர்சனமும் அப்படியே. இருப்பதை அப்படியே எடுத்துரைப்பது நவீன விமர்சனம். சொல்லப்பட்டதைத் தாண்டி ஒளிந்திருக்கும் பிரதியின் அரசியலை வெளிப்படுத்துவது. தகர்ப்பு விமர்சனம். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது பெரும்பாலும் நவீன விமர்சனமே. படித்ததை அப்படியே பகிர்ந்து கொள்ளும் போக்கு இதில் இருக்கிறது. எனினும், நூலாசிரியரின் கூர்மையான பார்வையும், பிரதிகளை அலசும் முறையும் சில இடங்களில் தகர்ப்பு விமர்சனமாகவும் இருக்கிறது. இது முக்கியமானது. இதுதான் இந்த நூலை முக்கியமான வரவாக்குகிறது..
                     <><><><><>