Friday, March 27, 2015

on every saturday

மலேஷியக் கவிஞர் 
கோ. புண்ணியவானின் 
கவிதைத் தொகுப்பு
*

                 இடறிய விரல்கள்
எம்.ஜி.சுரேஷ்
 * * *

ந்தக் கவிதைத் தொகுப்பு என் கைகளில் தன்னை விரித்துக் கொண்டு என்னை உற்றுப் பார்க்கிறது. பதிலுக்கு நானும் பார்க்கிறேன்.பின்பு, கவிதைகளை வாசிக்கவும் செய்கிறேன். எனக்குள் தோன்றுகிறது.

கவிஞர் புண்ணியவான் பல ஆண்டுகளாகத் தமிழில் இயங்கி வருபவர். சிறப்பான கவிதைகள் பல எழுதியவர். ஆனால் அவரது கவிதைகளையும் அவரது பெயரையும் இத்தனை காலம்  நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இந்த எண்ணம் வந்ததும் நான் வெட்கமடைகிறேன்.

இது நேர்ந்தது எதனால்?

கணங்கள் தோறும் கவிதைகள் மனசில் சூல் கொள்கின்றன. அவற்றில் சில கருவாகி, உருவாகி கை நழுவி வெளியே வந்து காகிதத்தில் விழுந்து திருவாகின்றன.   வெளிப்படுத்தப்பட்ட கவிதைகள் தனது வாசகனைத் தேடிப் படபடக்கும் தாள்களில் காத்திருக்கின்றன. அவற்றில் சில தன்னைத் தேர்ந்து கொள்ளும் வாசகனின் மனதைத் தொடுகின்றன. அவை அவர்களுக்காக எழுதப்பட்டவை.  சில தொடாமல் எட்டி நிற்கின்றன. ஏனெனில், அவை அவர்களுக்காக எழுதப்படவில்லை.  எனினும், கவிஞர்கள் பலர் முகம் தெரியாத வாசகனுக்காகத்  தங்கள் கவிதைகளைத் தொடர்ந்து எழுதவே செய்கின்றனர்.

ஒவ்வொரு கவிதைக்கும் அதை உருவாக்கிய  ஒரு கவிஞன் இருப்பதைப் போல், அதை வாசிப்பதற்கென்றே ஒரு வாசகனும் இருக்கிறான் என்பது முக்கியமானது. கவிதையும் அதற்குரிய வாசகனும் உடனே சந்திக்கலாம்; தாமதமாகச் சந்திக்கலாம். உரிய காலத்தில் ஒரு நல்ல கவிதை அதற்குரிய வாசகனைச் சேர்ந்தே தீரும். குறுந்தொகைக் கவிஞர்கள் உடனே அடையாளம் காணப்பட்டார்கள். திருவள்ளுவரும்,  திருத்தக்கத் தேவரும் தாமதமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள். இது கவிதையின் விதி; கவிஞனின் விதி.  இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது என்னுள் எழும் உணர்வுகள் இவை. பிரமிளையும், ஞானக்கூத்தனையும் உடனே அடையாளம் கண்ட நான் இப்போது சற்று தாமதமாக ஒரு திருத்தக்கதேவரைக் கண்டு கொண்டிருக்கிறேன். அவர் தான் கோ.புண்ணியவான்.

கவிஞர் கோ. புண்ணியவானின் பெயரும், அவரது கவிதைகளும் எனக்கு ‘மௌனம்’ இதழ் மூலமே பரிச்சயம். அவரது எந்த ஒரு கவிதையும் நன்கு எழுதப் பழகிய ஒரு கையிலிருந்து தான் வெளி வந்திருப்பதைக் கால் பரப்பி நின்று சொல்லும். சில உரத்துப் பேசும்; சில நெகிழ்ந்து உருகும்; சில எள்ளி நகையாடும்; வேறு சில குமுறும். எண் சுவைகளைப் பற்றித் தண்டி அலங்காரம் பேசுகிறது. எண் சுவைகளில் கோ. புண்ணியவானின் கவிதைகள் பேசுகின்றன. பொதுவாகவே, பெரும்பாலான  கவிஞர்கள் தங்களை ஏதாவது ஒரு பாணிக்குள் போட்டு அடைத்துக் கொள்வார்கள். அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பார்கள். விக்கிரமாதித்யனின் கவிதைகள் தன்னிரக்கத்தை நாடி நிற்கும். ஞானக்கூத்தனின் பாணி அங்கதம். வண்ணதாசனின் கவிதைகள் பார்க்கும் எதையும் வியந்து பார்க்கும்; விதந்தோதும்.ஏங்கும்.  பிரமிளின் கவிதைகள் படிமங்களில் மூழ்கிக் கிடக்கும். கோ.புண்ணியவானின் கவிதைகள் தங்களை எவ்வித அடைப்புக்கும் அடைத்துக் கொள்ளாதவை என்பது சிறப்பு.விலகி நின்று உலகைப் பார்ப்பது அவரது தன்மை.  அவரைப் போலவே அவரது கவிதைகளும் வழக்கமான தன்மைகளிலிருந்து  விலகி நிற்பவையே. இவரால் வித விதமாகச் சிந்திக்க முடிகிறது;  தினுசு தினுசாக எழுத முடிகிறது. எள்ளல் தன்மையுடனும் (என் அரிசி), தார்மீகக் கோபத்துடனும் (எதேச்சாதிகாரம்), பரிவுடனும் (தாயுமான மண்), குறும்புடனும் (பகிரங்கம்) எரிச்சலுடனும் (இன்னும் வேண்டுமா ரத்தம்), அங்கதச்சுவையுடனும் (கடவுள்) இவரால் எழுத முடிகிறது. இந்தத் தன்மையே இவரை மற்ற கவிஞர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது.

தற்காலக்கவிஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் பின் பற்றி எழுதுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் குருநாதர் என்றாலும் அவர் சாயலில் தன் குழந்தை இருப்பதை எந்த ஒரு சிஷ்யனும் விரும்பக்கூடாது தானே? ஆனால், இவர்கள்  விரும்புகிறார்கள். இது போன்ற அசட்டுத்தனங்கள் புண்ணியவானிடம் இல்லை. தனது ஆதர்ச கவிஞர்களின் சாயல் அவர் கவிதைகளில் இல்லை. இது ஆறுதல் தருகிறது.

கவிதை என்பது கவிஞன் என்ற கடவுளால் அருளிச்செய்யப்படும் தெய்வீகக் கோட்பாடு அல்ல. மாறாக அது ஒரு பன்முகப்பட்ட பரிமாணங்கள் கொண்ட வெளியாகும். அங்கே பலதரப்பட்ட சிந்தனைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. இன்றைய பின் நவீன சூழலில் ‘நகரும் நகரம்’, ‘அலையும் கதவு’ என்றெல்லாம் நவீன காலத் தலைப்புகளை வைத்துப் பின் நவீன வாசகனை ஏமாற்ற முடியாது. நமக்குக் கறாரான சொற்கள் தேவை. வார்த்தை விரயம் தவிர்க்கப்படவேண்டும். வாசகனை மகிழ்விக்க இயல்பாகவே கவிதை தன்னுள் பொய்களைச் சுமக்கிறது. அது போதாமல் மேலும் மேலும் படிமங்களின் மூலம் கவிதையின் மேல் கூடுதல்  சுமைகளை ஏற்றுவது கவிதை தள்ளாடுவதில் போய் முடியும்.
எடுத்துக் காட்டாக, நிலவொளி அழகானது என்ற வாக்கியத்தைப் பார்ப்போம். அந்த வாக்கியத்தில்  இருக்கும் நிலவொளி என்பது உண்மை. அழகானது என்பது பொய். நிலவொளி பார்ப்பதற்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அதன் அழகுதான் என்று கவிஞன் நம்புகிறான். அந்த நம்பிக்கையைத் தன் கவிதையில் விதைக்கிறான். அவனது நம்பிக்கைக்கான மதிப்பீடு ஏற்கெனவே சமுகத்தால் அவனுக்கு விநியோகம் செய்யப்பட்டது, அதை இவன் மறு விநியோகம் செய்கிறான். அவ்வளவுதான். எனவே தான் பின் நவீனத்துவம் படிமங்கள் நீக்கிய, மிகை உணர்ச்சிகள் இல்லாத, கறாரான சொற்கள் கொண்ட (அப்படிப்பட்ட சொற்கள் இல்லைதான் எனினும்) கவிதைகளைக் கோருகிறது. புண்ணியவானின் கவிதைகள் படிமங்கள் அற்று,மிகை உணர்ச்சி இல்லாமல், தோளில் கை போட்டுக் கொண்டு உரையாடும் தோழனைப் போல் பேசுகின்றன. கவிதையைத் தனக்கும் தனது வாசகனுக்கும் இடையேயான ஓர் அந்தரங்கமான உரையாடலாக அவர் மாற்றிக் காட்டுகிறார்.

’ஒவ்வொரு அரிசியிலும் அது இன்னாருக்கு என்று அவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது’ என்பது ஓர் உருதுப் பழமொழி.  அதை அங்கதம் தெறிக்க இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா என்று திகைக்க வைக்கிறார் கவிஞர்.

எனக்கான அரிசியில் என் பெயர்
எழுதப்பட்டிருக்கிறதாம்
எந்த உலையில் யார் வாயில்
போய்த்தேடுவது?

என்று ஆரம்பித்து கவிதை நெடுகக் கேள்விகள் கேட்டுத்  திகைப்பை ஏற்படுத்துகிறார்.  அதே போல் ‘கொப்பரைசில்’ நல்ல அங்கதக்கவிதை. பக்தன் கடவுளுக்காக உடைத்த தேங்காய்ச் சில் அவர் காலில் பட்டு கடவுளுக்கு செப்டிக் ஆகி விடுகிறது. கோபிக்கும் கடவுளிடம் பக்தன் மன்னிப்புக் கோருகிறான். அதற்குப் பிரீதியாக அடுத்த முறை ஆயிரம் தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக் கொள்கிறான். இது போன்ற அங்கதம் புதுமைப்பித்தனை நினைக்க வைக்கிறது.

‘நெரிசலின் இடுக்கில்’, ‘புதிர்’, ‘மௌனவதம்’, ‘திலகம்’, ‘விழுங்கப்பட்டவை’ போன்ற கவிதைகள் வாழ்க்கையின் அபத்தத்தையும், அதன் குரூரத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றன. இந்தக் கவிதைகளில் இருத்தலியல் (existentialism) தன்மை இருக்கின்றன எனலாம்.

பல கவிதைகளில் கடவுளை வம்புக்கிழுக்கிறார் புண்ணியவான். பக்தனின் கொப்பரை சில்லினால் செப்டிக் ஆன கடவுள், தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட கடவுள், வரும் வழியில் குண்டு பாய்ந்து இறந்த கடவுள் என்று கடவுள் இவரது அங்கதத்தில் சிக்கிப் படாத பாடு படுகிறார்.

எங்கோ பட்டரைக் கல்லில் அடிபடுகிறது இரும்பு; அதன் அதிர்வில் இங்கே  அதிர்கிறது  என் வீட்டு ஜன்னல் கதவு. இது போல் அதிர்வதுதான் கவிமனம். அத்தகைய கவிமனம் கவிஞர் புண்ணியவானுக்கு வாய்த்திருக்கிறது. அதற்கு இத்தொகுப்பில் உள்ள கவிதைகளே சான்று.

இத்தொகுப்பிலேயே மிக முக்கியமான கவிதையாக நான் கருதுவது, ‘தமிழன்’ என்ற தலைப்பில் இவர் எழுதி இருக்கும் கவிதையே.  இது இவர் தொகுப்பில் உள்ள கவிதைகளில்மட்டுமல்ல;  சிங்கப்பூர், மலேசிய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் இதுவரை எத்தனை வந்திருக்குமோ அத்தனைத் தொகுப்புகளிலும் வெளிவந்திருக்கும் அத்தனை கவிதைகளிலும் (நான் படித்த வரைக்கும்) சிறந்த கவிதையாக இதுதான் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழில் இதுவரை எழுதப்பட்ட ஹைகூ கவிதையிலேயே சிறந்த கவிதையாக,

நள்ளிரவில்தான் பெற்றோம்
இன்று வரை விடியவில்லை

என்ற கவிதையைத்தான் சுட்டிக் காட்டுவார்கள். அது போல் மலேசிய-சிங்கப்பூர் கவிதைகளிலேயே சிறந்த புதுக்கவிதையாக, ‘தமிழன்’ என்ற  இந்தக் கவிதையை நான் பரிந்துரை செய்கிறேன். ஒரு பின் நவீன கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இக்கவிதையை ஓர் எடுத்துக் காட்டாகக் கூற முடியும்.

’நல்ல கவிதை எது?’ என்ற கேள்விக்கு ஒரு முறை இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியன் பதில்  சொன்னார்: ’படித்தவுடன் மறந்து விடுவது மோசமான கவிதை; படித்த பின் பலகாலம் நினைவில் தங்கி இருப்பது நல்ல கவிதை’ அவரது அளவுகோளின் படி பார்த்தால் கவிஞர் புண்ணியவான பல நல்ல கவிதைகளை இந்தத் தொகுப்பில் எழுதி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

                                @@@@@@

Friday, March 20, 2015

முனைவர் சிரிஷாவின் ஆய்வுகள்

ஆய்வுக் கட்டுரைகள்
வெறுமைவெளியும்
பன்மைமொழியும்
முனைவர் தா.அ.சிரிஷா

 அணிந்துரை
கவனத்தை ஈர்க்கும்

முக்கியமான வரவு

எம்.ஜி.சுரேஷ்
* * *

பெரும்பாலான இந்தியப் பெண்களைப் போலவே, குடும்பம் என்ற நிறுவனத்தின் வன்முறையில் சிக்குண்டு, வீட்டு வேலை, வெளியில் போய் பொருள் நிமித்தம் செய்யும் வேலை ஆகிய இரு வேடம் தரித்து ஓர் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்காக ஆண்களால் சிந்தித்து விநியோகிக்கப்படும் பெண்ணியம் சார்ந்து மதிப்பீடுகளை எதிர்கொள்ளும் வாழ்க்கை இந்நூலாசிரியர் திருமதி சிரிஷாவினுடையது.

‘வரலாற்றில் பெண்கள் இரண்டாவது பாலினமாக்கப்பட்டார்கள். ஆண்களால் வடிவமைக்கப்பட்ட உலகில் பிரவேசிக்கும் பெண்கள் ஆண்களால் வரையறுக்கப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில் பெண்களான நாங்கள் எவ்வாறு சுதந்திரமானவர்களாக இருக்கமுடியும்?’ என்று தனது நூலான ‘செகண்ட் செக்ஸில்’ கேள்வி எழுப்பினார் பிரெஞ்சு பெண்ணியவாதியான சீமோன் தி புவா.
    
’குடும்பம் என்பது ஓர் ஆலமரம்’, ‘உறவுகளுக்காகச் சுயத்தைத் தொலைத்து வாழும் வாழ்க்கை இனிப்பது’ ‘கைவேலைகளும், சமையலும் ஒழிந்த நேரத்தில்தான் படிப்பதற்கு யோசிப்பதற்கும் நொடிப்பொழுதுகள் வாய்க்கின்றன’ என்றெல்லாம் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒட்டகம் முள் செடிகளை விரும்பிச்சாப்பிடும். முள் செடியில் உள்ள முட்கள் ஒட்டகத்தில் உதடு, ஈறு, நாக்கைக் கிழிக்கும். இருந்தாலும் ஒட்டகம் முள் செடியைத் தான் விரும்பிச்சாப்பிடும்.  இதுபோல்தான் நம் நாட்டுப் பெண்கள் குடும்ப நிறுவனம் என்ற நுகத்தடியில் சிக்கிக்கொண்டு, அல்லல் பல இருப்பினும் அதையே ஏற்றுக்கொண்டு சுவைத்தபடி  வாழ்ந்து மகிழ்கிறார்கள். ஒரு முதலாளிய சமூகத்தில் இதைத் தவிர்க்க இயலாதுதான். ஏன், சோவியத் யூனியனும் கூட இதற்கு விலக்கல்ல என்பதை சோவியத் யூனியனில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் புரட்சிக்காரியான அலெக்சாண்ட்ரா கொலொண்டாயின் பதிவுகள் நிரூபிக்கின்றன. இருப்பினும் அவர்களுக்குள் இயங்கும் பெண்மனம் தங்களை ஆளும் ஆணாதிக்கத்தின் மீதான விமர்சனங்களை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றன. அத்தகைய முயற்சிகளின் நீட்சியாகவே இந்தக் கட்டுரைத் தொகுப்பினை நாம் பார்க்க முடியும்.

     இத்தொகுப்பில் 16 கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பெண்ணியம் சார்ந்தே இயங்குகின்றன. அகநானூற்று மருதத் திணைப் பாடல்களாக இருந்தாலும் சரி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான, ‘சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுப்பாக இருந்தாலும் சரி அனைத்திலும் ஆணாதிக்கத்தின் தடித்தனத்தை நோக்கி பெண்மனத்தின் சுட்டு விரல் உயர்வதை நம்மால் கவனிக்க முடிகிறது.

     இத்தொகுப்பின் முதல் கட்டுரை, அகநானூற்றில் இடம் பெற்றுள்ள மருதத் திணைப் பாடல்களில் தலைவி எவ்விதம் தலைவனை விமர்சிக்கிறாள் என்பது குறித்துப் பேசுகிறது.

‘ஆண்மக்களுக்கு சமூகத்தில் இருந்த கட்டற்ற பாலியல் சுதந்திரமும், அதனைத் தட்டிக் கேட்க இயலாத பெண்களின் இறுக்கமான சமூக மௌனமும் இப்பாடல்களில் புதையுண்டுள்ளன’ என்கிறார் ஆசிரியர்.

பண்டைய சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகம். அங்கே பெண் என்பவள் ஆணின் உடைமைப் பொருள் மட்டுமே. ஓர் ஆணுக்குப் பெருமை அவன் எத்தனை வேலி நிலம் வைத்திருக்கிறான், எத்தனை ஆடு, மாடுகள் வைத்திருக்கிறான் என்பது போல் எத்தனை மனைவிகள் வைத்திருக்கிறான் என்பதுடன் சம்பந்தப்பட்டது. ஆதியில் ஒருவனுக்கு ஒருத்தி, ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் வரையறுக்கப்படவில்லை. அது பிற்காலத்தில் தனிநபர் என்கிற ஆசாமி தோன்றிய போது ஏற்பட்டது.

பிரெடரிக் நீயட்ஷே, ‘ஒற்றை அறம் என்று எதுவும் இல்லை.  ஒருவன் எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது ஆண்டான்களின் அறம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அடிமைகளின் அறம். அடிமைகளே ஆண்டான்களின் அறத்தைக் கைப்பற்றுங்கள்’ என்றார்.

இந்தச் சங்க கால தலைவன் தலைவி உறவுப் பிரச்சனை நிலப்பிரபுத்துவ ஆதிபத்தியம் சார்ந்தது. இது இயல்பானதே. ஆதியில் பெண்களின் நிலைமை உலகம் முழுதும் இப்படித்தான் இருந்தது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில், ‘பெண்கள் மிருகம் போன்றவர்கள். அவர்களை பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக மாற்றவேண்டும் (tamed animal)’ என்கிறார்.

அவருடைய குருநாதரான பிளேட்டோ பெண்களை வெறுத்தார். ’அவர்களால்தான் குழந்தை பெறவேண்டிய தருணம் வருகிறது. அவர்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய ஆபத்து ஏற்படுகிறது. என்றார். பெண் ஒரு பிரச்சனை. ஆண்-பெண் திருமணம் என்பதே தடை செய்யப்பட வேண்டும்’ என்றார்.

அவருடைய குருநாதரான சாக்ரட்டீஸ் சொன்னார். ‘என்னால் எல்லாவிதமான மனிதர்களுடனும் சகித்துக் கொண்டு இருக்கமுடியும். யாராலுமே என்னை தொல்லைப் படுத்திவிட முடியாது. ஏனேனில் என் மனைவி ஷாந்திப்பெயின் எனக்குத் தரும்  தொல்லைகளுக்குப் பழகியவன் நான். அவளை விட வேறு யார் எனக்கு அதிகத் தொல்லை தர முடியும்?

ஆக, பெண் என்பவள் ‘விலங்காக’, ‘பிரச்சனை’யாக, ‘தொல்லை தருபவளாக’வே காலங்கள் தோறும் வர்ணிக்கப்பட்டாள்.  வரலாறு என்பது ஆண்களைப் பற்றி ஆண்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கு இடமில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.

இப்படிப்பட்ட ஒரு ஆதிபத்திய சூழ்நிலையில், சுயம் இழந்த ஒரு மற்றமையாக வாழ நேர்ந்த தலைவி, ஒழுக்கம் தவறிய தன் தலைவனை, எருமை, நீர்நாய், வரால் மீன் ஆகியவற்றுடன் ஒப்பிடுவது தன் உடல்மீதான அடக்கு முறைக்கு எதிரான கலகக்குரல் என்றுதான் சொல்லவேண்டும். இதைத் தக்க ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரையில் ஆசிரியர் நிறுவி இருப்பது சிறப்புடன் மிளிர்கிறது. பழைய பக்கங்களில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

மரபிலிருந்து நவீனத்துவம் தன்னைத் துண்டித்துக் கொண்டது.  செய்யுள் மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட நவீன பிரதிதான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். நாவல் என்ற ஆங்கிலச்சொல்லின் போருள் நவீனம் என்பது. எனவே அதன் பெயரிலேயே நவீனம் இருக்கிறது. எனவே, அதில் இருக்கும் நவீனப்பண்புகள் குறித்து கேள்விகள் எழுப்பத்தேவை இல்லை. கலை இலக்கியத்தின் பண்புகளை சோதனைச்சாலை பரிசோதனைக் குழாயில் போட்டு கறாராகச் சோதிக்க முடியாது. சிவப்பு லிட்மஸை நீல லிட்மஸாக மாறுகிறதா இல்லையா என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கலை தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. பத்துத் தலை ராவணன் இருந்தான் என்பது கதை. பத்து தலையோடு ஒருவன் எப்படி இருக்க முடியும் என்று விசாரணை செய்வது தர்க்கம். பத்துத் தலைகளை வைத்துக் கொண்டு அவன் எப்படி பக்கவாட்டில் படுத்தான். சளி பிடித்தால் பத்துத் மூக்குகளாலும் சீந்துவானா என்றெல்லாம் கேட்பது கலையைக் கொல்ல முற்படும் தர்க்கம். ஏற்கனவே, பிரதாப முதலியார் சரித்திரம் பற்றி மொண்ணையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை இந்த நூலின் ஆசிரியர் செய்திருக்கும் விமர்சனம் சரியானதாகவும், நியாயமானதாகவும் படுகிறது. இந்த விமர்சனத்தில் ஆசிரியர் தர்க்கம் பார்க்கவில்லை. சிவப்பு லிட்மஸ் நீல லிட்மஸாக மாறியதா இல்லையா என்றெல்லாம் பார்த்து, தானும் பயந்து பிறரையும் பயமுறுத்தவில்லை.

தொடர்ந்து இவரது விமர்சனப் பார்வையிலிருந்து எதுவுமே தப்புவதில்லை. பூந்துருத்தி காடநம்பியின் பக்தி வெளிப்பாடாக இருந்தாலும் சரி, பாமாவின் மனுஷியாக இருந்தாலும் சரி ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத பல்வேறு பிரதிகள் பற்றி இவர் தனது பார்வையைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. பாரதியாரின் கவிதைகளில், பெண் நோக்கு. மீன்காரத்தெரு பிரதியில் பெண்ணின் இடம். சல்மா, ரேவதி, ஆர். சூடாமணி போன்ற பெண் எழுத்தாளர்களின் பிரதிகள் மீதான ஆய்வு என்று விரியும் இவரது பணி புத்தகப் பிரதிகளுடன் நிற்பதில்லை. உன்னைபோல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மீதான விமர்சனமாகவும் நீள்கிறது.

பூந்துருத்தி காடநம்பியின்  பக்தி வெளிப்பாடு என்பது சைவ அரசியலை முன் வைக்கிறது. அன்பே சிவம் என்று சொல்லிவிட்டு சமணர்களை கழுவில் ஏற்றி மகிழ்ந்த பேரன்பு சைவர்களுடையது. பிரதியில் நிலவும் அரசியல் பற்றி இந்தக் கட்டுரை பேசாமல், புலவரை விதந்தோதும் காரியத்தை மட்டுமே செய்கிறது. இது விமர்சனம் அல்ல. பூச்சொரிதல் மட்டுமே.

பாமாவின் மனுஷி நாவலைப் பற்றிய இவரது பார்வை சரியான உள்வாங்கல்.  நியாயமாக விமர்சித்திருக்கிறார். இதற்காக இந்நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.

பெண் நோக்கில் பாரதியாரின் மூன்று கதைகள் என்று இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பாரதியாரின் அந்தக் கதைகளில் ஏதோ பெண்ணியம் இருப்பதாக நினைத்து மெய் சிலிர்த்திருக்கிறார். பாரதியார் பெரிய கவிஞர்தான். தேசியகவிதான். அதற்காக அவர் எழுதிய எல்லாவற்றையும் முழுவதும் ஏற்க முடியாது. அவர் பாடல்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ எழுதிய அதே பாரதிதான் இங்கிலாந்து இளவரசர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்திப் பாட்டு எழுதியவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பாரதியிடம் புதுமைக் கருத்துகள் இருந்தது போல் பழமைவாதமும் இருந்தன.  தான் உண்மை என்று கருதுவதை அதிகாரம் சமூகத்தில் விநியோகம் செய்கிறது. கவிஞர்களும், எழுத்தாளர்களும் அதை மறு விநியோகம் செய்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்றால் அவளைக் கொண்டாடவேண்டும். எனவேதான், பெண்ணை தேவதையாக, அழகியாக, கற்புக்கரசியாக ஆண் வடிவமைத்தான். அவளை அந்தப் பாத்திரங்களை வகிப்பதற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திதான்.

அதன்படி முதல் கதை ‘அமெரிக்கப் பெண் கல்யாணத்துக்கு முன் தன் கணவன் முகத்தைப் பார்ப்பாள். கல்யாணத்துக்குப் பின் பிற ஆடவர் முகத்தைப் பார்ப்பாள். ஆனால், ஒரு கிழக்கு தேசப் பெண்ணுக்கோ கல்யாணத்துக்கு முன் தன் கணவன் முகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருவதில்லை; ஆன பின்னர் அவர் முகத்தை மட்டுமே பார்ப்பாள்’ என்று சொல்கிறது. இந்தியப் பெண்ணின் கற்பை விதந்தோதும் தன்மை இதில் இருக்கிறது. கற்பைப் பற்றி அதிகாரம் விநியோகம் செய்திருக்கும் கருத்தின் மறு விநியோகமே இது.

இரண்டாவது கதைப்படி, ‘விக்கிரமாதித்தன் தன் மனைவி ஸ்ரீமுகி இறந்தால், தானும் உடன்கட்டை ஏறுவதாகக் கூறுகிறான்’

பாரதியார் ஒரு தடவை ஒரு தலித் இளைஞனுக்கு பூணூல் போட்டு அவனை பிராமணனாக்கினார். அதைப் போலத்தான் இருக்கிறது. ‘நான் இறந்தால் நீ உடன்கட்டை ஏறுவாய் அல்லவா? அது போல் நீ இறந்தால் நான் உடன் கட்டை ஏறுவேன் என்பது. உடன்கட்டைக்கு பதில் உடன்கட்டை என்று இதற்கு அர்த்தம் கற்பிக்கலாம்.  பாரதியார் தலித் இளைஞனுக்கு பூணூல் போட்டதை விட, இவரது பூணூலை அறுத்து எறிந்து விட்டு அவனை தனக்கு சமமாக்கிக் கொண்டு இருந்து இருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. பாரதியின் பழமை மீதான பிடிப்பை இதன் மூலம் கண்டறியலாம்.   

‘ஒரு விதவைப் பெண்ணை காவி கட்ட வைத்து தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்’

இது மூன்றாவது கதை. இதில் வரும் விதவைப் பெண்ணுக்கும் சதியில் வைத்து எரிக்கப்படும் அபலைப் பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இக்கதையில் வரும் விதவைப் பெண்ணை சதியில் வைத்து எரிக்கவில்லையே தவிர, உடல் முழுக்க மிளகாய் தடவி தெய்வம் ஆக்கி வணங்குகிறார்கள். சதியில் இறந்தவள் இறந்த தெய்வம். இவள் உயிர் இருந்தும் செத்துக் கொண்டிருக்கும் தெய்வம். விதவைப் பெண் ஒருத்தியை தெய்வமாகக் காட்டுவது புதுமை என்று புல்லரிக்கிறார் ஆசிரியர். இதில் என்ன புதுமை இருக்கிறது. ‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? கணவனைத் தொழுது எழும் பெண், ’மழையே நீ பெய்’ என்றால் பெய்யுமாம். இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மனோபாவம். இதை வள்ளுவர் கால அதிகாரம் விநியோகம் செய்தது. அதை வள்ளுவர் மறு விநியோகம் செய்தார். சதியை எதிர்க்கும் பாரதி விதவை தெய்வமாவதை ஆதரிப்பது ஒரு நகைமுரண்.

அதிலும் அந்தப் பெண் நீண்ட வசனம் பேசுவது ஒட்டாமல் இருக்கிறது. அது அந்தப்பெண் பேசுவது போல் இல்லை. பாரதியார் பேசுவது போல் இருக்கிறது. தனது கருத்தைச் சொல்வதற்கு ஒரு mouth piece ஆக அந்தப் பெண் கதாபாத்திரத்தை பாரதியார் பயன் படுத்தி இருக்கிறார். அவ்வளவுதான்.

இந்த மூன்று கதைகளிலும் பாரதியார் காட்டும் பெண் புதிய சமுதாயத்தின் பிரதிநிதியாகத் திகழ்கிறாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று மூக்கில் விரல் வைக்கிறார் ஆசிரியர். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

பாரதிதாசன் ஒரு மரபுக் கவிஞர். அவரது மூன்று குறுங்காப்பியங்களில் மரபு மீறல் நிகழ்ந்துள்ளது என்பதை ஆசிரியர் நிறுவுகிறார். மரபார்ந்த இலக்கியங்களில் தலைவனைப் பார்த்துத் தலைவி அஞ்சுவாள். பாரதிதாசனின் சஞ்ஜீவிபர்வதத்தின் சாரல் என்ற குறுங்காவியத்தில் வரும் தலைவி தலைவனை வெருட்டுகிறாள். புரட்சிக்கவி என்னும் குறுங்காவியத்தில் வரும் வர்ணனைகள் மரபார்ந்த அழகியல் வர்ணனைகளுக்கு மாறாக, சமூகப்பிரக்ஞையுடன் கூடிய வர்ணனைகளாக இயற்றப்பட்டுள்ளன. வீரத்தாய் என்ற குறுங்காவியத்தில் வரும் அரசி விஜயராணி முடியாட்சிக்குப் பதிலாகக் குடியாட்சியை நிறுவுகிறாள். பாரதிதாசனின் இக்குறுங்காவியங்கள் பெண்களை போரில் ஈடுபடுத்துதல், சாதி எதிர்ப்பை மொழிதல், மன்னராட்சியை வெறுத்து மக்களாட்சியை நிறுவுதல் போன்ற தன்மைகள் மூலம் பாரதிதாசனின் பிரதிகள் ‘மரபு மீறலை’ நிகழ்த்தி இருக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘மீன்காரத்தெரு’ என்ற நாவலின் விமர்சனத்தில் ஜாகிர் ராஜாவை எழுத்தாளர் வண்ணநிலவனுடன் ஒப்பீடு செய்கிறார். மீன்காரத்தெருவில் நிலவும் ஆணாதிக்க நிலவரம். பெண்கள் உடல்களாக உபயோகிக்கப்படும் அவலம். முஸ்லீம்களுக்குள்ளேயே நிலவும் கலாசார ஒடுக்குமுறைகள், அனைத்தையும் நாவல் பேசுகிறது. சமூக அடுக்கில் கீழிருந்து மேலாக விரியும் ஒரு மாற்றுப் புனைவு என்று இந்த நாவலை ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார்.. இது சரியான பார்வையே.

ஒரு ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவலின் தலைப்போ என்று புத்தம் வீடு என்ற நாவல் வந்தபோது வாசகர்கள் நினைத்தார்கள். பின்பு ஆசிரியரின் பெயரைப் பார்த்து மலையாள மொழிபெயர்ப்பாக இருக்குமோ என்றும் யோசித்தார்கள். பின்புதான் அது ஒரு தமிழ் நாவல் என்று தெரிந்தது. அதன் இடம் தமிழில் முக்கியமானது என்றும் தெரிந்தது.  அந்த நாவலைப் பற்றிச் சொல்வதென்றால் பெரிய வீட்டுப் பெண் லிஸிக்கும், பனையேறி வீட்டுப்பையன் தங்கராஜ் ஆகிய இருவுக்கும் இடையே வந்த காதலும், அதன் விளைவாக நிகழும் போராட்டங்களும் என்று சொல்லலாம்.

உன்னைபோல் ஒருவன் என்ற திரைப்படத்தின் விமர்சனத்தையும் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒரு புது முயற்சியை இந்தப் படம் எடுத்துக் காட்டியது. இது ஒரு புது முயற்சி. அவ்வளவுதான்.. இதைப்பற்றிப் பேசும் போது,’சமூக மாற்றத்துக்குப் பாடுபட்டு வரும் போராட்ட இயக்கங்களின் பங்களிப்பைப் பற்றி இப்படம் ஏன் மௌனம் சாதிக்கிறது? என்று கேட்பது அழகியல் ஃபாசிசம் (aesthetic facism). தன்னுடைய கதை, கதாபாத்திரங்கள், வசனம், இயக்கம் போன்ற எல்லாமே ஒரு இயக்குநர் என்ற கலஞனின் தேர்வு சார்ந்தது. அதில் அவன் என்ன பிழை செய்திருக்கிறான் என்பதுதான் ஒரு விமர்சகனின் வேலை. அந்த ‘அது’ ஏன் அப்படி இல்லை. இந்த ‘இது’ ஏன் இப்படி இல்லை என்று குற்றம் சாட்டுவது தன் விருப்பத்தை ஒரு பிரதியின் மேல் திணிப்பதாகும். அது ஒரு வன்முறை.  அது இந்த விமர்சனத்தில் நிகழ்கிறது.

சொல்லாத சேதிகள் என்ற ஈழப்பெண்களின் கவிதைத் தொகுப்பு, சல்மாவின் சாபம் சிறுகதைத் தொகுப்பு, குறித்த விமர்சனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. குடும்ப நிறுவனமும் சரி, புற உலகும் சரி பெண்களை விரோத பாவத்துடனேயே கண்காணிக்கின்றன என்கிற கசப்பான உண்மையை எடுத்துரைக்கின்றன.

வெ.இறையன்புவின் சாகாவரம் நாவல், மரணத்தைப் பற்றிப் பேசுகிறது. ’மரணம் நிச்சயம் என்று ஆனபின்பு வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?’ என்கிறது இருத்தலியம். இறையன்புவின் நாவலோ ‘சாவாமை சாபம்’ என்கிறது.

ரேவதி என்கிற அரவாணியின் முதல் நூலைப் பற்றிய தனது விமர்சனத்தை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காலங்காலமாக அரவாணியர் மேல் இருந்த பயம் கலந்த வெறுப்புணர்வை இந்த நூல் போக்குகிறது என்கிறார். இந்த நூல் அரவாணிகளை சரிநிகர் சமானமாக நடத்த வேண்டும் என்று கோருகிறது. இன்னும் இரண்டாவது பாலினமான பெண்ணே ஆணுக்கு சரிநிகர் சமானமாக நடத்தப்படவில்லை எனும் போது மூன்றாம் பாலினமான அரவாணிகள் அந்த இலக்கை எப்போது எட்டுவார்களோ, தெரியவில்லை.

ஆர்.சூடாமணி குடும்பம் என்ற நிறுவனத்தின் மேல் வெறுப்புக் கொண்டவர். ஐரோப்பியப் பெண்ணியவாதிகளைப் போல்,’நான் தனி, என் உணர்வுகள் தனி. எனக்குக் குடும்பமும், கணவனும், குழந்தையும் வேண்டாம்’ என்ற கொள்கை கொண்டவர். தனது கருத்தின் சாயலில் யாமினி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, ‘இரவுச்சுடர்’ என்ற நாவலை எழுதி இருக்கிறார். யாமினி ஒரு புரட்சிப் பெண். மற்றவர்களால் புரிந்து கொள்ள்ப்பட இயலாதவள். அவளுக்குத் திருமணம் நடக்கவே செய்கிறது. ஆனாலும், அவளாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. கணவனையும் மகிழ்ச்சி அடைய விடுவதில்லை. இறுதியில் அவள் இறந்தும் போகிறாள். பெண்ணிருப்பின் பூரணத்துவத்துக்கு இவளைப் போன்ற பெண்களும் தேவைப்படுகிறார்கள் என்கிறார் ஆசிரியர். அது என்ன ’பெண்ணிருப்பின் பூரணத்துவம்’ என்று தெரியவில்லை.

இத்தொகுப்பின் அடுத்த கட்டுரையாக கவிஞர் இன்குலாப்பின், இன்குலாப் கவிதைகள் இடம் பெற்றுள்ளது. ‘சரிநிகர் சமானமான புதுத் தமிழ்ச்சமூகத்தைக் கட்டி எழுப்பும் ஓர் இலக்குடன் இன்குலாப்பின் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன’ என்று கண்டு சொல்லும் ஆசிரியர் ‘தமிழ்ச்சமூகத்தில் உருவாக வேண்டிய புதிய புரட்சிகரமான மாறுதல்களுக்கான உந்து விசைகளாய்’ இன்குலாப் கவிதைகள் திகழ்வதாக’ கருத்துரைக்கிறார். அவற்றில் உண்மையில் ‘கவிதை’யாக இருப்பது எத்தனை, வெறும் பிரசாரங்களாக இருப்பது எத்தனை என்பது பற்றிப் பேசவில்லை.

இறுதியாக சங்க இலக்கியத்தில் ‘ஒரு பாடல் மட்டுமே எழுதிய பெண்பாற்புலவர்கள்’ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. புறநானூற்றில் மொத்தம் 17 பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.  அவர்களால் பாடப்பட்ட பாடல்கள் 62. இவர்களில் ஒரு பாடல் மட்டும் பாடிய புலவர்கள் பத்து பேர். அவர்கள் எழுதிய அந்தப் பாடல் எது, அதைப் பற்றிய விவரணை என்ன ஆகியவற்றை கட்டுரை விரித்துரைக்கிறது.இது ஒரு நல்ல கட்டுரை என்றே சொல்லலாம்.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை அகநானூறு கூறும் பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இறுதிக் கட்டுரை புறநானூறு தெரிவிக்கும் பெண்பாற்புலவர்கள் பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறது. இது ஒரு நல்ல உத்தி என்று சொல்லலாம்.

எழுத்து இரண்டு விதம். ஒன்று எடுத்துரைப்பு விவரணை (Descriptive narrative)  இரண்டு கேள்விக்குள்ளாக்கும் விவரணை (Interrogative narrative) நவீன பிரதிகள் யாவும் எடுத்துரைப்பு விவரணை என்ற பிரிவைச் சேர்ந்தவை. உள்ளதை உள்ளபடி விவரிப்பவை அவை. பின் நவீன பிரதி என்பது கேள்விக்குள்ளாக்கும் பிரதியாகும். இவை வெறுமனே கதையை மட்டும் விவரித்துவிட்டுப் போகாது. எடுத்துக்காட்டாக கல்கியின் பிரதிகள் எடுத்துரைப்புப் பிரதிகள். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ போல் எழுதப்பட்ட பிரதிகள் கேள்விக்குள்ளாக்கும் பிரதிகள். இவை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும்.

விமர்சனமும் அப்படியே. இருப்பதை அப்படியே எடுத்துரைப்பது நவீன விமர்சனம். சொல்லப்பட்டதைத் தாண்டி ஒளிந்திருக்கும் பிரதியின் அரசியலை வெளிப்படுத்துவது. தகர்ப்பு விமர்சனம். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது பெரும்பாலும் நவீன விமர்சனமே. படித்ததை அப்படியே பகிர்ந்து கொள்ளும் போக்கு இதில் இருக்கிறது. எனினும், நூலாசிரியரின் கூர்மையான பார்வையும், பிரதிகளை அலசும் முறையும் சில இடங்களில் தகர்ப்பு விமர்சனமாகவும் இருக்கிறது. இது முக்கியமானது. இதுதான் இந்த நூலை முக்கியமான வரவாக்குகிறது..
                     <><><><><>




Friday, March 13, 2015

on every saturday

ஒரு பழைய

செய்தியும்

ஒரு புதிய

செய்தியும்

jothi singh
*
எம்.ஜி.சுரேஷ்
 *

ரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன்புணர்ச்சிக்கு ஆளானாள். கொலையும் செய்யப்பட்டாள். அந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அனைவருக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டுவிட்டன. இது பழைய செய்தி.

     இப்போது இது தொடர்பாகப் பல புதிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

     லண்டனைச் சேர்ந்த லெஸ்லி வுட்வின் என்னும் ஆவணப்பட பெண் இயக்குநர், இதை ஒரு 60 நிமிடம் ஓடும் படமாக எடுத்திருக்கிறார். அந்தப் படத்தில் பலருடைய நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தச் சம்பவத்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட பலருடைய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில்தான் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி மாணவியின் பெயர் ஜோதி சிங் பாண்டே என்றும், அவளது பெற்றோரின் பெயர்கள் பத்ரிசிங் பாண்டே, ஆஷா சிங் பாண்டே என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதுவரை மறைக்கப்பட்டு இருந்த அவளின் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

     இந்த ஆவணப்படத்தில் முக்கியக் குற்றவாளியான முகேஷ் சிங் என்பவனின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. தான் செய்த காரியத்துக்கு அதில் அவன் வருத்தம் தெரிவிக்கவில்லை. பதிலாக, ‘அந்தத் தருணத்தில் அந்தப் பெண் எதிர்ப்புக் காட்டாமல் கற்பழிப்புக்கு இணங்கி இருந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இனி கற்பழிக்கப்படும் பெண்களை குற்றவாளிகள் கொன்று விடுவார்கள்’ என்ற ரீதியில் பேசி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேட்டியின் சில பகுதிகள் சமூக வலைத்தளங்களிலும் சுற்றுக்கு விடப்பட்டு, எதிர்ப்பு வரவே, பின்னர் அகற்றப்பட்டுவிட்டன. இந்தப் படத்துக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. இந்தத் தடை பற்றிப் பொருட்படுத்தாமல் லண்டன் பிபிசி குதூகலமாக ‘இந்தியாவின் மகள்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆவணப்படத்தை  ஒளிபரப்பி இருக்கிறது.

இப்போது ஊடகங்களில் இந்தப் படத்துக்கு இந்தியா தடை விதித்தது சரியா தவறா என்ற ரீதியில் விவாதங்கள் சூடு பறக்கின்றன. பாண்டி விளையாட்டு ஆடும் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு, ’ரைட்டா’ என்று கேட்டுவிட்டு ‘ரைட்டு’ என்று பதில் வந்ததும் கட்டங்களைத் தாண்டிக் குதிப்பார்கள். அத்தகைய பாண்டி ஆட்டம் ஊடகங்களில் ஆரம்பமாகிவிட்டது.

     இது ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தும் படம் எனவே, இதை எல்லோரும் பார்க்க வேண்டும், தடை விதிக்கக்கூடாது என்று ஒரு சாராரும், இந்தப் படத்தை அனுமதித்தால் இந்தியாவின் பெயர் கெட்டுப்போகும் என்று இன்னொரு சாராரும் விவாதமேடையில் ‘தொஜம்’ கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள்.

     ஒரு தொலைக்காட்சி சேனலில் பேசிய ஒரு தமிழ் ஆவணப்பட பெண் இயக்குநர், இந்தப் படத்தை ஒரு வெள்ளைக்காரர் எடுத்திருப்பதால் தடை விதிக்க வேண்டும். இந்தியர் எடுத்திருந்தால் அனுமதிக்கலாம் என்றார். இதை இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். அதே சேனலில் பேசிய இன்னொரு பெண் இந்த ஆவணப்படம் நம் கலாசாரத்துக்கு இழிவைத் தந்துவிட்டது என்றார். அதற்கு பதிலாக ஒரு சமூக ஆர்வலர், ‘கலாசாரம் என்றால் என்ன?’ என்று கேள்வி கேட்டு அனவரையும் திடுக்கிட வைத்தார். ஆக, அவரவர் சாமர்த்தியங்களைக் காட்டும் பட்டிமன்ற விவாதம் போல் அந்த நிகழ்ச்சி இருந்தது. சபாஷ், சரியான போட்டி!

     குற்றவாளியின் பேட்டி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சர்ச்சிக்க என்ன இருக்கிறது. ஒரு குற்றவாளி இப்படித்தான் பேசுவான். இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? அவன் கண்ணியமாகவும், நியாயமாகவும் பேசுபவனாக இருந்தால் இந்தக் குற்றத்தையே செய்திருக்கமாட்டானே. அவனிடம் கீதோபதேசத்தை எதிர்பார்ப்பது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா? அதைப் பெரிதுபடுத்தி ‘ஆணாதிக்க மனோபாவம்’, ‘பெண்ணடிமைத்தனம்’ என்றெல்லாம் பேசுவது, குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் புலமையைத்தான் காட்டுகிறது.

     இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த பிரிட்டிஷ் பெண்மணி இந்த ஆவணப்படத்தை சுதந்திரமாக எடுத்திருக்கிறார். பல முறை சிறைக்குச் சென்று கைதிகளைப் பேட்டி எடுத்து படப்பிடிப்பு செய்திருக்கிறார். அதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எடுத்த படத்தை எடிட் செய்து வெளியிடுவதற்குத் தயாராக இருந்திருக்கிறார். அப்போதும் எவ்விதத் தடையும் வரவில்லை. ஒருவேளை, எதிர்ப்பு கிளம்பாமல் இருந்திருந்தால், இந்த ஆவணப்படம் ’இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ ஒளிபரப்பப்பட்டும் கூட இருந்திருக்கும். யூ டியூப்பில் கசிந்துவிட்டதால், அதையொட்டி எழுந்த சலசலப்பில் இந்திய அரசு சுதாரித்துக் கொண்டுவிட்டது.

     இந்த நிகழ்ச்சியின் விளைவாக,  இப்போது நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன.

     பொதுவாக, குற்றம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியும் போலீஸைத் தாண்டி வெளியே வரமுடியாது. திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களைப் பற்றிய செய்திகள் போலீசார் மூலமே பத்திரிகைகளுக்கு வழங்கப்படுகின்றன. சிறையில் இருக்கும் ஒரு கைதிக்கு ஒரு கடிதம் எழுதினால் அது அவனுக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது. சிறைக்காவலர்கள் தணிக்கை செய்தபின்பே அவனுக்குத் தரப்படும். அதே போல், அவன் எழுதும் கடிதங்களும் தணிக்கை செய்யப்பட்டே வெளியே அனுப்பப்படும். அது மட்டும் அல்ல, சிறைக்கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் செய்தித்தாள்களும் அப்படியே கிடைக்காது. தணிக்கை செய்யப்பட்டே தரப்படும்.

நிலைமை இப்படி இருக்க, ஓர் ஆவணப்பட இயக்குநர் காமிரா, விளக்குகள், உதவியாளர்கள் சகிதம் எப்படி ஒரு சிறைக்குள் நுழைய முடிந்தது? தடங்கல்கள் ஏதுமின்றி எப்படிப் படம் எடுக்க முடிந்தது? அவர் எடுத்த ஆவணப்படத்தை எப்படி சிறையிலிருந்து பத்திரமாக வெளியே எடுத்து வர முடிந்தது? அதில் ஆட்சேபகரமான பகுதிகள் இருப்பின் அதை ஏன் முன்னதாகவே இவர்கள் தணிக்கை செய்யவில்லை? அப்படிச் செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்பது வேறு விஷயம். அதை நான் ஆதரிக்கமாட்டேன். பிரச்சனை என்னவென்றால், முதலில் அசட்டையாக இருந்து விட்டு, கடைசியில் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது ஏன்? என்பதுதான்.

     இதுவரை சிறையிலிருந்து கைதிகள் தப்பிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். சிறையிலிருந்து ஒரு கைதியைப்பற்றிய ஆவணம் தப்பித்திருப்பதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.

     இந்த ஆவணப்படத்தைப் பற்றி விவாதிக்கும் யாருமே இந்த அபத்தத்தைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. ஒருவேளை, இந்தியாவிலே இதெல்லாம் சகஜமப்பா என்று நினைத்துவிட்டார்களோ? இதுதான் இந்த சம்பவத்தில் தெரியவரும் ஒரு புதியசெய்தி என்று எனக்குப் படுகிறது.

* * *    


Saturday, March 7, 2015

சனி தோறும் - எம் ஜி சுரேஷ் பக்கங்கள்

சமீபத்தில் ரஷ்யாவில் 
அதிபர் புதினுக்கு எதிராகக் 
கருத்துகளை விதைத்த
எதிர்கட்சித் தலைவரான
போரிஸ் நெம்த்சோவ் 
படுகொலை செய்யப்பட்டார்.


கத்தரிக்கப்பட்ட 

சுதந்திரம்

**
எம்.ஜி.சுரேஷ்

மீபத்தில் சில தமிழ் எழுத்தாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது துரதிருஷ்டவசமானதே. தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. இனிமேலும், இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடலாகாது என்பதே என் விருப்பம். ஒரு பிரதி (text) பிரதிகூலமான சந்தர்ப்பத்தை (context) எதிர்கொள்ளும் தருணம் இது. எழுத்தைப் பற்றியும், கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய தருணமும் கூட.

இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் சிலர் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது என்று புகார் செய்கிறார்கள். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்ற விஷயம் எப்போதுமே நடைமுறையில் இருந்ததில்லை என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

பண்டைய ஏதென்ஸில் கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்த சாக்ரடீஸுக்கு, கருத்து சுதந்திரத்துக்கு பதிலாக, ஒரு கோப்பை ஹெம்லாக் விஷம் தரப்பட்டது.

மாவீரன் அலக்ஸாண்டரிடம் சுதந்திரமாகத் தன் கருத்தைக் கூறிய எழுத்தாளன் க்ளைட்டஸ் என்பவனுக்கு, கருத்துச் சுதந்திரத்தைத் தருவதற்குப் பதிலாக குத்தீட்டியால் கொல்லப்படும் தண்டனையைப் பரிசாகக் கொடுத்தான அலெக்ஸாண்டர்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது, ஃபிரான்ஸில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்று முச்சந்திகளில் நின்று பிரச்சாரம் செய்த ராபர்ட் ஸ்பியரும், மாரட்டும் அதே முச்சந்தியில் கில்லடின் எந்திரத்தின் மூலம் தலை துண்டிக்கப்பட்டார்கள். கூடவே சேர்ந்து அறுபட்டு விழுந்தது கருத்து சுதந்திரத்தின் தலையும்தான்.

ஹிட்லர் உயிருடன் இருந்த காலத்தில் ஜெர்மனியில் கருத்து சுதந்திரம் வழங்கப்படவில்லை. பதிலாக மரணதண்டனையும், வதை முகாம்களும் பரிசாக வழங்கப்பட்டன.

ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியனில் கேள்விப்படாத ஒரு விஷயத்தின் பெயர் கருத்து சுதந்திரம்.

பிரிட்டிஷ்கால இந்தியாவில் மகாத்மா காந்தி, பாரதியார் போன்ற பலர் அரசுக்கு எதிரான கருத்துகளை சுதந்திரமாகக் கூறியதாலும், எழுதியதாலும் சிறைக்குள் உலவ வேண்டி இருந்தது.

சரி, இதெல்லாம் சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கக்கூடிய விஷயம்தானே. நம் நாடு ஜனநாயக நாடு ஆயிற்றே இங்கு கருத்து சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும் என்று நம்மில் சிலர் நினைக்கக்கூடும். அங்குதான் நாம் தப்பு செய்கிறோம். முடியாட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, சோஷலிச ஆட்சி என்றெல்லாம் இல்லை. அதிகாரம் எங்கெல்லாம கோலோச்சுகிறாதோ அங்கெல்லாம் முதலில் தட்டிப் பறிக்கப்படுவது கருத்து சுதந்திரம்தான். ஜனநாயக இந்தியாவில் இந்திராகாந்தி அம்மையாரின் ஆட்சியின்போதுதானே அவசரநிலை பிரகடனம் அமுலுக்கு வந்தது? அப்போது பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. மேடைப்பேச்சுகள் கண்காணிக்கப்பட்டன. இந்திராவுக்கு எதிரானது எல்லாமே இந்தியாவுக்கு எதிரானது என்று உணர்த்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கூட ஒரு நாளேடு கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டதற்காகக் தாக்கப்படவில்லையா.

 சமீபத்தில் ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கருத்துகளை விதைத்த, எதிர்கட்சித்தலைவரான போரிஸ் நெம்த்சோவ் (படம்)  படுகொலை செய்யப்பட்டார். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்தானே?

அதிகாரம் கட்டமைக்கும் விழுமியங்களுக்கு எதிரான விழுமியங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. பேரலகான (macro unit) அரசு எந்திரம் முதல் நுண்ணலகான (micro unit) குடும்ப நிறுவனம் வரை எங்கும் அதிகாரம் கோலோச்சுகிறது. ஒருவன் அதிகாரத்திலிருந்து விலகி நிற்க முடியாது. ஒன்று அதிகாரத்தின் செலுத்தும் நுனியில் இருக்க வேண்டும். அல்லது பெறும் நுனியில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நுனியில் இருந்தே ஆக வேண்டும். எழுத்தாளனும் ஏதாவது ஒரு நுனியைச் சார்ந்து இயங்க வேண்டி இருக்கிறது. செலுத்தும் நுனியில் இருப்பவனது கருத்து சுதந்திரம் பட்டொளி வீசிப் பறக்கிறது. பெறும் நுனியில் இருப்பவனது சுதந்திரம் டார் டாராகக் கிழிந்து தொங்குகிறது. இதுதான் யதார்த்தம்.
    
எழுத்து என்பது எப்போதுமே மாலை நேரத்து விருந்தைப்போல் மகிழ்ச்சி   தருவதாக இருப்பதில்லை. சமயங்களில் அது வன்முறையாகவும் மாறி விடுகிறது. இதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தவிரவும், எழுத்து என்பது ஆசிரியனால் எழுதப்பட்ட போதிலும், அது ஆசிரியனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அது வாசகனுக்கும் சொந்தமானது. ஒரு பிரதியை அவன் எப்படி வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். அதை நாம் தடுக்க முடியாது. நாம் ஒன்றை எழுதுவோம். அவன் அதை வேறொன்றாகப் புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. கருத்து சுதந்திரத்தை விட நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் இதுதான். கருத்தே தவறாகப் புரிந்து கொள்ளப்படும் போது, கருத்து சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாக மாறிவிடும் அல்லவா? அப்போது ஒரு கேள்வி எழுகிறது. கருத்து சுதந்திரம் தேவைப்படுவது எழுத்தாளனால் எழுதப்பட்ட கருத்துக்கா அல்லது வாசகனால் புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்கா? சமயத்தில் நாம் எழுதும் எழுத்து எதற்காக எழுதுகிறோமோ அதற்கு எதிராக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது. எழுதுபவன் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

கருத்து சுதந்திரம் ஒருபோதும் சாத்தியப்படாத இந்த உலகில், கிளிக்கு சிறகுகளைக் கத்தரித்து அழகு பார்ப்பது போல், கத்தரிக்கப்பட்ட சுதந்திரத்தை வழங்கி அழகு பார்க்கும் அதிகாரத்திடம் நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

எது எப்படியோ, எழுத்தை எழுத்தாளன் ஆளவில்லை. எழுதப்பட்ட எழுத்துதான் அவனை ஆள்கிறது என்ற உண்மை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடைசியாக ஒரு விஷயம். கருத்து சுதந்திரம் என்பது பண்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு மனிதன் தன் சகமனிதனுக்குத் தரும் ஜனநாயக உரிமை. நாம் இன்னும் பண்பட்ட சமூகமாக மாறவில்லையோ, அரை காட்டுமிராண்டிகளாகவே (semi-barbarians) இருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது.