Friday, December 26, 2014

SHORT STORY
*
உ ரு மா ற் ற ம்
*
*
ம்.ஜி.சுரேஷ்

நான் அந்த மனநல மருத்துவரின் வரவேற்பறையில் அவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் காத்திருந்தார்கள். நல்ல வேளையாக எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கே வந்திருக்கவில்லை என்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது. வரவேற்பறை தூய்மையாக இருந்தது. டீபாயில் வார மாத இதழ்கள் சிதறி இருந்தன. அவற்றை யாரும் பொருட்படுத்தவில்லை. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணின் உடையும், அவள் சிரித்த போது வெளித்தெரிந்த பற்களும் தூய்மையாக இருந்தன. 

மருத்துவரின் அறையில் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வெறுமனே உட்கார்ந்திருப்பதில் சலிப்படைந்து டீபாயில் இருந்த ஒரு வார இதழை எடுத்துப் புரட்டினேன். படித்த உடனேயே மறந்து விடக்கூடிய விஷயங்கள் வண்ணப்படங்களுடன் அச்சிடப்பட்டிருந்தன. அதைப் போட்டு விட்டு இன்னொரு வார இதழை எடுத்தால், அது நாட்டின் ஊழல் பற்றியும், அரசியல்வாதிகளின் அலட்சியம் பற்றியும் ஆத்மவிசாரத்துடன் கவலைப்பட்டிருந்தது. தற்செயலாக ஒரு நாளிதழைக் கையில் எடுத்த எனக்குத் திகீர் என்றது. அதில் ஒரு வட இந்தியப் பல்கலைக் கழகப் பேராசிரியரின் படம் பிரசுரிக்கப் பட்டிருந்தது. சட் டென்று அந்த நாளிதழை மூடி வைத்தேன். வேறு யாராவது அதைக் கவனித்திருப்பார்களா என்று சுற்றிலும் பார்த்தேன். பின்னர்அந்த நாளிதழின்  மேல் பிற இதழ்களைக் குவித்தேன். வரவேற்பறை இளம் பெண் எனது செய்கையைக் கவனித்தாள். அது எனக்கு வெட்கம் தருவதாக இருந்தது.

அப்போது மருத்துவரின் அறையில் இருந்து  ஒரு இளைஞனும், அவனுக்குத் துணையாக வந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் வெளியே வந்தார்கள். அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. என்ன பிரச்சனையோ? இளைஞன் அழகாகத் தோற்றமளித்தான். அவனுக்கு மனக்கோளாறு இருப்பதாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

வரவேற்பறைப்பெண் என்னைப் பார்த்து, ‘நெக்ஸ்ட்’ என்றாள். வரவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசின மாதிரி தெரிந்தாள். உடனே வரவேற்பறையில் இருந்த அனைவரும் என்னையே பார்த்தார்கள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. சட்டென்று  நான் எழுந்து மருத்துவரின் அறையை நோக்கி நடந்தேன். என் முதுகைப் பார்வைகள் துளைப்பதை உணர்ந்தேன்.  அதைத் தவிர்க்க அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

நான் எதிர்பார்த்ததை விட  அறை சின்னதாக இருந்தது ஏமாற்றமளித்தது. ஒரு பெரிய அறை; அதில் ஒரு பெரிய மகாகனி மேஜையின் பின்னால் மருத்துவர் அமர்ந்திருப்பார்; அவருக்குப் பக்கவாட்டில் ஒரு சாய்வு நாற்காலி; அதன் பின்னால் ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கும்; மருத்துவரின் முதுகுக்குப் பின்னால் சுவரில் ஃப்ராய்ட், குஸ்தாவ் யங் போன்றோரின் புகைப்படங்கள் தொங்கியபடி புன்னகைக்கும் என்றெல்லாம் நினைத்தபடி உள்ளே நுழைந்த என்னை ஒரு குட்டி அறை வரவேற்றது. அதில் ஒரு குட்டி மேஜை போடப்பட்டிருந்தது. அதன் பின்னால் மருத்துவர் பிளாஸ்டிக் நார் பின்னப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.  எதிரில் இருந்த மரநாற்காலி எனக்காகக் காத்திருந்தது. மருத்துவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகை செய்தேன். அவர் சைகைக்குப் பணிந்து மரநாற்காலியில் உட்கார்ந்தேன்.

‘இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் மருத்துவர். ‘எதில் பயப்பட ஒன்றும் இல்லை’ என்று நினத்தபடியே நானும் பதிலுக்கு அசட்டுத்தனமாகச் சிரித்தேன். 

‘பலர் நினைப்பது போல் மனப்பிறழ்வு என்பது ஒரு நோயே அல்ல; நம் உடம்பில் உள்ள திரவங்களில் சமனிலை குலையும் போது சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை வரும் போது அதை டயபடீஸ் என்கிறோம். அதே போல் தைராய்ட், ஆண்ட்ரோஜன், எஸ்ட்ரோஜன் திரவங்கள் சரியான முறையில் சுரக்காவிட்டால் அதை அந்தந்த வியாதி  என்று சொல்லி விடுகிறோம். மனநலமும் சுரப்பிகள் சம்பந்தப் பட்ட்தே. நம் உடலில் செரடோனின் என்ற திரவத்தின் சமனிலை வித்தியாசப்ப்படும் போது நமது மன்நிலை பாதிக்கப்படுகிறது. அதை மனநோய் என்கிறோம். மாத்திரைகள் மூலம் அதை சரி செய்து விடலாம்’ என்றார் மருத்துவர்.

நான் விரக்தியாகச் சிரித்தேன். இது செரடோனினையே மிஞ்சும் பிரச்சனை என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.

‘சரி உங்கள் பிரச்சனை என்ன? சொல்லுங்கள் சரி செய்துவிடலாம்’ என்றார் மருத்துவர் தீவிர நம்பிக்கையோடு.

எனக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ‘சரி செய்யக்கூடிய பிரச்சனையா என்னுடையது?’ என்று நினைத்துக் கொண்டேன்.

 ’என்ன யோசனை? சொல்லுங்கள். சொன்னால்தானே நான் உங்களுக்கு உதவ முடியும்?’ என்று ஊக்குவித்தார் மருத்துவர்.

சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.ஆனால்,  நடப்பது என்னவோ உண்மை. போன வாரத்திலிருந்துதான் இப்படி நடக்க ஆரம்பித்திருக்கிறது. துல்லியமாகச் சொல்வது என்றால், போன வாரம் எதிர்த்த வீட்டு லக்‌ஷ்மணன் வந்து பேசிய போதுதான் அது நடந்தது.

லக்‌ஷ்மணன் வானிலை மாற்றம் பற்றிப் பேசியதாக ஞாபகம். ‘சரியான வெய்யில்’, ‘முன் கத்திரி’, ‘பின் கத்திரி’ போன்ற சொற்களைப் பிரயோகித்தார். நானும் பதிலுக்கு ஆமோதித்தேன். அதே அலைவரிசையில் பேசினேன்.  அந்த நிமிடத்தில் அவர் என்ன சொன்னாலும் நான் ஆமோதிக்கத் தயாராக இருந்தேன். அந்த மனநிலை எனக்கு வியப்பளிப்பதாக இருந்தது. நான் எப்போதுமே அவர் என்ன சொன்னாலும் எதிர்ப்பு தெரிவிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பவன். அப்படி இருக்கையில் இப்போது மட்டும் ஏன் அவருக்கு நான் தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த போதே என்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வதை நான் உணரலானேன்.

 நான் ஒல்லி ஆசாமி. சதா முகச்சவரம் செய்து முகத்தைப் பளபள என்று வைத்துக் கொண்டிருப்பேன். லக்‌ஷ்மணனோ மரண குண்டு. ஆட்டைப் போல ஒரு குறுகிய தாடி வேறு வைத்திருப்பார். அவர் அருகில் இரண்டு அடி இடைவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று  என்னுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக உப்ப ஆரம்பித்தது. என் மோவாயில் ஆட்டுத்தாடி முளைக்க ஆரம்பித்தது. லக்‌ஷ்மணன் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். சட்டென்று பின் வாங்கினார். சொல்லாமல் கொள்ளாமல் நடையைக் கட்டினார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. வராந்தாவில் இருந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்தேன். எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு மனிதனாக எனக்கே நான் தெரிந்தேன். லக்‌ஷ்மணனைப் போன்ற குண்டு உடலும், ஆட்டுத்தாடியுமாக நான் இருந்தேன். எனக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தேன்.  கொஞ்ச நேரத்துக்குப் பின் என் உடல் பழையபடி மாற ஆரம்பித்தது. கால் மணி நேரத்தில் நான் பழைய ஆசாமியாக மாறிவிட்டேன்.  அனிச்சையாக எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன். கலவரத்துடன் இரண்டு கண்கள் என்னை வெறித்தன. லக்‌ஷ்மணனின் மனைவி.

வாசற்கதவைச் சாத்தினேன். நேராக நிலைக்கண்ணாடி முன் போய் நின்றேன். என்னை ஒரு தரம் மேலிருந்து கீழே பார்த்துப் பரிசீலனை செய்தேன். என் உடல் எப்போதும் இருப்பது போல் இயல்பாக இருந்தது.

அன்றொரு நாள். நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். சரியான கூட்டம். உட்கார இடமின்றி நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. சிலர் இறங்கினார்கள். சிலர் புதிதாக ஏறினார்கள். ஏறியவர்களுள் ஒருவர் போலீஸ் அதிகாரி. அவர் நேராக வந்து என் அருகே நின்றார். அவரது காக்கி சீருடையின் வாசனை என் மூக்கில் வந்து மோதும் அளவுக்கு அவர் எனக்கு வெகு அண்மையில் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு உள்ளூர உதறல் எடுத்தது. அவர் என்னை ஒரு முறை உற்றுப் பார்த்த மாதிரி இருந்தது. எனக்குப் பகீர் என்றது. உடனேயே என்னுள் ஒரு வேதியல் மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். என் உடல் படிப்படியாக அவரைப் போலவே மாறிக் கொண்டிருந்தது. திடுக்கிட்ட நான் உடனடியாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, பேருந்தில் நிகழ இருந்த ஒரு குழப்பத்தைத் தவிர்த்தேன்.  

இன்னொரு நாளும் அப்படித்தான். அதிகாலை நேரம். நான் குடியிருந்த பிராந்தியத்தில் இருந்த ஒரு சிறு பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னாலும் பின்னாலும் பலர் நடந்து போய்க்கொண்டிருந்தனர். அப்போது எனக்குப் பின்னாலிருந்து ஒரு மனிதர் என்னை வேகமாகக் கடந்தார். தற்செயலாக என்னை ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். அவர் நெற்றியில் பட்டையாகத் திருநீறு அணிந்திருந்தார். அதன் குறுக்கே சிவப்பு நிறத்தில் சூலம் வரையப் பட்டிருந்தது. அந்தக் கணத்தில் அந்த விபூதியும், சூலமும் என்னுள் இனம் புரியாத கலவரத்தை ஏற்படுத்தின. அடுத்த கணமே அந்த மனிதரைப் போல் என் தோற்றம் மாற ஆரம்பித்தது. உடனே நான் நடைப்பயிற்சியை நிறுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். நான் வீடு போய்ச் சேர்வதற்கும் எனது பழைய தோற்றம் வருவதற்கும் சரியாக இருந்தது.  என் மனைவி என்னைக் குழப்பமாகப் பார்த்தாள். ‘என்ன, அதற்குள் வந்து விட்டீர்கள்? வாக்கிங் போகவில்லையா’ என்று கேட்டாள். நான் பதிலேதும் சொல்லவில்லை.

நடந்ததையெல்லாம் மருத்துவரிடம் சொன்னேன். ‘இதுதான் டாக்டர் என் பிரச்சனை’ என்றேன். அவர் சிரித்தார். ‘இது ஒரு மனோபாவம். தட்ஸ் ஆல்’ என்றார்.

‘என்ன காரணத்தினாலோ நீங்கள் இன்னொருவராக மாற விரும்புகிறீர்கள். அந்த விழைவில் உங்கள் மனம் உங்களை அந்த இன்னொரு நபராக நினைத்துப் பார்க்கிறது. இதில் பயப்பட ஒன்றும் இல்லை. இதை மல்டிபிள் பர்சனாலிடி சிண்ட்ரம் என்பார்கள். இதை சரி செய்து விடலாம்’

‘ஐயோ டாக்டர், நான் இன்னொரு நபராக என்னை மனதளவில்  நினைத்துப் பார்க்கவில்லை. அந்த நபராக உண்மையிலேயே உடல்ரீதியாகவே மாறி விடுகிறேன்’

அவர் நம்பாமல் சிரித்தார்.

‘காந்தியை கோட்ஸே சுட்டபோது நீங்கள் மட்டும் காந்தியின் பக்கத்தில் நின்றிருந்தால் நீங்கள் காந்தியைப் போல் மாறி இருந்திருப்பீர்கள். கோட்ஸே இரண்டு காந்திகளில் யார் அசல் காந்தி என்று தெரியாமல் குழம்பிப் போய் சுட முடியாமல் திரும்பிப் போய் இருப்பான். காந்தி சாகாமல் இருந்திருப்பார்’ என்று ஜோக் அடித்தார். என் நிலைமை தெரியாமல் இப்படி அவர் ஜோக் அடித்ததில் எனக்கு வயிறு எரிந்தது.

‘டாக்டர் பீ சீரியஸ். உங்களிடம் ஜோக் கேட்டு சிரிக்க வரவில்லை. மருத்துவ உதவிக்காக வந்திருக்கிறேன்’ என்றேன் கடுமையாக.

‘ஸாரி’ என்றார்.  சீரியசாக மாறினார்.

 என்னையே வெறித்துப் பார்த்தார். நான் சொல்வதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை என்று தோன்றியது. தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். தனக்குள் வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டார். பின்பு எழுந்து நின்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றார். எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. நான் அவரையே பார்த்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்தேன்.

‘சில சமயம் பிரமைகள் உண்மை போலவே தோன்றும்’ என்று ஒரு வேதாந்தி போல் சொன்னார்.

பின்பு என்னிடம் திரும்பி நின்று, ‘இப்படி நீங்கள் உருமாறும் போது கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘பார்த்திருக்கிறேன். என் உருவம் மாறி இருப்பதை நான் என் கண்களால் பார்த்துப் பயந்ததனால்தானே உங்களிடம் வந்திருக்கிறேன்’

மருத்துவர் என்னை நம்பவில்லை போல் தோன்றியது.

மருத்துவர் என்னை நம்பாமல் போனதில் எனக்குள் ஒரு வித மனநெருக்கடி உண்டாயிற்று. உள்ளுக்குள் ஒரு ‘திகீர்’ பரவியது. உடனே எது நடக்கக்கூடாது என்று விரும்பிக்கொண்டிருந்தேனோ அது நடக்க ஆரம்பித்து விட்டது.

நான் படிப்படியாக அந்த மருத்துவர் போலவே உருமாற ஆரம்பித்தேன். மருத்துவருக்கு முன் வழுக்கை. என் முன் மண்டையில் மயிர் உதிர ஆரம்பித்தது. அவருக்குக் குழி விழுந்த கன்னங்கள். என் கன்னங்கள் இரண்டிலும் குழி விழுந்தன. அவரது தொப்பை, வலசைக்கால்கள், குடை காதுகள் என்று அவரது சகல அடையாளங்களையும் நான் வரித்துக் கொண்டு விட்டேன்.  மருத்துவர் ஆடிப்போய் விட்டார்.

‘திஸ் ஈஸ் அன்பிலீவபிள்’ என்றார். ரோபோ போல் என்னருகில் நடந்து  வந்து ‘எக்ஸ்கியூஸ் மி’ சொல்லிவிட்டு என்னைத் தொட்டுப் பார்த்தார். தடவிப்பார்த்தார். ‘இன்க்ரடிபிள்’ என்றார்.

‘இதுதான் டாக்டர் என் பிரச்சனை’ என்று நான் சொன்னபோது என் குரல் அவர் குரலாக ஒலித்தது. இதனால் இருவருமே திடுக்கிட்டோம்.

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. எங்கள் இருவருக்குமே என்ன பேசுவது என்று தோன்றவில்லை. சூழலின் இறுக்கம் தளர்ந்ததும் நான் பழையபடி நானாக மாற ஆரம்பித்தேன். ஒரு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படத்தில் வரும் கிராஃபிக் காட்சியைப் பார்ப்பது போல் நான் மாறுவதையே மருத்துவர் வாய் பிளந்து பார்த்தார். பின்னர் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தம்ளரை எடுத்து அதிலிருந்த தண்ணீரை மட மடவென்று குடித்தார். ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

கொஞ்ச நேரம் யோசித்தார். பின்பு என் கண்களைப் பார்த்துப் பேசினார்.

‘காஃப்கா என்ற  ஜெர்மன் எழுத்தாளர் ‘உருமாற்றம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி இருக்கிறார். அதில் வரும் கதாநாயகன் ஒரு வேலை இல்லாத இளைஞன். சதா தன் தந்தையால் புறக்கணிக்கப்படுபவன். தந்தையின் புறக்கணிப்பு, எதிர்காலம் குறித்த பயம், தன்னையே நிந்தித்துக் கொள்ளல் போன்ற நெருக்கடிகள் அவனை வாட்டி வதைக்கின்றன. ஒரு நாள் இரவு தூங்கப் போனவன் மறுநாள் காலை விழித்துப் பார்க்கும் போது ஒரு பிரமாண்டமான கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிறான். அவன் மனிதனாக இருந்த போதே அவனை அவன் குடும்பத்தினர் ஒரு கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போல் அருவருப்பாகத் தான் பார்த்தார்கள். இப்போது அவன் அசல் கரப்பான் பூச்சியாகவே மாறிவிட்ட பிறகு என்ன செய்வார்களாம்? ‘ என்ற ரீதியில் கதை நகரும்.

இந்த இன்ஸ்பிரேஷனில் ஹாலிவுட் டைரக்டர் உடி ஆலன் ‘ஜெலிக்’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்தார். ஹிட்லர் காலத்துப் பின் புலத்தில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் வரும் கதாநாயகன் ஒரு யூதன். ஹிட்லரால் சித்திரவதை செய்யப்பட்டு யூதர்கள் செத்துக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவன். அவனுக்கும் இதே பிரச்சனை வருகிறது. திடீரென்று ஒரு நாள் அவன் யாரைப் பார்த்தாலும் அவரைப் போலவே மாறிவிடுகிறான். ஹிட்லர் யூதர்களுக்குக் கொடுத்த நெருக்கடி அவனை இது போல் சுய அடையாளத்தை இழக்கச் செய்து விட்டது என்ற ரீதியில் அவர் கதை சொல்லி இருந்தார். இப்போது உங்கள் பிரச்சனை என்ன என்று தெரிகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வேண்டும்’ என்று தனது சிற்றுரையை முடித்து விட்டு என்னைப் பார்த்தார் மருத்துவர்.

நான் மௌனமாக இருந்தேன். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு கணம் தடுமாறினேன். பின்பு சொன்னேன்.

‘டாக்டர், பொதுவாக எனக்குப் பயங்கரவாதம் என்றாலே குலை நடுக்கமாக இருக்கிறது. தினமும் பத்திரிகை, டீவி, சினிமா என்று எதைப் பார்த்தாலும் பயங்கரவாத்ததைப் பற்றியே பேசுகின்றன. இது என்னை சதா பதற்றத்தில் ஆழ்த்துகிறது’

‘சரி’

‘அந்தப் பதற்றம்...அதைத் தொடர்ந்து வரும் அதீத பயம்...’

‘யெஸ், பானிக் அட்டாக்ஸ்’ 
‘இதெல்லாம்தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று நினைக்கிறேன் டாக்டர்’

‘சரி, நீங்கள் ஒரு பயங்கரவாதியா?’

‘ஐய்யய்யோ, இல்லை டாக்டர்’

‘உங்களுக்கு வேண்டிய யாராவது பயங்கரவாதியாக இருக்கிறார்களா?’

‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’

‘பிறகு ஏன் பயங்கரவாதம் பற்றிப் பேசினாலே உங்களுக்குப் பயம் வருகிறது?’

’முன்பெல்லாம் நான் நன்றாகத்தான் இருந்தேன் டாக்டர். மும்பை குண்டு வெடிப்புக்குப் பின் என் மன நிம்மதி குலைந்து விட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தைப் பிறர் சந்தேக பாவத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் வன்முறைச்சம்பவங்கள்; அதைப் பெரிது படுத்தும் மீடியாக்கள்; முஸ்லீமகளை பயங்கரவாதிகளாகக் காட்டும் திரைப்படங்கள் போன்றவை முஸ்லீம் சமூகத்தினரை விரோத பாவத்துடன் பார்க்குமாறு தூண்டுகின்றன. இதுதான் என் பிரச்சனைக்கு மூல காரணம்’

‘சரி. இதற்கும் உங்கள் உருமாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?’

‘இருக்கிறது டாக்டர். ஒரு நாள் பயங்கரவாதி என்று கருதப்படும் ஒரு நபரின் புகைப்படத்தைப் பிரசுரித்து அவனை போலீஸ் தேடுவதாகச் செய்தித் தாளில் செய்தி வந்திருந்தது. அதே புகைப்படத்தை டீவியிலும் காட்டினார்கள். அன்று முதல் எனக்கு இந்தப் பிரச்சனை ஆரம்பித்து விட்டது’

‘ஏன்? அப்படி அந்தப் புகைப்படத்தில் என்ன பிரச்சனை?’

‘அந்தப் புகைப்படத்தில் இருந்த அந்த நபர் பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தான். என் மனைவியும் குழந்தைகளும் கூட , ‘அவன் தான் நீங்கள் என்று பிடித்துக் கொண்டு விடப்போகிறார்கள்’ என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். அவர்கள் விளையாட்டாகச் சொன்ன போதிலும் அது எனக்குள் திக்கென்றது. தொடர்ந்து திகில் வந்தது.  எப்போது வீட்டை விட்டு வெளியே போனாலும், யாராவது என்னையே உற்றுப் பார்ப்பது போல் தோன்றும். இதோ இந்த ஆள் என்னைப் பார்த்து விட்டான். என்னைப் பின் தொடர்ந்து வரப்போகிறான். என்றெல்லாம் தோன்றும். சில சமயம் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடப்பேன். இது முற்றிப் போய் ஒரு நாள் இப்படி மாற ஆரம்பித்தேன். இப்பொதெல்லாம் நான் வெளியே போவதையே விட்டு விட்டேன். ஆஃபீசுக்குக் கூட லாங் லீவ் போட்டு விட்டேன். வீட்டில் அடைந்து கிடக்கிறேன்’

’ஓகே.  இது தகவமைப்பு. பரிணாம வளர்ச்சியில் மண்புழு மனிதனாக உருமாறியதற்கே இந்தத் தகவமைப்புதான் காரணம். நீங்கள் அந்தப் பயங்கரவாதியைப் போல் இருந்ததால்,  நான் அவன் இல்லை என்று நிரூபிக்கும் பொருட்டு நீங்கள் உங்களை வேறு மாதிரி மாற்றிக் கொள்ள விரும்பி இருக்கிறீர்கள். உடனடியாக எதிரில் இருந்த நபர் போலவே மாறி இருக்கிறீர்கள்.’ என்றார் டாக்டர்.

’இருக்கலாம்’ என்றேன்.

‘அது சரி, அந்தப் பயங்கரவாதி யார்?

‘அவன் பெயர் அப்துல் சமத். வட இந்தையப் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறான். பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்த உதவியவர்களில் அவனும்  ஒருவன் என்று அரசு அறிவித்திருக்கிறது.’

ஆமாம், நான் கூட பேப்பரில் பார்த்தேன்....’

மருத்துவர் ஒரு கணம் யோசித்தார்.  பின்பு சொன்னார்.

‘எல்லாம் சரி. உங்களுக்கு வந்திருக்கும் இந்த வியாதி...வியாதி என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இந்த உருமாறும் விளைவு எப்படி ஏற்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதை அறிவியல் ரீதியாக விளக்க முடியாது. எனக்குத் தெரிந்து இதற்கு மருந்து மாத்திரைகளும் இல்லை’ என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. இதிலிருந்து நான் தப்பிக்கவே முடியாதா என்று ஏங்கினேன். காலம் முழுக்க இப்படியேதான் என் வாழ்க்கை கழிந்து விடுமோ....

‘டாக்டர், எனக்கு வேறு வழியே இல்லையா?’ என்று கெஞ்சினேன் பரிதாபமாக. என் நிலைமையை நினைக்கையில் எனக்கே பாவமாக இருந்தது.

‘ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், ஒன்று செய்யலாம். உங்களுக்கு ட்ராங்க்விலைசர்கள் தருகிறேன். அவற்றை விழுங்கி விட்டு நிம்மதியாகத் தூங்கலாம். விழித்திருந்தால்தானே பிரச்சனை’

பின்பு மருத்துவர் சில மருந்து பாட்டில்களைக் கொடுத்தார்.  ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்றார்.  ‘தேங்க்யூ டாக்டர்’ என்றேன்.
ன் சொந்த ஊர் மதுரை. மதுரையில் தேர்முட்டி என்று வழங்கப்படும் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்திலிருந்து பாண்டிய வேளாளர் தெரு ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நேராகப் போனால் மீனாக்‌ஷி டாக்கீஸ் வரும். அதற்குச் சற்று முன்னதாக காஜிமார் தெரு குறுக்கிடும். அங்குதான் என் வீடு இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கூரைப்பள்ளிக் கூடத்தில்தான் நான் படித்தேன். அப்போதேல்லாம் இது போன்ற பிரச்சனைகள் ஏதும் இருந்ததில்லை. எங்கள் தெருவில் இந்துக்களின் மாரியம்மன் திருவிழாக்களும் நடக்கும். முஸ்லிம்களின் சந்தனக்குடம் திருவிழாவும் நடக்கும். யாருக்கும் எந்தப் பிரச்சனைகளும் வந்ததில்லை. எனக்கு இந்து, கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு. எங்கள் நட்புக்கு மதம் ஒரு குறுக்கீடாக இருந்ததே இல்லை. எனக்கு நாயுடு நண்பர்களும் உண்டு. நாயுடு சமூகத்தினரும் முஸ்லீம்களும் ‘மாமா’ ‘மாப்பிள்ளை’ என்று உறவு கொண்டாடிக் கொள்வோம். இதெல்லாம் எப்போது மாறியது. எதனால்? இப்போதெல்லாம் எங்களுக்குள் ஒரு மெல்லிய திரை தோன்றி இருப்பது போல் தோன்றுகிறதே, ஏன்?

மதத்தின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது மிகப் பெரிய தவறு என்றே தோன்றுகிறது. பிரிட்டிஷ்காரனிடமிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை கிறிஸ்தவனிடமிருந்து இந்துக்கள் பெற்ற சுதந்திரமாக அடையாளப்படுத்தவில்லை அல்லவா? அப்படி இருக்கும் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததை மட்டும் எப்படி மத அடிப்படையிலான பிரிவினையாக ஆக்கினார்கள்? இதனால்தானே இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்த்துக் கொள்ள நேர்ந்தது? இந்த வெறுப்பை மேலும் மேலும் ஊதி வளர்த்து இரண்டு நாட்டின் அரசியல்வாதிகளும் ஆதாயம் பெற்றதுதான் மிச்சம்.  இப்படியெல்லாம் யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

என் மனைவி என்னை கவலையுடன் எதிர்கொண்டாள்.  ’டாக்டர் என்ன சொன்னார்? என்றாள்.

‘இதை ஒண்ணும் பண்ண முடியாதாம்’

‘ஐயய்யோ’

‘அதனால் பயப்பட ஒன்றும் இல்லை. கொஞ்சம் மாத்திரை கொடுத்திருக்கிறார். சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமாம். விழித்திருந்தால்தானே பிரச்சனை. தூங்கிவிட்டால் ஒரு பிரச்ச்னையும் வராதே’ என்றேன் நான்.

அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்தவள் போல் தோன்றினாள்.

‘அப்படின்னா மாத்திரை மருந்தை சாப்பிட்டுட்டு பேசாம துங்குங்க’ என்றாள்.

‘சாப்பிட்டுட்டு சாப்பிட்டுட்டு தூங்குனா சோத்துக்கு என்ன பண்றது? என்றேன் எரிச்சலாக.

கொஞ்ச நாட்கள் கழிந்தன. இப்போதெல்லாம் பிரச்சனை ஏதும் வரவில்லை. வேளா வேளைக்குச் சாப்பிடுவது. மாத்திரைகளை விழுங்கி விட்டுத் தூங்குவது. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது. இதுதான் என் வாழ்க்கை. ஆஃபீஸுக்கு மட்டும் மருத்துவச் சான்றிதழ் அனுப்பி என் விடுப்பை நீட்டித்தபடி இருந்தேன்.
அதற்கும் ஒரு நாள் பங்கம் வந்தது. இரண்டு மாதங்கள் மட்டும்தான் சேர்ந்தாற்போல் மருத்துவ விடுப்பு எடுக்க முடியும், அதற்கு மேல் மருத்துவ விடுப்பு எடுத்தால் மருத்துவக் குழுவிடம் இரண்டாவது கருத்து கோரி நம்மை அனுப்பி விடுவார்கள்.  என்னை சென்னை அரசு மருத்துவமனக்குப் போய் அங்குள்ள மருத்துவக் குழு முன் ஆஜாராகும்படி நான் வேலை பார்க்கும் அலுவலகம் எனக்குக் கடிதம் அனுப்பி இருந்தது.

குறிப்பிட்ட தினத்தன்று நான் மருத்துவக் குழுவின் முன் போய் நின்றேன். மூன்று மருத்துவர்கள் அந்தக் குழுவில் இருந்தார்கள். குழுவின் தலைவர் மூலவியாதி வந்தவர் போல் சிடு சிடுத்தார்.

‘என்னய்யா பிரச்சனை உனக்கு?’ என்றார்?’

என்ன சொல்வது; எப்படிச் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.

‘என்னய்யா முழிக்கிறே? மொதல்லே வேலை இல்லாம திரியறது. ஏதாவது வேலை கெடக்காதான்னு ஏங்குறது. அப்புறம் வேலை கெடச்சதும் வேலைக்குப் போகாம மெடிகல் லீவ் போட்டுட்டு ஊரச் சுத்துறது.. சுத்த நான்சென்ஸ்’ என்று சீறினார்.

எனக்குக் கண்கள் கலங்கி நீர் கண்களை மறைத்தது.

‘சார் ... வந்து...’

‘என்னய்யா முழுங்கறே...வாயிலே என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே?’ என்றார் தலைவர் கோபமாக. உடனே பக்கத்திலிருந்த இன்னொரு பெண்மணி ‘சார், இவரு கொழுக்கட்டை திங்கற ஆளு இல்ல’ என்று கிசுகிசுத்தாள். உடனே என் மருத்துவச் சான்றிதழில் எழுதப்பட்டிருந்த என் பெயரைப் பார்த்துவிட்டு ஓ! என்று சொல்லிவிட்டு, ‘வாட் மேன், வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்? என்றார்.

நான் ஒன்றும் பேசாமல் நின்றேன்.

‘என்ன நாளைக்கே போய் வேலைக்கு சேர்ந்துடறியா?

‘இல்ல சார் எனக்குக் கொஞ்ச நாள் லீவ் வேணும்’

‘வாட். என்ன தைரியம். என் முன்னாடி நின்னுக்கிட்டு என் கிட்டேயே மெடிகல் லீவ் அதுவும் பொய் சர்டிஃபிகட் கேப்பே..ஹவ் டேர்’ என்று கூச்சலிட்டார்.
                
மறு வினாடி மள மளவென்று என் உருவம் அவரைப் போல மாற ஆரம்பித்து விட்டது. அவர் ஆறடி உயரம் கொண்ட ஆஜானுபாகு ஆசாமி. நானோ ஒல்லி ஆசாமி. சில வினாடிகளில் நான் அவரைப் போலவே முழுதும் மாறிவிட்டேன். மருத்துவக் குழு வாயைப் பிளந்தது. குழுத்தலைவர் இரத்த அழுத்த நோயாளி. அவருக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி மூக்கில் இரத்தம் வடிந்தது. இதில் கொடுமை என்னவென்றால் எனக்கும் இரத்த அழுத்தம் எகிறி என் மூக்கிலும் இரத்தம் வடிய ஆரம்பித்தது.

வாயடைத்துப் போன மருத்துவக் குழு மறு பேச்சின்றி எனக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மருத்துவ விடுப்பை நீட்டித்து அனுமதி வழங்கியது.

இதற்குள் விஷயம் அரசல் புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பத்திரிகைக்காரர்களும், டீவிக் காரர்களும் என்னைத் தேடி வர ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பூந்தமல்லியில் இருந்த என் தங்கை வீட்டுக்குப் போய் ஒளிந்து கொண்டேன்.
 பூந்தமல்லியில் பகலெல்லாம் வீட்டில் முடங்கிக் கிடப்பேன். இரவில் மட்டும் வெளியே போய் நடமாடிவிட்டு வருவேன். அப்போது ஒரு நாள் அப்துல் சமத் கைது செய்யப்பட்ட விஷயம் பேப்பரில் வெளியானது. படுபாவி ஃபோட்டோவில் அப்படியே அச்சாக என்னைப் போலவே இருந்தான். அப்பாடா ஒருவழியாக அவனைப் பிடித்து விட்டார்கள். இனி எனக்குப் பிரச்ச்னை இல்லை என்றே தோன்றியது

மறுநாளே மன நல மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். பயங்கரவாதி கைதான தகவலைச் சொன்னேன். தானும் அந்தச் செய்தியைப் பேப்பரில் பார்த்து விட்டதாகவும், அப்போது என் ஞாபகம் வந்ததாகவும் சொன்னார். இனி எனக்கு இந்தப் பிரச்சனை வராது என்றும் அபிப்ராயம் தெரிவித்தார்.

கொஞ்ச நாட்கள் கழிந்தன.

அந்தப் பயங்கரவாதியைப் பற்றிய செய்திகள்தான் பேப்பரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவனை எப்படி, எங்கே போலீசார் சாமர்த்தியமாக வலை விரித்துப் பிடித்தார்கள் என்று விலாவாரியாக வண்ணப் புகைப்படங்களுடன் செய்திகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. அந்த மனிதனின் மனைவியை போலீசார் சித்திரவதை செய்த்தில் கர்ப்பிணியான அவளுக்கு அபார்ஷன் ஆன செய்தி என்னை என்னமோ செய்தது.

இப்பொதெல்லாம் எனக்கு உருமாற்றம் நிகழ்வதில்லை. அப்துல் சமத் போலீசில் சிக்கிக் கொண்டு விட்டதால் என் பதற்றம் விலகி நான் நார்மலாக மாறிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் என் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி பல நாட்களாகி விட்டன. எனது உருமாற்றம் உண்மையில் நடந்ததா அல்லது அது ஒரு கனவா என்று நினைக்கும் அளவுக்கு என் நிலைமை மாறி விட்டது. இப்போது என் ஜாகை பூந்தமல்லியிலிருந்து என் வீட்டுக்கே மாறி விட்டது.
ன்றைய தினத்தை ஒரு நல்ல நாள் என்றுதான் சொல்ல வேண்டும். என் தங்கை என் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுடைய இரண்டு வயதுக் குழந்தை அர்ஷியாவிடம் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவள் என்னிடம் ஓடி வந்து ஒரு நாளிதழைக் காட்டிச் சொன்னாள். ‘அண்ணா உன்னை மாதிரியே இருப்பானே ஒரு ஆள். அந்த ஆளை நிரபராதின்னு சொல்லி கோர்ட்லே விடுதலை பண்ணிட்டாங்க; இங்கே பாரேன்’ என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் உண்மைதான். என்னைப் போலவே இருந்து போலீசாரால் தேடப்பட்டுப் பின்னர் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுக் கிடந்த அந்த நபரை ஒரு வழியாக விடுவித்து விட்டார்கள். ஒரு பெரிய பாரம் நீங்கிய மாதிரி இருந்தது.

கண்கள் கலங்க கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

‘ஆமா, இப்ப நிரபராதின்னு சொல்லி விட்டுட்டாங்களே, அப்ப அந்த ஆள் இத்தனை நாள் ஜெயில்லே இருந்தது எவ்வளவு பெரிய வேஸ்ட்? பாவம் இல்லே அந்த ஆள்’ என்றாள் என் தங்கை.

‘அது மட்டும் இல்ல. தேவை இல்லாம அந்த ஆளோட பேரு, மானம், மரியாதை எல்லாமே கெட்டுப் போயிடுச்சு. அவரோட மனைவியை வேற  சித்திரவதை செஞ்சாங்க.’

‘இதுக்கெல்லாம் நஷ்ட ஈடு யார் தர்றது?’

நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.

தன் பிறகு சுத்தமாக உருமாற்றப் பிரச்சனையே  வரவில்லை. நான் வழக்கம் போல என் வேலைகளைச் செய்யலானேன். ஆஃபீஸில் போய் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தேன்.  எனக்கு நடந்தது எல்லாமே ஒரு கெட்ட கனவு போலவே தோன்றியது.
ன்றைக்கு டீவியில் செய்தி சொன்னார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் குண்டு வைப்பதற்காக தீவிரவாதிகள் எடுத்த முயற்சியைப் போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், அதில் சிலர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், ஒரு சிலர் தலை மறைவாகத் திரிவதாகவும் செய்தியில் சொன்னார்கள். இப்போதெல்லாம் செய்திகள் என்னை அச்சுறுத்துவதில்லை. எனவே டீவியைப் போட்டுப் பார்ப்பதில் எனக்குப் பயமில்லை. நான் ஆஃபீஸுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என் ஐந்து வயது மகள் ஷா நாஸ் டீவீ பார்த்தபடி ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். உள்ளே இருந்த என் மனைவி ஷா பானு கத்தினாள். ‘பாடம் படிக்கறப்ப என்ன டீவி?’ ஏங்க அந்த டீவி எழவை ஆஃப் பண்ணுங்களேன்’

நான் டீவியை அணைக்க முற்பட்ட போது குழந்தை ஷா நாஸ், ‘அபு ...அம்மி அம்மி’ என்று என்னிடம் சொன்னாள். அவள் சுட்டிக் காட்டிய இடத்தில்   டீவியில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்கள். அந்தப் பெண் ஒரு ஆபத்தான தீவிரவாதி என்றும் அவளைப் பற்றிய தகவல் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்தார்கள்.  எனக்குத் திகீர் என்றது. உருமாறும் போது எனக்குள் ஏற்படுமே அந்த உணர்வு எனக்குத் தோன்றுவது போல் இருந்தது.அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண் அசப்பில் பார்ப்பதற்கு என் மனைவி ஷா பானுவைப் போலவே இருந்தாள்.

 *
                                   (இருவாட்சி ஆண்டுமலர், 2012)

Friday, December 19, 2014

எம்.ஜி. சுரேஷ்
ஜூலியா கிறிஸ்தேவா


ளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.'காமத்தின் மூலம் கடவுள்' என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே 'காமத்தின் மூலம் உளவியல்' என்ற கோட்பாட்டை முன் வைத்தவர்.

ஃபிராய்ட் முதன் முதலில் “இணங்க வைக்கும் கோட்பாடு” (seduction theory) என்ற கோட்பாட்டைக் கண்டறிந்தார். அதன்படி 'மனப் பிறழ்வு ஏற்படும் ஒவ்வொரு மனிதனும், தான் குழந்தையாக இருந்தபோது பாலியல் ரீதியாக ஒரு பெரிய மனிதரால் காமத்துக்கு இணங்க வைக்கப்பட்டு, அதனால் உள்ளம் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பின் விளைவாக உளவியல் நெருக்கடிக்கு ஆளாகி, அதன் விளைவாக மன நலம் பாதிக்கப்பட்டவர்களே.' இதற்கு ஆதாரமாகப் பல மனப்பிறழ்வு நோயாளிகளை ஆய்வு செய்து தக்க ஆதாரங்களைத் திரட்டினார். இந்தக் கோட்பாடு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெரும் எதிர்ப்புக்குள்ளானது. அரசும், அரசு சார்ந்த மேல் தட்டு சமூகமும் அதிருப்தி தெரிவித்தது. மேல் தட்டு வர்க்கத்தின் அதிருப்திக்குப் பயந்த ஃபிராய்ட், உடனே தனது நிலையிலிருந்து பின் வாங்கினார். சட்டென்று தனது புதிய கோட்பாட்டை முன் வைத்தார். அதன்படி, உளவியலின் அடிப்படை காமமே என்று அறிவித்தார். 'கால் பந்தாட்டத்தில் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் பந்தை உதைத்து கோல் போடுவதாக இருந்தாலும் சரி, தலைவன் மேல் தொண்டன் செலுத்தும் வீர வழிபாடாக இருந்தாலும் சரி எல்லாமே காம விழைவின் வெளிபாடே' என்றார் ஃபிராய்ட்.

ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அதன் காம உணர்வுகள் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன என்பது அவரது வாதம். ஒரு குழந்தை தன் தாயின் மார்புக்காம்புகளைச் சுவைப்பது, தனது பிறப்புறுப்பைத் தொட்டுப் பார்த்தல், மல ஜலம் கழித்தல் போன்ற அனுபவங்களில் சுகம் அனுபவிக்கிறது. இந்த இன்பங்கள் காம அனுபவத்தின் ஆரம்ப நிலைகளே என்கிறார் ஃபிராய்ட்.

ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மார்பகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' (Oedipus complex) என்று அழைக்கிறார்.

கிரேக்க நாடகாசிரியரான சோபாக்ளிஸ் ஒரு புகழ் பெற்ற நாடகத்தை எழுதினார். அதன் பெயர் 'மன்னன் ஈடிபஸ்.' அன்னிய நாட்டின் மேல் படையெடுத்துச் செல்லும் மன்னன் ஈடிபஸ் அந்த நாட்டு மன்னனைக் கொன்று அவன் மனைவியை மணந்து கொள்கிறான். பின்புதான் தெரிகிறது; அவனால் கொல்லப்பட்ட மன்னன் ஈடிபஸின் தந்தை. அவனால் மணந்து கொள்ளப்பட்ட அரசி அவனது தாய். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் ஈடிபஸ் மன்னன் சிக்கிக் கொள்வதை அக்கதை பேசுகிறது. இந்த நெருக்கடி ஓர் உளவியல் நெருக்கடி. இதையே ஃபிராய்ட் தனது பிரதான பிரச்சினையாகப் பார்க்கிறார். ஒரு முக்கியமான உளவியல் கோட்பாடாகக் கட்டமைக்கிறார்.

ஆண் குழந்தை தன் தாயை மிகவும் நேசிக்கிறது. அதேபோல் தாயும் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்றும் விரும்புகிறது. ஆனால், அதற்கு இடையூறு வருகிறது; இன்னொரு போட்டியாளனின் மூலம். குழந்தைக்கும் அந்த போட்டியாளனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தன் தாயின் அன்பைப் பெற முயலும் போட்டியாளனான தந்தை என்ற ஆணைத் தனது வில்லனாகப் பார்க்கிறது. அந்த நபரை வெறுக்கிறது.

ஒரு குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலத்தை இந்த ஈடிபஸ் சிக்கலுக்கான காலக்கட்டமாக சிக்மண்ட் ஃபிராய்ட் வரையறுக்கிறார். ஓர் ஆண்குழந்தை தனது பால்ய பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டுமானால் அது ஈடிபஸ் சிக்கல் பருவத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்பது ஃபிராய்டியக் கோட்பாடு.

ஃபிராய்டுக்குப் பின் வந்த இன்னொரு முக்கியமான உளவியலாளரான லக்கான் ஃபிராய்டின் கோட்பாட்டை அனுமானமாக்கிக் காட்டினார். ஆனாலும், ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கல் என்ற கோட்பாட்டை அவர் மறுக்கவில்லை.

ஃபிராய்டுக்கும், லக்கானுக்கும் பின் வந்த ஜூலியா கிறிஸ்தேவா அவர்கள் இருவரையும் நிராகரித்தார்.

ஃபிராய்டும் சரி லக்கானும் சரி பிறந்த ஆண் குழந்தையின் உளவியல் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அந்த ஆண் குழந்தையின் ஈடிபஸ் சிக்கல் பற்றி மட்டுமே விவாதிக்கிறார்கள். பெண் குழந்தைகளும்தான் பிறக்கின்றன. அவற்றின் நிலை என்ன என்ற கேள்வியை கிறிஸ்தேவா எழுப்பினார். இதற்கு உளவியல் துறை பதில் சொல்ல முடியாமல் விழித்தது.

'பெண்கள் மாறுதலை எதிர்க்கிறார்கள்; எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு செயலற்றவர்களாகத் தங்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்களை மேன்மைப் படுத்திக் கொள்வதில்லை' என்று 1925 ல் ஃபிராய்ட் ஒரு கட்டுரையில் எழுதினார். மேலும், இன்னொரு சந்தர்ப்பத்தில், 'ஒரு பெண்ணின் மனதில் என்ன் இருக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை' என்றும் கூறினார். இதன் மூலம் அவர் தான் ஒரு ஆணாதிக்க சிந்தனையாளராக கவனிக்கப்பட்டார்.

லக்கானோ இன்னும் ஒரு படி மேலே போய், 'உளவியலில் பெண் என்பதே இல்லை' (woman does not exist) என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார்.

இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தேவாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பல்கேரியாவில் பிறந்து ஃபிரான்ஸுக்குப் புலம் பெயர்ந்து போன இளம் பெண்ணான ஜூலியா கிறிஸ்தேவா இரண்டு விதமான வெறுப்புகளுக்கு ஆளானார். ஒன்று: அந்நிய தேசத்தவர் என்றாலே ஃபிரெஞ்சுக்காரர்கள் காட்டும் வெறுப்பு. இரண்டு: பெண்கள் என்றாலே ஃபிரெஞ்சுக்காரர்கள் வெளிப்படுத்தும் ஆணாதிக்க வெறுப்பு. இந்த இரண்டையும் கடந்து கிறிஸ்தேவா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆளுமையாக உருவானது தற்செயலான நிகழ்வு அல்ல. சிமோன் தெ புவா, ஹெலன் சிசு, லியூஸ் இரிகாரே போன்ற மிக முக்கியமான பெண்ணியவாதிகளில் ஒருவராக கிறிஸ்தேவா மதிப்பிடப்படுகிறார். நவீன பெண்ணியத்தைக் கடந்து பின் நவீன பெண்ணியத்தை வடிவமைத்தவராக அவர் கொண்டாடப்படுகிறார்.

கிறிஸ்தேவா ஒரு போதும் தன்னைப் பெண்ணியவாதியாகக் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. எனினும், இவரை ஒதுக்கி விட்டு எந்தப் பெண்ணியவாதியும் தனது ஆய்வை ஆரம்பிக்க முடியாது.

கிறிஸ்தேவா உடல் குறித்து எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை. பெண், பெண்மை, பெண் தன்மை, என்றெல்லாம் பெண்ணின் உடல் தனியே வைத்துப் பார்க்கப்படுகிறது. இது ஆண் மைய வாதம் பெண் உடல் மீது ஆதிக்கம் செலுத்த நிறுவப்பட்ட அரசியல். பெண்ணை பலவீனமாகப் பார்க்கும் அரசியல் இது. மனம் - உடல், கலாசாரம் - இயற்கை, பொருள் - பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து கிறிஸ்தேவா எழுதிக் குவித்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் விரிவும் ஆழமும் மிக்கவை.

ஃபிராய்டும், லக்கானும் வளர்த்தெடுத்த உளவியல் பகுப்பாய்வை (psycho analysis) குறியியல் சார்ந்த பகுப்பாய்வாக மாற்றியமைத்தவர் கிறிஸ்தேவா. இதன் மூலம் நவீன உளவியல பின் நவீன உளவியலாக மாறியது.

ஈடிபஸ் சிக்கலைப் பற்றிப் பேசும் போது கிறிஸ்தேவா பின் வருமாறு கூறினார்:

'ஒரு ஆண் குழந்தை ஈடிபஸ் சிக்கலில் ஈடுபடுவது இருக்கட்டும். பெண் குழந்தையின் நிலை என்ன? ஒரு பெண் குழந்தை தன்னைத் தன் தாயோடு அடையாளப்படுத்திக் கொண்டு பார்க்கும் போது, இந்த ஆணாதிக்க சமூகத்தில் தன் தாய் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டு, தன்னையும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்வாள். அல்லது அவள் தன்னைத் தனது தந்தையுடன் அடையாளப்படுத்திப் பார்க்கும் போது, தான் விளிம்பு நிலையில் இருப்பதாக உணர்வதில்லை. இது ஒரு ஊசலாட்டம். இந்த ஊசலாட்டம் அபாயகரமானது. இது பெண்ணை ஒன்று தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும். அல்லது மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கும். எனவே, ஒரு பெண் இந்த ஊசலாட்டத்திலிருந்து வெளியேற வேண்டும்.'


கிறிஸ்தேவா பெண்ணியம் மற்றும் பெண்ணியம் சார்ந்த உளவியலை வளர்த்தெடுத்தார். ஃபிராய்டிய, லக்கானிய ஆணாதிக்க உளவியல் கோட்பாடுகளை கலகலக்க வைத்தார்.

Friday, December 12, 2014

புத்தகங்களை 
நே சி ப் போ ம்


எம்.ஜி.சுரேஷ்

வ்வொரு நாள் இரவும் படுக்கைக்குப் போகும் முன் இன்றைய தினம் பயனுடைய தினமாகக் கழிந்ததா என்று நான் யோசித்தபடியே படுக்கைக்குச் செல்வேன். பெரும்பாலான தினங்கள் பயனற்றுக் கழிந்ததாகவே எனக்குத் தோன்றும். ஆனால், இன்றைய தினத்தை நான் ஒரு பயன் மிக்க தினமாகவே என்றும் கருதுவேன்.  இன்றைய தினம் எனது வாழ்க்கையின் பயனுடைய தினங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில், இன்று அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியின் புத்தகக்கண்காட்சியைத் திறந்து வைக்கும் வாய்ப்பு அல்லவா எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.?

     நான் புத்தகங்களை நேசிப்பவன். எனது வாழ்க்கை புத்தகங்களால் ஆனது. ஒன்று நான் வாசித்த புத்தகங்கள்; இரண்டு நான் எழுதிய புத்தகங்கள். வாசித்த புத்தகங்களால் நான் மேன்மையடைந்தேன்; நான் எழுதிய புத்தகங்களால் தமிழ் மேன்மை அடைந்தது.

     புத்தகத்தை நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை புத்தகங்களை அதற்கும் மேலாக நண்பன், தத்துவவாதி, வழிகாட்டி என்று சொல்வேன். பல சந்தர்ப்பங்களில் புத்தகங்கள் ஒரு நண்பனாக இருந்து நமக்குத் துணை புரிகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவை நமக்கு புதிய தத்துவ ஒளியைப் பார்க்குமாறு செய்கின்றன. சரியான தருணங்களில் அவை நமக்கு சரியான  வழிகாட்டுகின்றன.

     அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடி எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பார். அவருக்குப் புத்தகம் ஒரு இணை பிரியாத நண்பனாக இருந்தது. அதே அமெரிக்காவின் இன்னொரு ஜனாதிபதியான தியோடார் ரூஸ்வெல்ட்டுக்கோ அது தத்துவவாதியாக இருந்தது. கிப்பன் எழுதிய ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் அவருக்குத் தத்துவம் போதித்தது.   பிரச்சனை வரும் போதெல்லாம அந்த நூலை அவர் எடுத்து வாசிப்பார். மகாத்மா காந்திக்கு ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதி மோட்சம் என்ற நூல் வாழ வைக்கும் வழிகாட்டியாக இருந்தது.  எனவே நாம் புத்தகம் என்பது சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

     ஒரு புத்தகம் வெடி குண்டைப் போல் வெடிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். சொல்லப் போனால் வெடிகுண்டு கூட ஒரு முறைதான் வெடிக்கும். ஒரு நல்ல புத்தகம் திறக்கும் ஒவ்வொரு தடவையும் வெடிக்கும் என்றார் ருஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செகாவ். ஒரு வெடிகுண்டின் வீர்யம் ஒரு புத்தகத்துக்கு உண்டு. பல புத்தகங்கள் உலக வரலாற்றையே மாற்றி இருக்கின்றன. மாவீரன் அலெக்ஸாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டதற்குக் காரணம் ஹோமர் எழுதிய இலியாட் என்ற புத்தகம்தான் காரணம். எப்போதும் அந்தப் புத்தகத்தைத் தன் கையில் வைத்திருந்தான் அலெக்ஸாண்டர். இரவு தூங்கும் போது கூட அதைத் தன் தலையணையின் கீழ் வைத்துக் கொண்டுதான் தூங்குவானாம். அந்த ஒரு புத்தகம்தான் உலக் வரலாற்றையே மாற்றியது. இங்கிலாந்தில் அனாதை விடுதிகளில் நடைபெற்று வந்த கொடுமைகளைக் களைவதற்குக் காரணமாக இருந்தது சார்லஸ் டிக்கின்ஸன் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் என்ற நாவல். ருஷ்யாவில் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தது மாக்ஸிம் கார்க்கி எழுதிய தாய் என்ற நாவல். ருஷ்யப் புரட்சிக்குக் காரணமாக இருந்த பத்து கதைகளில் அதுவும் ஒன்று என்று கூறுவார்கள். ராபர்ட் ஸ்பியர், மாரட், வால்டேர், ரூசோ போன்றவ்ர்கள் எழுதிய புத்தகங்கள் ஃபிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தன. எனவே புத்தகங்கள் சக்தி வாய்ந்தவை. பெரிய எழுச்சியை உருவாக்கத்தக்கவை என்று சொல்லலாம்.

     இத்தகைய மதிப்புக்குரிய புத்தகங்கள் நமது நேசிப்பிற்குரியவை. நாம் பெரும்பாலும் புத்தகங்கள் என்றாலே வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே நினைக்கிறோம். பாட சிலபஸுக்கு வெளியேயும் புத்தகங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி பலர் யோசிப்பதே இல்லை. அவை நமக்குத் தேவையில்லை. அதையெல்லாம் யார் படிப்பது என்ற மனநிலை நம்மில் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் தவறான பழக்கம். நூல் நிலையங்களில் அலமாரிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் லட்சக்கணகான புத்தகங்கள் நமது கையின் தொடுதலுக்காகக காத்திருக்கின்றன என்பதை நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கிறோம்?

     நம்மைப் பொறுத்தவரை பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறோம். அமெரிக்கர்களைப் போல், ஐரோப்பியர்களைப் போல் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத் தரம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அதே அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் அதுதான் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரக் காரணம் என்பதை நாம் கவனிப்பதில்லை. நம்மை விட கல்வித்தரம், தொழில்நுட்ப ஆற்றல் கொண்டுள்ள அமெரிக்க, ஐரோப்பிய இளைஞர்கள் நிறையப் படிப்பதில் ஆர்வம காட்டுகிறார்கள். நாம் புத்தகமா ஐயய்யோ, அதெல்லாம் படிக்க எனக்கு நேரம் இல்லை என்று சலித்துக் கொள்கிறோம். ஆனால் வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் நம்மை விட பிஸியாக இருந்து கொண்டு, நம்மை விட நேரம் போதாமல் இருக்கும் வெள்ளைக்காரர்கள் தினமும் புத்தகம் படிப்பதற்கு நேரம் செலவிடுகிறார்கள். அங்கே நம்மை விட ஜனத்தொகை குறைவு. ஆனால், அங்கே புத்தகங்கள் மில்லியன் காப்பிகள் விற்கின்றன. இங்கே ஒரு புத்தகம் ஆயிரம் காப்பி விற்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இது எவ்வளவு வெட்கப் பட வேண்டிய விஷயம்.

     நாம் பாடத்தை மட்டும் படித்தால் போதாது. பாடத்துக்கு வெளியேயும் படிக்க வேண்டும். ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள்தான் ஷேக்ஸ்பியர் படிக்க வேண்டும் என்பதில்லை. ஷேக்ஸ்பியர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை எல்லோரும் படிக்கலாம். அவரிடம் வாழ்க்கைக்குப் பயன் படும் கருத்துகள் நிறைய இருக்கின்றன. தத்துவம் படிக்கும் மாணவர்கள்தான் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலைப் படிக்க வேண்டும் என்று இல்லை. அவரது புத்தகங்களை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவரது சிந்தனைகள் வாசிப்பவனை மேன்மையடையச்செய்யும்.

          நாம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. ஏனெனில், நமது பாடத்திட்டம் ந்வீனமாக இல்லை. எல்லாப் பாடங்களுமே பழம் பஞ்சாங்கங்களாக இருக்கின்றன. போன தலைமுறை வாசித்ததையே இந்தத் தலைமுறையும் வாசிக்கும் அவலம் இங்கே இருக்கிறது. உதாரணமாக, உளவியல் என்றால் நமது பாடத்திட்டத்தில் சிக்மண்ட் ஃபிராய்ட்தான் இருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த லக்கான், ஜூலியா கிறிஸ்தேவா, லியூஸ் இரிகாரே பற்றி நமது பாடத்திட்டம் மௌனம் சாதிக்கிறது. அதேபோல், இலக்கியம் என்றால் நவீன இலக்கியம் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆங்கில இலக்கியம் என்றால், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமர்செட் மாம், ஹெமிங்வேயுடன் நின்று விடுகிறது. ஜான் பார்த், டொனால்ட் பார்த்தல்மே, தாமஸ் பிஞ்சன் போன்ற பின் நவீன எழுத்தாளர்கள் பற்றி மூச்சு விடுவதில்லை. தமிழ் இலக்கியம் என்றால் உரை நடை இலக்கியம் டாக்டர் மு.வ. வுடன் நின்று விடுகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் போனால் போகட்டும் என்று ஜெயகாந்தன் வரை வருகிறார்கள். தமிழில் இயங்கி வரும் பின் நவீன இலக்கியம் பற்றி யாருமே பேசுவதில்லை. அதைப் பற்றி மாணவர்கள் யாராவது தெரிந்து கொள்ள விரும்பினாலும், அதற்கு உதவ யாரும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட குறையுடைய பாடத்திட்டத்தில் நாம் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் முழுமை பெற இயலாது. எனவேதான் நாம் பாடத்திட்டத்துக்கு வெளியேயும் படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
     இன்றைக்குப் பெண்களாகிய நீங்கள் எல்லாத்துறைகளிலும் முன்னணியில் இருக்கிறீர்கள். பெண்களின் இடம் சமையலறை என்ற கருத்து இப்போது மாறி இருக்கிறது. இனியும் உங்கள் வாழ்க்கை நீங்கள், உங்கள் வீடு, உங்கள் குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் இருக்க முடியாது. அந்தப் பழைய சிறையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். உங்கள் எல்லை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. வானமே உங்கள் எல்லையாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்கப் புத்தகங்கள் உங்களுக்குத் துணை நிற்கும்.

     இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் படித்தவர்கள் இருக்கும் மாநிலங்களாக கேரளாவையும், மேற்கு வங்காளத்தையும் குறிப்பிடுவார்கள். அதற்குக் காரணம் இந்த இரண்டு மாநிலங்களிலும்தான் புத்தகம் படிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கேரளாவைச்சேர்ந்த அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அமர்த்தியா சென் நொபல் பரிசு பெற்றார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கும் நாம் என்றைக்கு இதைச் சாதிக்கப் போகிறோம்?  எனவே நாம் நமது வாசிப்பின் எல்லைகளை விரிவு படுத்திக் கொள்ள வேண்டும். வாசிப்பில் வானமே நமது எல்லையாக இருக்க வேண்டும்.

     எல்லாப் புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் அல்ல. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; தீயவர்களும் இருக்கிறார்கள். அதைப் போலவே புத்தகங்களும் அவற்றை எழுதிய ஆசிரியரின் குணத்துக்கேற்றவாறு இருக்கின்றன. எனவே புத்தகங்களைப் படிக்கு முன் அது நல்ல புத்தகமா அல்லது தீய புத்தகமா என்று தேர்வு செய்து படிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது நேரமும், உழைப்பும் வீணாகி விடும். அதற்காகவே அனுபவம் வாய்ந்த அறிஞர்கள், விமர்சகர்கள் இருக்கிறார்கள் அவர்களது ஆலோசனை நமக்குப் புத்தகம் தேர்வு செய்வதில் உதவி செய்யும். ஒரு தடவை பெர்னார்ட் ஷா தனது நண்பரிடம் ஒரு புத்தகத்தைக் காட்டி ‘உலகத்திலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான் என்றாராம். அதற்கு அந்த நண்பர், எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு ஷா ‘இந்தப் புத்தகத்தை ஒருவன் இரவல் வாங்கிக் கொண்டு போனான். பத்திரமாகத் திருப்பிக் கொடுத்து விட்டான் என்றாராம். நல்ல புத்தகத்தை  இரவல் கொடுத்தால் திரும்பி வராது என்பதற்கு இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

     நமது யுகம் வன்முறையின் யுகம். பயங்கரவாதம் குடி கொண்டிருக்கும் யுகம். எப்போது எங்கே குண்டு வெடிக்கும் என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் யுகம். இந்த வன்முறையாளர்கள் யார்? பயங்கரவாதிகள் ஆளுமைக்குறைபாடு என்னும் மனநோயின் விளைவாக உருவாகிறார்கள் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்கள் ஒரு போதும் ஆளுமைக் குறைபாடு என்ற நோய்க்கு ஆளாவதில்லை என்று சொல்ல முடியும். நல்ல புத்தகம் ஒரு வாசகனிடம் விலகி நிற்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. இந்தத் தன்மை ஒரு அறிவுஜீவித்தன்மையாகும். இத்தகைய அறிவுஜீவித்தன்மையானது தன்னையே கூட விலகி நின்று பார்க்கக் கூடிய பக்குவத்தை ஒரு வாசகனுக்கு அளிக்கிறது. தன்னையே விலகி நின்று பார்க்கும் ஒரு மனிதன் அடுத்தவனைக் கொல்ல மாட்டான். ஒரு போதும் பயங்கரவாதி ஆக மாட்டான்.

     சில வகை மன நோயாளிகளுக்குப் புத்தகங்கள் மருந்தாகப் பயன் படுகின்றன. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் எழுத்தாளரின் தாயும் தந்தையும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அந்த எழுத்தாளர் மனமுடைந்து ஊர் ஊராகப் பிச்சைக்காரனைப் போல் அலைந்து திரிந்தார். அப்போது அவர் சந்தித்த உளவியல் மருத்துவ நண்பர் ஒருவர் அவரிடம் புத்தகம் படிக்குமாறும், நிறைய எழுதுமாறும் அறிவுரை சொன்னார்.  அதன்படி தினமும் புத்தகம் படித்தும், எழுதியும் வந்த அவர் விரைவிலேயே குணமானார். இன்று புகழ் பெற்ற எழுத்தாளராகவும் இருக்கிறார்.. அவர் பிச்சைக்காரனாக அலைந்து திரிந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை ஒரு நாவலாக எழுதினார். அந்த நாவல் ஒரு திரைப்படமாகவும் வந்தது.

     எனவே, புத்தகங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

     எனவே நாம் அனைவரும் புத்தகங்களை நேசிக்க வேண்டும். தினம் தினம் வாசிக்க வேண்டும். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது 5 மணி நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும் என்கிறார் அறிஞர் ஜான்சன். புத்தகம் நம்மை மேன்மையுறச் செய்யும். நாம் மேன்மையடந்தால் நம் நாடு மேன்மையடையும். எனவே புத்தகங்களைப் படித்து நாம் மேன்மையடைய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.



(15.7.2009 அன்று சென்னை அண்ணா நகரில்
உள்ள அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியின்
வெள்ளி விழாவில் கலந்து கொண்டு,
புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டித் திறந்து
வைத்து விட்டு எம்.ஜி.சுரேஷ் ஆற்றிய உரை)



                              ######




Saturday, December 6, 2014

வில்லியம் டேல்ரிம்பிள்


வில்லியம் டேல்ரிம்பிள்

ஓர் ஆங்கிலேயரின்

பின்காலனிய

இந்திய மனச்சுமை

எம்.ஜி. சுரேஷ்

ந்தச் சிறைச்சாலையின் காம்பௌண்ட் சுவரை ஒட்டிய தரையில், ஒரு சவப்பெட்டியை இறக்குவதற்கு ஏற்ற வகையில், ஒரு பள்ளம் தோண்டப் பட்டிருந்தது. அதில் அவசர அவசரமாக ஒரு சவப்பெட்டி இறக்கப்பட்டது. சமயச்சடங்குகள் இல்லை; உறவினர்களின் கண்ணீர் இல்லை. சொல்லப்ப்போனால், சவப்பெட்டியில் அடக்கமாகியிருந்த அந்தச் சவத்தின் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது. அந்தச் சவ அடக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில சிறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சவ அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில் எவ்வித அடையாளச்சின்னங்களோ பொறிக்கப்படவில்லை. விரைவிலேயே அந்த இடத்தில் புல் வளர்க்கப்பட்டு அந்த இடம் சுற்றி இருந்த புல் தரையோடு தரையாக ஆக்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் ஒரு சவம் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் யூகிக்கவே முடியாது.....


இப்படி ஆரம்பிக்றது வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய, தி லாஸ்ட் மொகல் (The last Mohul) வரலாற்று நூல்.

இந்தியாவை ஆண்ட மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷாவுக்குத்தான் இந்த கதி நேர்ந்தது. தனது கடைசிக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் சிறைப்பிடிக்கப் பட்டு, ராஜ துரோகக் குற்றத்துக்காக பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிறையிலேயே உயிர் துறந்த அவரது உடல்தான் இவ்விதம் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது.

ஒரு நாயின் உடலைக் கூட நினைவுச்சின்னம் அமைத்து நினைவு கூரும் வெள்ளையர்கள் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை இவ்விதம் அவமதித்தார்கள். ஒரு இந்தியன் இந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பானோ அப்படிப் பார்த்து, ஒரு இந்திய மனநிலையில் இந்தக் காட்சியைப் பதிவு செய்கிறார் டேல்ரிம்பிள்.

ஸ்காட்லாந்தில் 1965ம் ஆண்டு பிறந்த இந்த மனிதர் பிரபல ஆங்கில எழுத்தாளரான வர்ஜீனியா உல்ஃபின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. வறண்ட தன்மை கொண்டவை என்று கருதப்படும் வரலாற்றுப் புத்தகங்களை ஒரு புனைவுக்குரிய தன்மையோடு, ரசிக்கும் விதமாக எழுதுபவர் டேல்ரிம்பிள். ரொலாண் பார்த் சொல்லும், ‘பிரதி தரும் இன்பம்’ இவரது பிரதிகளில் நிச்சயம் உண்டு. ஒரு இந்தியனை விட மிக அதிகமாக இந்தியாவைப் பற்றி அறிந்தவர்; இந்தியாவை நேசிப்பவர் என்று இவரைச் சொல்லலாம். இவர் இவரது நாட்டில் வாழ்ந்த காலங்களை விட இந்தியாவில் அலைந்து திரிந்த நாட்களே அதிகம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும் நடந்த பல சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களை இவரது பேனா மிக அழகாகப் பதிவு செய்து விடுகிறது. டெல்லியிலும், ஹைதராபாத்திலும் அந்தப்புரங்கள் எப்படி இருந்தன, அங்கு நிலவி இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீறி எப்படி ஒரு நிஜாமின் மைத்துனி ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் காதலித்து ரகசியமாக உடலுறவு கொண்டு கர்ப்பமானாள்… அதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு எப்படி அதிர்ந்து போனது போன்ற விவரங்களைத் தனது ‘ஒயிட் மொஹல்ஸ்’ (White Mohuls) என்ற நூலில் ஆவணப்படுத்துகிறார்.

இவர் புத்தகங்களில் வரும் விபரங்கள் இது வரை யாரும் அறியாதவை.வரலாற்றின் பக்கங்களில் விடுபட்டுப் போனவை. ஒரு மாற்று வரலாற்றை உருவாக்குபவை. நான் ஹைதராபாத்துக்குப் பல முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள பேகம் கார்டனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது யாரோ ஒரு நிஜாம் காலத்து ராஜகுமாரியின் தோட்டம் என்று சர்வ சாதாரணமாகப் பார்த்து விட்டுக் கட்ந்து போயிருக்கிறேன். டேல்ரிம்பிளின் ஒயிட் மொஹல் என்ற நூலைப் படிக்கும் போது ஒரு புறக்கணிக்கப்பட்ட காதல் வரலாறு தெரிய வருகிறது. அந்த பேகத்தின் பெயர் கைரூன்னிஸா. பேரழகியான (அவளது படம் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவள் பேரழகிதான்.) அவள் ஹைதராபாத் நிஜாமின் பிரதம மந்திரியின் மைத்துனி. ஜேம்ஸ் கிர்க்பேட்ரிக் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை அவள் எப்படி காதல் வலையில் வீழ்த்தினாள்; அந்தக் காதல் இறுதியில் என்ன ஆனது… என்பன போன்ற விவரங்கள் அதில் இருக்கின்றன.

டேல்ரிம்பிளின் ‘சிடி ஆஃப் ஜின்ஸ்’, ‘தி ஆஜ் ஆஃப் காளி’ போன்ற பிற நூலகளும் வியப்பைத் தரும் தகவல்கள் கொண்டவையே. இவரது புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் பாழ்பட்ட இந்திய வசீகரத்தை நினைத்து ஏங்குகின்றன. அவற்றில் டேல்ரிம்பிளின் பின் காலனிய மனச்சுமை தெரிகிறது.

ஒரே நேரத்தில் ஐந்து, பத்து என்று தங்கள் புத்தகங்களைப் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடும் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத பின் காலனிய மனச்சுமை ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு இருப்பது ஒரு நகை முரண் என்றே சொல்லத் தோன்றுகிறது.