Friday, April 3, 2015

Korean Cunema - Director Kim Ki Duk





ஒரு படகுப் பயணம்

எம்.ஜி.சுரேஷ்

* * *
யணங்கள் உயிருள்ள மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. திரைப்படக் கதாப்பாத்திரங்களுக்கும் உரியவையே. மனிதர்கள் பயணம் செய்வதைப்போல் அவர்களின் நிழல் உருவங்களும் பயணம் செய்கின்றன என்பது சுவாரஸ்யமானது. மக்கன்னாஸ் கோல்ட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முதல் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்று எல்லாக் கதாபாத்திரங்களும் குதிரைகளில் ஏறிப் பயணம் செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ‘பேக் டு தி பியூச்சர்’ என்ற படத்தில் வரும் கதாநாயகனும் அவனது குருவும் கால யந்திரத்தில் ஏறி இறந்த காலம், எதிர்காலம் என்று எல்லாக்காலங்களுக்கும் மாறி மாறிப் பயணம் செய்தார்கள். இன்னும் பல படங்களில் பயணங்கள் பலவிதத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

     நவீன கொரியத் திரைப்படத்தின் முகத்தை மாற்றியவர்களில் ஒருவர் கிம் கி டுக். தீவு (the isle), கனவு (Dream), த்ரீ அயர்ன் (3 iron), பைட்டா (Pieta) போன்ற நூதனமான, திகைக்க வைக்கும் படங்களை இயக்கியவர் அவர். ஏககாலத்தில் இரண்டு சிறந்த இயக்குநருக்கான விருதுகளைப் பெற்றவரும் கூட. அவர் ஒரு படம் எடுத்தார். அதில் மூன்றே கதாபாத்திரங்கள். ஒன்று, அறுபது வயதான ஒரு கிழவர். இரண்டு. பதினாறு வயதான இளம்பெண். மூன்று, ஒரு படகு. இந்த மூன்றே கதாபாத்திரங்களை வைத்து ஒரு  அற்புதமான படத்தை கிம் கி டுக் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். இது ஒரு பயணம். படகுப் பயணம். கிழவரும், இளம் பெண்ணும் சேர்ந்து பயணிக்கும் பயணம். இந்தப் பயணம் அவர்கள் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணத்துக்கு ஒரு குறியீடாக இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் வில் (the bow).

     எப்போதும் சிடுசிடுக்கும் கிழவர். சதா புன்னகையை அணிந்து வலம் வரும் இளம் பெண். இவர்கள் இருவரையும் சுமக்கும் படகு. அந்தப் படகு நாற்பது அடி நீளம் கொண்டது. ஒற்றை அறை வசிப்பிடம் போல் படுக்க, சமைக்க, பொருட்களைச் சேமித்து வைக்கக் கூடிய அளவுக்கு இடம் கொண்டது.  அந்தக் கிழவர் வில் வித்தையில் தேர்ந்தவர். குறி தவறாமல் அம்பு ;எய்வதில் வல்லவர். அந்தப் பெண் கிழவருக்கு உதவியாக இருக்கிறாள். அந்தக் கிழவரிடம் வில்லைப் பயன்படுத்துவது தவிர, இன்னொரு திறமையும் இருக்கிறது. அது குறி சொல்வது. அவரிடம் குறி கேட்பதற்காகப் பலர் வருவதுண்டு. அவர் சொல்வது பெரும்பாலும் பலிப்பதால் அவரை பலர் மதிக்கிறார்கள். தவிரவும், கிழவருக்கு வேண்டிய பொருட்களை விற்பதற்கும் வணிகர்கள் வருவதுண்டு. இவரைப் பார்க்க வரும் மனிதர்கள் அந்தப் பெண்ணையும், கிழவரையும் வைத்து விவாதிப்பார்கள்.

     ’அந்தப் பெண் யாரோ. கிழவன் அவளைக் கடத்திக் கொண்டு வந்துவிட்டான்’

     ’ஆறு வயதாக இருக்கும் போதே அவளின் பெற்றோரிடமிருந்து அவளைக் கொண்டு வந்து விட்டான். அவளது பெற்றோர் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்’

     ’ஒருவேளை அவள் அவனது மகளாக இருப்பாளோ?’

     என்றெல்லாம் வதந்திகள் கால் முளைத்து நடமாடும்.

     கிழவரின் மனத்தில் இருப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

     படம் ஆரம்பித்ததும் வரும் முதல் ஷாட். ஒரு வண்ண ஓவியம் காட்டப்படுகிறது. கொரியத் தொன்மம் சார்ந்த ஓவியம். அந்த ஓவியம் ஒரு மரச்சுவரில் வரையப்பட்டிருப்பது தெரிகிறது. அப்போது க்ளோஸ்-அப்பில் ஒரு கை ஃபிரேமினுள் எட்டிப்பார்க்கிறது. அந்தக் கையில் ஒரு வில்லின் நுனி இருக்கிறது. அந்தக் கை வில்லில் நாணைப் பூட்டுகிறது. பின்பு நாணை ஏற்றிக் குறி பார்க்கிறது. தொடர்ந்து ஒரு கிழவரின் முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. பின்பு அந்தக் கிழவர் அந்த வில்லில் ஒரு சிறு தோல் கருவியை மாட்டுகிறார். ஏக காலத்தில் வில்லாகவும், வாத்தியமாகவும் இயங்கும் ஒரு கருவி அது என்பது பார்வையாளனுக்குப் புரிந்து விடுகிறது. கிழவர் இப்போது அந்தக் கருவியை ஓர் இசைக்கருவியாகப் பயன்படுத்துகிறார். அவர் இசைக்க அந்த இசையின் பின்னணியில் ஓர் அழகான இளம்பெண்ணின் முகம் காட்டப்படுகிறது. புன்னகை தவழும் முகம். ஒரு தேவதையைப் போன்ற வசீகரம். அந்தப் பெண் தன் கண்களுக்கருகே மூன்று வண்ணப்புள்ளிகளை இட்டுக் கொள்கிறாள். மாசு மருவற்ற தனது முகத்தின் வாயிலாக ஒரு புன்னகையை வெளியிடுகிறாள்.

     அந்தப் படகின் பக்கவாட்டில் ஒரு நீண்ட கயிறுகளால் பிணிக்கப்பட்ட ஓர் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. அதில் உட்கார்ந்து ஆடினால் கால்கள் தண்ணீரில் படும். கால்களை அதில் அளைந்தவாறே ஊஞ்சலாடுவது அவளுக்குப் பிடிக்கும்.

     அவ்வப்போது அந்தப் படகை நோக்கிப் பல படகுகள் வரும். அவற்றில் யாராவது அந்நியர்கள் வந்து போவார்கள். கிழவரிடம் குறி கேட்பதற்காகவோ அல்லது அரிசி, பருப்பை விற்கவோ அவர்கள் வருவார்கள். அவர்கள் இந்தப்பெண்ணைச் சீண்டி கேலி பேசுவார்கள். கிழவருக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. அவர்கள் அருகே அம்பு எய்து எச்சரிப்பார். அவர்கள் பயந்து அடங்கிப் போவார்கள்.

     இப்படியே காலம் போய்க்கொண்டிருக்கிறது.

     ஒரு நாள் சிலர் கிழவரைத் தேடி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணிடம் சீண்டி விளையாடுகிறான். கிழவர் அம்பு எய்து அச்சுறுத்துகிறார். அப்போதுதான் அவர்கள் பேச்சில் கிழவர் இந்தப்பெண்ணை அவளது 17ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ளப்போகும் செய்தி பற்றிப் பேசுகிறார்கள். அவர்களில் ஒருவன் கிழவரிடம் குறி கேட்கிறான்.

     கிழவர் குறி சொல்லும் விதம் அபாயகரமானது.

     முதலில் அந்தப் பெண் படகின் பக்கவாட்டில் தொங்கும் ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து ஆட ஆரம்பிப்பாள். அவள் முன்னும் பின்னும் போய் போய் வருவாள். படகின் பக்கவாட்டுப் பகுதி பின்னணியாகத் தெரியும். அந்தப் பின்னணியில் ஒரு பெரிய புத்தரின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். கிழவர் அவளுக்கு எதிரே போய் வேறொர் படகின் மேல் ஏறி நிற்பார். அங்கிருந்து தனது வில்லிலிருந்து அம்புகள் எய்வார். அந்த அம்புகள் அந்தப் படத்தின் எந்தஎந்தப் பகுதிகளில் பாய்ந்திருக்கிறதோ அதையொட்டி குறி சொல்லுவார்.

     கிழவர் தினமும் அந்தப் பெண்ணை இரவில் குளிப்பாட்டுவார். பின்னர் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு காலண்டரில் ஒரு நாள் கழிந்ததற்கு அடையாளமாக அந்தத் தேதிக்குப் பெருக்கல் குறியிடுவார்.

     ஒரு நாள் கிழவர் மணப்பெண்ணுக்கான காலணி ஒன்றை வாங்கி வந்து அலமாரியில் வைத்துப் பூட்டுகிறார். அவர் முகம் மகிழ்ச்சியில் ஆழ்கிறது.

     ஒரு சமயம் ஒரு படகு வருகிறது. அதில் வரும் இரு அயோக்கியர்கள் கிழவரைக் கட்டிப்போட்டுவிட்டு, அந்தப் பெண்ணைக் கெடுக்கத் திட்டமிடுகிறார்கள். அந்தப் பெண் புத்திசாலித்தனமாக அவர்களிடமிருந்து தப்பி அவர்களை அம்புகள் எய்து காயப்படுத்தி விடுகிறாள். தன்னையும் கிழவரையும் காப்பாற்றுகிறாள்.

     ஒரு நாள் ஒரு படகு வருகிறது. அதில் சிலர் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அழகான இளைஞன். அவன் பால் இவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவனையே ஆசையாகப் பார்க்கிறாள். இதை கிழவர் கவனிக்கிறார். அவருக்கு இது எரிச்சலூட்டுகிறது.

     அந்த இளைஞன் ஒரு வாக்-மேன் வைத்திருக்கிறான். அதை அவள் காதில் வைத்துப் பாட்டுக் கேட்குமாறு செய்கிறான். கிழவர் அந்த வாக்-மேனைப் பிடுங்கி எறிகிறார். அவள் கோபம் கொள்கிறாள். அந்த இளைஞனுக்கும் அவளுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. கிழவரை விட்டு விட்டு அவனுடேயே ஓடிபோக அவள் தயாராகிறாள். உடனே கிழவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். உடனே மனம் மாறி அந்தப் பெண் கிழவரிடமே திரும்பி வந்து அவரையே திருமணம் செய்து கொள்கிறாள். அந்த இளைஞன் விரக்தி அடைந்து அவளை விட்டுவிட்டு தன் படகில் போகிறான். அந்தக் கிழவரோ கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான். படகில் அவள் மட்டும் தனியெ இருக்க, படகு மூழ்குகிறது. அந்த இளைஞன் இதைக் கவனியாமல் போய் விடுகிறான். அவள் அவன் போன திசையிலேயே கையசைத்தபடியே படகோடு சேர்ந்து கடலில் மூழ்கி விடுகிறாள்.

     இவ்விதம் இந்தப் படம் முடிகிறது.

     கிம் கி டுக்கின் படங்கள் குறைவாகப் பேசுவது வழக்கம். வழக்கம் போலவே இந்தப் படத்திலும் கதாபாத்திரங்கள் குறைந்த அளவு வசனங்களே பேசுகின்றன. கிழவராக வரும் சியாங் ஹ்வாங் ஜியோன் மிக அழகாக நடித்திருக்கிறார். சின்னப் பெண்ணாக வரும் யியோ ரியும் ஹான் கண்கொள்ளா அழகி. அவள் சிரிக்கும் போது அவள் உதடுகள் மட்டுமல்ல, கண்களும் சேர்ந்து சிரிக்கின்றன.

     இந்தப் படத்தைப் பற்றி விமர்சகர்கள் பேசும் போது இதை பௌத்தத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். வில் தியானம் செய்வதற்கான குறியீடு. கிழவர் ஆன்மா. பெண் பர்ம்பொருள். இரண்டும் இணையத் துடிக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு இது வேறு மாதிரி தோன்றுகிறது.

     1962 ஆம் ஆண்டு ரோமன் போலான்ஸ்கி ஒரு படம் எடுத்தார். அதன் பெயர் நைஃப் இன் தி வாட்டர். அதுவும் இதே போல் பயணம் சார்ந்த படமே. அதிலும் ஒரு படகு வரும். அதிலும் ஒரு வயதான மனிதரும் அவரது இளம் மனைவியும் வருவார்கள். அதிலும் ஒரு இளைஞன் வருவான். அந்தப் படத்தில் அந்த இளம்பெண் அந்த இளைஞனுடன் உடலுறவு கொள்வாள். இந்தப் படத்தில் இந்தப் பெண் தன் கணவனுடன் சேர்ந்து சாகிறாள். போலான்ஸ்கியின் படம் மேற்கத்தியப் பெண்ணின் மனநிலையைக் காட்டுகிறது. இந்தப் படம் கிழக்கத்திய மனநிலையைக் காட்டுகிறது. அந்தப் படத்துக்கான கீழை நாட்டு எதிர்வினைதான் இந்தப் படமோ என்று சொல்லத்தோன்றுகிறது.

                         #########


No comments:

Post a Comment