Thursday, April 30, 2015

a so so film by mani rathnam

ஐ.ட்டி என்றாலே
கொழுத்த பணம்,
ஒழுக்க அத்துமீறல்கள் கொண்டது
என்பது ஒரு பொதுப்புத்தி.

ஒரு தமிழ் இயக்குநரின் தமிழ் மனம்

*
எம்.ஜி.சுரேஷ்


றாராகச் சொல்வதென்றால், தமிழில் புதுவகை சினிமாவை அறிமுகப் படுத்தியவர்களாக மகேந்திரனையும், பாலு மகேந்திராவையும் மட்டுமே குறிப்பிட முடியும். மற்ற இயக்குநர்கள் எல்லோருமே புதுவகை சினிமாவைப் போன்ற சினிமாவைத்தான் எடுத்தார்கள். எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பாரதிராஜாவின் சினிமா ஒரு வகை மசாலா என்றால், பாலசந்தரின் சினிமா இன்னொருவகை மசாலா. அமீர், பாலா போன்றவர்கள் தயாரிக்கும் மசாலாக்கள்  வேறு தினுசான மசாலாக்கள். இவர்கள் ஃபார்முலாக்களை உடைக்க வந்தவர்கள். தங்களுக்கு என்று புதிய ஃபார்முலாக்களை உருவாக்கிக் கொண்டு, சிலந்தி தன் வலையிலேயே சிக்கிக்கொண்டது போல், அதிலேயே சிக்கிகொண்டு திணறியவர்கள். இவர்களைப் போன்றும், அப்படி இல்லாமலும் படம் எடுக்கும்  ஒரு இயக்குநர் நம்மிடையே இருக்கிறார். அவர்தான் மணிரத்னம்.

மணிரத்னத்தின் மனம் உயர் மத்தியவர்க்க மனம். தீவிரவாதிகளைக் கெட்டவர்களாகவும், திருத்தப்படவேண்டியவர்களாகவும் பார்க்கும் மனம். தீவிரவாதிகள் ஏன் உருவாகிறார்கள், அதற்கு யார் காரணம் என்பதைப் பார்க்கத் தவறும் மனம். ரோஜா படத்தில் வரும் தீவிரவாதி ‘மனம் திருந்தும்’ சம்பவத்தை எடுத்துரைப்பது இந்த மத்தியதர வர்க்க மனம்தான். ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும் ஒரு டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய முன்வந்தால் என்ன ஆகும். அப்படித்தான் இவரும் இவரது படங்களும் ஆகி விடுகின்றன.

இதற்கு உதாரணமாக, அண்மையில் வெளி வந்த அவரது ஓகே கண்மணி படத்தைக் கூறலாம்.


படம் ஆரம்பிக்கிறது. கதாநாயகனின் அறிமுகத்துக்குப் பின் கதாநாயகியின் அறிமுகம். கதாநாயகி தாரா (நித்யா மேனன்) ஒரு ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் நிற்கிறாள். பிளாட்பாரத்தின் ஓரத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதன் முன் விழ முயல்கிறாள். நமக்கோ பகீர் என்கிறது. உலகப் புகழ் பெற்ற கொரியன் திரைப்படமான ‘மை சாஸி கேர்ல்’ என்ற திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியல்லவா இது? நல்லவேளையாக, மணி யூ டர்ன் அடித்துத் திரும்பி கதையை வேறு பக்கம் நகர்த்துகிறார்.

மும்பையில் ஒரு ஐ. ட்டி கம்பெனியில் வேலை கிடைத்து வருகிறான் கதாநாயகன். வழக்கமாக தமிழ் சினிமாவில் நிகழ்வது போலவே கதாநாயகியை ரயில்வே ஸ்டேஷன், சர்ச் என்று எதிர்பாராதவிதமாகச் சந்திக்கிறான். இருவருக்கும் பிடித்துப் போகிறது. கதாநாயகன் ஒரு வயதான தம்பதிகளின் வீட்டில் பேயிங் கெஸ்டாகத் தங்குகிறான். கதாநாயகியையும் தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறான். இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இது போன்ற கதைகளை ஹாலிவுட் அரைத்துத் தேய்த்து விட்டது. ‘நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்ட்’, ‘ஃப்ரண்ட்ஸ் வித் பெனெஃபிட்ஸ்’ போன்ற பல படங்கள் ஹாலிவுட்டில் வந்து போய்விட்டன. அந்தப் படங்கள் மணிக்கு ஆதர்சமாக இருந்திருக்க வேண்டும். மணி அதுபோன்ற படங்களை   பார்த்துச் சுட்டுவிட்டார் என்று பிலாக்கணம் பிடிப்பதல்ல நமது நோக்கம். அதிலுள்ள ஜீவனைப் பயன்படுத்தத் தவறிவிட்டாரே என்பதுதான் நமது ஆதங்கம்.

பேருக்குத்தான் கதை ஐ.ட்டி உலகத்தைப் பற்றிப் பேசுகிறதே தவிர, அந்த உலக மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதில் பதுங்கி ஒளிகிறது. அமெரிக்காவில் ஐ.ட்டி மக்கள் ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது சர்வ சாதாரணம். அவர்களுக்குள் பற்றிக் கொள்வதும் அதைவிட சாதாரணம். ஆண் - பெண் என்கிற பாலியல் வேறுபாட்டைத் தவிர, வேறு எந்தவிதமான செண்டிமெண்டுக்கும் அங்கே இடமில்லை. மணியின் படத்தில் வரும் கதாநாயகி தன் சொத்துக்கு ஆசைப்படாத, தன்னை மட்டுமே காதலிக்கிற ஒரு கதாநாயகனைத் தேடுகிறாள். இது ஐ.ட்டி மனம் அல்ல. இந்திய மனம். அதிலும் தமிழ் மனம். இது சராசரி கதைக்குரிய கதாநாயகிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டிய மனம். ஒரு ஐ.ட்டி துறையில் இருக்கும் பெண்ணுக்கு இருக்க சாத்தியமில்லாத மனம். கல்யாணமில்லாமல் உடலுறவு கொள்ளும் ஒரு இளம் ஜோடி, வயதான இன்னொரு ஜோடியின் அன்னியோன்னியத்தைப் பார்த்து திருமணம்தான் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்களாம். இதுதான் இந்தப் படம் முன்வைக்கும் நீதி.

ஐ.ட்டியில் வேலை பார்ப்பவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல. நம்மிடையே வாழ்பவர்கள்தான். வேலையின் நிமித்தம் அவர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் காதலிக்க முடிவதில்லை. திருமணம் செய்ய முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் பிராஜக்ட் பிராஜக்ட் என்றே ஓடுகிறது. காமத்தை மனம் மறுத்தாலும் உடல் மறுப்பதில்லை. இது ஒரு நெருக்கடி. இதற்கு அளவுகோல்கள் இல்லை. ஒழுக்கவிதிகள் இல்லை. காமம் என்பது ஓர் உடல் உபாதை. அதை அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள். அது அவர்கள் செய்து கொண்டிருக்கும் பிராஜக்டுக்கு உதவியாக இருக்கிறது. எனவே, கல்யாணத்தைவிட இது பரவாயில்லாமல் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நவீன சித்தாந்தம். இவர்கள் தங்களையும் அறியாமல் அதைத் தகர்க்கிறார்கள். தங்களுக்கே தெரியாமல் இவர்கள் குடும்பம் என்ற நிறுவனத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்.

இதே போன்ற கதையமைப்புக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் எதிர்பாராத விதமாகக் கர்ப்பம் தரித்து விடுவார்கள். அவர்கள் துறக்க விரும்பும் குடும்பம் என்ற நிறுவனம் அவர்களின் காதைப் பிடித்துத் திருகி இழுத்துப் போகும் வேடிக்கையை ரசிக்கும்படி எடுத்துரைப்பார்கள். மணியின் நிலையோ ரெண்டும் கெட்டான் நிலைமை. ஐ.ட்டி கதையையும் எடுக்க வேண்டும். ஆனால், தமிழ் மனத்துக்கு எதிராகவும் போய்விடக்கூடாது. காதலிக்கும் போது நவீன உடைகளில் திரியும் கதாநாயகி, சட்டென்று தழையத் தழைய புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டித் திருமணம் செய்து கொள்வது பழைய தமிழ் மரபு. அதைத் தான் ஓகே கண்மணியும் செய்கிறாள். அதனால் மணிரத்னத்தின் மற்ற படங்களான, அக்னிநட்சத்திரத்தில் வரும் அமலா, இதயத்தைத் திருடாதே படத்தில் வரும் கதாநாயகி ஆகியோரைவிட பின்தங்கி இருக்கிறாள்.

கல்யாணம் ஆகாமலேயே ஒரு பெண் உடலுறவு கொள்வது காலங்காலமாக நடந்துதான் வருகிறது. மகாபாரதத்தில் குந்தி கல்யாணம் ஆகாமல்தான் கர்ப்பம் தரித்தாள். அதுவும் ஐந்து முறை! அது தாய்வழிச் சமூகம். பின்னாளில் தந்தைவழிச் சமூகம் வந்தபோதுதான், தனி சொத்துரிமையைக் காக்கும் பொருட்டு, ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற சொல்லாடல்கள் பிறந்தன. தனக்குப் பின் தனது சொத்து தன்னுடைய விதையில் பிறந்த குழந்தைக்குத்தான் போய்ச்சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான் திருமணம் என்ற சடங்கும், குடும்பம் என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டன. மணி நினைப்பது போல் கல்யாணமாகமாலேயே கன்னி கழிவது சாகச வேலை அல்ல. அதைப்பார்த்து மூக்கில் விரல் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அது தரும் அதிர்ச்சி முக்கியமானது. அதை இந்தப் படம் தரவே இல்லை.

ஐ.ட்டி மனிதரும் எழுத்தாளருமான சேத்தன் பகத்தின் நாவல் ஒன்றில் ஒரு காட்சி வரும். ஒரு கார். அதில் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் உடலுறவு கொள்வார்கள். உடலுறவு முடிந்ததும், அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அவளிடம் கேட்பான். உரையாடல் கிட்டத்தட்ட இந்த ரீதியில் இருக்கும்.

‘எப்ப கல்யாணம்?’

‘அடுத்தவாரம்’

‘மாப்பிள்ளை எங்கே இருக்கிறான்?’

‘யு.எஸ்ஸில்.’

-    ‘கல்யாணம் ஆகிவிட்டால் உன்னைப் பார்க்க முடியாதே. அதனால்; உன்னுடன் ஒருதடவை இருந்துவிட்டுப் போக விரும்பினேன்’ என்பாள் அவள்.

அப்போதுதான் நமக்குத் தெரியும், அந்தப் பெண்ணும் அந்த ஆணும் காமம் வேறு கல்யாணம் வேறு என்ற கோட்பாட்டில் இருக்கிறார்கள் என்று. இதுதான் ஐ.ட்டி கலாசாரம். இந்தக் காட்சி தரும் அதிர்ச்சி சற்றும் எதிர்ப்பாராதது. இது ஒரு நிதர்சன உண்மை. இதுபோன்ற ஒரே ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் இல்லை. தவிரவும், இந்தப் படத்தில் வரும் ஐ.ட்டி இளைஞன் தாறுமாறான வேலை நேரத்தில் சிக்குண்டு அலைக்கழிக்கப் படுவதில்லை. நினைத்த நேரத்தில் தன் அலுவலகத்தை விட்டு வெளியேறி, காதலியுடன் வெளியூர் எல்லாம் போகிறான். அவனைக் கம்பெனி ‘எஸ்கலேட்’ செய்வதில்லை. அந்தப் பெண்ணும் தனது அலுவலகத்துக்குள் நுழைந்ததும், இவன் போனில் அழைக்க உடனே வெளியேறிப் போய்விடுகிறாள். அவனுடன் பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஓர் இடத்தில் காஃபி சாப்பிடுகிறாள். இதெல்லாம் கல்லூரியில் படிக்கும் காதலர்களுக்கான காட்சிகள். ஐ.ட்டி மக்களுக்கான காட்சிகள் அல்ல. இப்படி நிறைய சொல்லலாம். இந்தக் கதையை ஐ.ட்டி பின்புலத்தில் வைத்துத்தான் எடுத்திருக்க வேண்டும் என்றில்லை. வேறு எந்தப் புலத்தில் வைத்து வேண்டுமானாலும் எடுத்திருக்க முடியும். இதில் ஐ.ட்டி மக்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசப்படவே இல்லை. ஐ.ட்டி என்றாலே கொழுத்த பணம், ஒழுக்க அத்துமீறல்கள் கொண்டது என்பது ஒரு பொதுப்புத்தி. இது மத்தியவர்க்க மனித மனத்தால்  கட்டமைக்கப்பட்டது. மணியின் பொதுப்புத்தியும் அதுவே. அதைத்தான் மணி இந்தப் படத்தில் விநியோகம் செய்திருக்கிறார்.

                          <><><><><>




No comments:

Post a Comment