Friday, January 2, 2015


.ஆர். ரஹ்மான் என்றொரு 
பின் நவீன கலைஞன்
*
எம்.ஜி.சுரேஷ்
-           னது முதல் படத்திலேயே இந்தியாவிலுள்ள எல்லா இசை ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் ஏ.ஆர். ரஹ்மான். தொடர்ந்து அந்த கவனத்தைத் தக்க வைத்துக் கொண்டவரும் அவரே. அவரது வரவுக்குப் பின்னர் தமிழ்த்திரை இசை இரண்டாகப் பிரிந்தது. ரஹ்மானுக்கு முன்‘ரஹ்மானுக்குப் பின் என்பதே அது. கறுப்பு வெள்ளைப்படக் காலத்திலிருந்து, இளையராஜா உச்சத்திலிருந்த காலம் வரையிலான திரை இசையை ர.மு. என்றும், ரோஜா படத்திலிருந்து இன்றைய ‘ஸ்லம்டாக் மில்லியனர்வரையிலான காலக்கட்டத்தை ர.பி. என்றும் தயக்கமின்றி நம்மால் பிரித்துப் பார்க்க முடியும்.

     ரஹ்மானுக்கு முன்பு வரை தமிழ்த் திரைப்பட இசை மரபார்ந்த தன்மையுடன் இருந்தது. இசையமைப்பு, இசைக்கோவை, இசைப்பதிவு எல்லாமே மரபார்ந்த அமைப்பிலேயே இருந்தன. இசையமைப்பாளர்கள் அனவரும் கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் கலந்து கட்டி தங்கள் பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தனர். இச்சூழலில் அந்த மரபை மீறிப் புதுவகை இசையை உருவாக்கியவர் ரஹ்மான். ஸ்டூடியோக்களில் உருவாகிக் கொண்டிருந்த சினிமாவை முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுத்துக் காட்டி சினிமாவை ஸ்டூடியோக்களின்  ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காப்பாற்றியவர் பாரதி ராஜா. அவருக்குப் பின் பல ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அரிசி மூட்டைகளை அடுக்கி வைக்கும் கிடங்குகளாக மாற்றப்பட்டன. அதேபோல் இசைப்பதிவு என்பதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை வைத்து ஒரு பெரிய ஸ்டூடியோ ஒலிப்பதிவுக்கூடத்தில்தான் நிகழவேண்டும் என்ற மரபைத் தகர்த்தவர் ரஹ்மான். இசையமைப்பைத் தன் சூட்கேஸில் வைத்துக் கொண்டு ஒரு நடமாடும் ஒலிப்பதிவுக்கூடமாகத் தன்னை அமைத்துக் கொண்டவர் அவர்.
  
     முன்பெல்லாம் இசையமைப்பு என்பது ஒரு பெரிய தொழிற்சாலையை நிர்வகிப்பதைப் போல் இருந்தது. ஏகப்பட்ட வயலின், தாள வாத்தியக்காரர்கள், கிதார், செல்லோ, டிரம் வாசிப்பவர்கள் மற்றும் இவர்களை ஒழுங்குபடுத்தும் கண்டக்டர்கள், மேனேஜர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இத்தனை பேரும் ஒலிப்பதிவுக் கூடத்தில் குழுமி இருப்பார்கள். இசைக் கலைஞர்கள் கண்டக்டரின் கையசைப்புக்கேற்ப வாசிப்பார்கள். ரஹ்மான் வரவுக்கு அப்புறம் எல்லாம் தலை கீழ். தனது சூட்கேஸைத் திறந்து அதிலிருக்கும் தன் கீ போர்டை வருடி, வயலின், கிதார், ட்ரம்ஸ் போன்ற எல்லா ஒலிகளையும் இசைத்துக் காட்டினார் ரஹ்மான். இது மரபைக் கொட்டிக் கவிழ்க்கும் செயல்பாடு. பின் நவீனத்துவத்தின் மற்றொரு கூறு:மனிதம் அற்ற தன்மை (inhuman). பின் நவீன யுகத்தில் மனிதத்தனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மனிதன் தன் உடலில் காது கேட்கும் கருவி; இதயத்தில் பேஸ் மேக்கர் போன்ற மனிதம் அற்ற கருவிகளைத் தன் உறுப்புகளாக ஏற்றிருக்கிறான். மனிதர்கள் நிறைந்த உலகில் மனிதம் குறைந்து வருகிறது. இதனுடைய நீட்சியாகவே இசைக் கலைஞர்களான மனிதர்கள் செய்வதை கீ போர்ட் என்னும் இயந்திரம் செய்வதாகக் கொள்ளலாம்.   அது மட்டுமல்லாமல், பாடல் வரிகளையே வித்தியாசமாகப் பிரித்துக் காட்டி ரசிகர்களின் பொதுப்புத்தியைத் தகர்த்துக் காட்டினார். உதாரணமாக, முதல்வன் என்றொரு தமிழ்ப்படம். அதில் வரும் ஒரு பாட்டின்  பல்லவி ‘முதல்வனேஎன்பது. அதை ‘வனே ‘வனே ‘முதல்வனே என்று பிரித்துக் காட்டி, இப்படியும் ஒரு சொல்லை உடைத்து இசையாக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர். இவையெல்லாம் பின் நவீன செயல்பாடுகள் எனலாம்.

    மரபார்ந்த இசையமைப்பாளர்கள் கர்நாடக-இந்துஸ்தானி இசைக் கலவையையே ‘தர்ஜூமா செய்து கொண்டிருந்த போது எகிப்திய, அராபிய, லத்தீன் அமெரிக்க இசையைத் தமிழ் இசையுடன் சேர்த்து வழங்கி ரசிகனை ஒரு புது உலகத்துக்குக் கொண்டு சென்றவர் ரஹ்மான். நிறைய இசையமைப்பாளர்கள் பாடல்களை வெற்றிகரமாக இசைத்து விடுவார்கள். ஆனால், பின்னணி இசையில் கோட்டை விட்டு விடுவார்கள். இரண்டிலுமே தேர்ந்தவர்களாக இளையராஜாவையும் அவருக்குப் பிறகு ரஹ்மானையும் சொல்லலாம். பொதுவாகவே தமிழ் இசை என்பது மரபு சார்ந்தும், இந்து மத பக்தி இலக்கியங்களின் நீட்சியாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் இசைத்துறையில் ஈடுபட விரும்பும் ஒவ்வொரு இசைக் கலைஞனும் இந்து மத பக்திப் பாடல்களையும், தியாகராஜர், புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இசையமைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருந்தது. அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு இசையமைப்பாளரும் தங்களது அடையாளத்தைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இதனால்தான் ஜேசுதாஸ் போன்ற மகத்தான கலைஞர்கள் கூட குருவாயூர் கோவிலில் பாடுவதன் மூலமே தங்கள் அந்தஸ்து நிர்ணயிக்கப் படுவதாக நம்பினார்கள். திருவையாற்றில் பாடுபவர்களும், சங்கீத சீசனில் மியூசிக் அகடமியில் பாடுபவர்களும் மட்டுமே தூய்மையான இசைக் கலைஞர்கள் என்றும் மற்ற இசைக் கலைஞர்கள் எல்லாம் சும்மா ‘தர்ஜுமாசெய்பவர்கள் என்றும் ஒரு பொதுப் புத்தி உருவாக்கப் பட்டது. அதையொட்டியே தமிழிசையும், தமிழ்த் திரை இசையும் தயாரிக்கப் பட்டு வினியோகிக்கப்பட்டன. இளையராஜா போன்ற மிகப் பெரிய சாதனையாளர்கள் கூட, இந்துத்வா சிந்தனையோடு ஒன்றிணைந்து தங்களது தலித் அடையாளத்தைப் புதைத்துக் கொள்ளவே விரும்பினார்கள். இத்தகைய சூழலில் ரஹ்மானின் எழுச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஒரு பின் நவீனத்துவ எழுச்சி என்றே கூறலாம். இளையராஜாவின் இசையில் தமிழிசை மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு நவீனத்துவ இசையாக மிளிர்ந்தது என்றால்,. ரஹ்மானில் இசையிலோ அது தன்னை நவீனத்திலிருந்து துண்டித்துக் கொண்டு பின் நவீனத்துவ இசையாக உருப்பெற்றிருக்கிறது. அந்த மாற்று இசையே அவரை இன்று ஆஸ்கர் வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

  திட்டமிட்டு இயங்குவது மரபார்ந்த இசை. சந்தர்ப்பவசமாக அமைவதே பின் நவீன இசை. மரபார்ந்த இசை வடிவ அமைப்பைத் திட்டமிடுகிறது. அதன்படி அமைக்கப்படுகிறது. பின் நவீன இசையோ அமைப்பின் மொத்தப்படுத்தலை நிராகிக்கிறது. துண்டாடல்; தொடர்ச்சியின்மை; இரட்டைக்குறியீட்டுத்தன்மை ஆகியவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. ரஹ்மானின் இசையில் இத்தகைய தன்மைகள் இருக்கின்றன. 

 இன்றைக்கு ரஹ்மானை பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. ஆஸ்கர் தமிழன் என்று ஒரு தமிழ் வார இதழ் போற்றுகிறது. இன்னொரு இதழோ தங்கத்தமிழன் இசைத்தமிழன் என்றெல்லாம விதந்தோதுகிறது. இந்தியாவே ரஹ்மானின் வெற்றியைத் தனது வெற்றியாகக்கொண்டாடுகிறது. இந்துத்வாவாதிகளின் மௌன அரசியலையும் மீறி ரஹ்மானின் வெற்றி வானளாவியதாகப் புகழப்படுகிறது. சில வக்கிர புத்தி படைத்தவர்கள், ‘இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா முஸ்லிம்கள் என்றாலே அஞ்சுகிறது. அதனால்தான் ஒபாமா என்ற முஸ்லீமை ஜனாதிபது ஆக்கியது. இப்போது ரஹ்மான் என்ற முஸ்லீமுக்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறது என்று விஷமத்தனமாகப் பேசுகின்றனர் என்ற போதிலும் ரஹ்மானின் வெற்றி உண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. ஆஸ்கர் வெற்றிக்குப் பிறகு ரஹ்மானை யாரும் சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராகப் பார்க்கவில்லை. இந்தியர்கள் அனைவரும் அவரை ஒரு இந்தியராகவும், தமிழராகவும் பார்க்கிறார்கள். இது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல. இந்த நிலையை அடைவதற்கே பல காலங்கள் பிடித்தன. யூசுஃப் கான் என்ற இந்தி நடிகர் தன் பெயரை திலீப் குமார் என்று மாற்றிக் கொண்ட பின்னரே உலகப் புகழ் பெற்ற இந்தி நடிகர் ஆனார். கிறிஸ்தவரான ஒரு நடிகர் தன் பெயரை அசோகன் என்று மாற்றிக் கொண்ட பின்னரே தமிழ்ப் பட உலகில் பெரிய நடிகர் ஆனார். இஸ்லாமியரான ஒரு தமிழ் நடிகர் தன் பெயரை ஆனந்தன் என்று மாற்றிக்கொண்ட பின்னரே பிரபலமடைந்தார். இத்தகைய பிற்போக்கான ஒரு சூழலில் தனது இன்னொரு பெயரான திலீப் குமார் என்பதைத் துறந்து விட்டு இவர் அல்லா ரக்கா ரஹ்மான் என்று தன் பெயரை வைத்துக் கொண்டு திரையுலகில் பிரவேசித்தது ஒரு வியப்பூட்டும் செயல் என்றே தோன்றுகிறது. ஒரு பெரும்பான்மைச் சமூகத்தில் தன்னை ஒரு மற்றமையாக அவர் அறிவித்திருப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தன்னம்பிக்கைதான் அவருக்கு 43 வயதிலேயே 97 விருதுகளை வாங்கித் தந்திருக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான அரங்கில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் சொல்லும் அளவுக்கு ஒரு உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கவனிக்கத் தவறுகிற விஷயம் ஒன்று இருக்கிறது.  தொடர்ந்து பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வரும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனக்கு எதிரான அத்தனை இடர்பாடுகளையும் கடந்து இந்த இடத்துக்கு வந்து தனது நாட்டுக்கும், தனது இனத்துக்கும் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறான் என்பதையும் மீறி, இது வரை இஸ்லாமிய சமூகத்தைச் சந்தேகக் கண்களோடு பார்த்து வந்த கெட்டி தட்டிப்போன செத்த மூளைகளை இந்தக் கலைஞன் தகர்த்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது. அது மட்டுமல்ல; பயங்கரவாதத்தைப் பொருளாதார அடிப்படையில் அணுகாமல்  மதரீதியாக அணுகும் பயங்கரம்தான் உண்மையான பயங்கரவாதம் ஆகும். இத்தகைய அணுகுமுறையை நமது அரசியல்வாதிகளும், பொதுப் புத்தியை உருவாக்கும் சிந்தனையாளர்களும் கண்டடைவதற்கு ரஹ்மானின் வெற்றி உதவுமானால் அது ஆஸ்கரை விட மிகப் பெரிய விருது கிடைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்லலாம்.

                   (நிகழ்த்தப்பட்ட மரணங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து)


No comments:

Post a Comment