Friday, January 30, 2015

chetan bhagat

தமிழ்

இனி

மெல்ல

மாறும்

எம்.ஜி.சுரேஷ்

* * *     

மீபத்தில் எழுத்தாளர் சேத்தன் பகத் ஓர் ஆங்கில நாளிதழில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

     ’மொழியைக் காப்போம், ரோமன் இந்தியைக் கைகொள்வோம்’ என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் சில விஷயங்கள் தமிழ்நாட்டுக்கும் பொருந்தி வருகிறமாதிரி தோன்றுகிறது.

     ’நமது சமூகத்தில் தொடர்ந்து நடந்து வரும் விவாதம் நமக்குத் தேவை இந்தியா அல்லது ஆங்கிலமா என்பதே’ என்று ஆரம்பிக்கும் அவர் மேலும் தொடர்கிறார்.

     ’நாம் நமது பிராந்திய மொழிகளை ஆங்கிலத்துக்கு இழக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் தத்தம் மொழிகளுக்கு எதிரான போட்டியாக இந்தியைக் கருதுகின்றன. மத்திய அரசு இந்தி வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது. மாநில அரசுகள் தத்தம் மொழிகளைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்கின்றன. ஆனால், எந்தவிதமான் ஆதரவும் இன்றி ஆங்கிலம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்கிறார் பகத். அவர் சொல்லும் சூழ்நிலை தமிழ் நாட்டிலும் இருக்கிறதல்லவா?’

     தமிழ் நாட்டில் தமிழ்வழிக்கல்விக்கு எதிராக தமிழ் மாணவர்களின் பெற்றோரே எதிர்ப்புத் தெரிவித்ததை நாம் அறிவோம். மாணவர்களும் தமிழை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். இதே நிலை வடக்கிலும் நிலவும் அவலத்தை பகத் சுட்டிக் காட்டுகிறார். அதற்குக் காரணங்களாக பகத் கீழ்க்காணும் விஷயங்களைச் சொல்கிறார்.

1.   சமூகத்தில் ஆங்கிலம் மரியாதைக்குரிய மொழியாகப் பார்க்கப்படுகிறது.
2.   புதிய உலகமான தகவ்ல் துறை ஆங்கிலம் சார்ந்தது.
3.   கணினி, மொபைல் போன் போன்ற எல்லாமே ஆங்கில மையம் கொண்டவை.
4.   என்னதான் வட்டார மொழிகளில் கணினி விசைப்பலகைகள் வந்து விட்டாலும், ஆங்கிலத்தை விட்டுத் தனித்து இயங்குவது கடினமே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று கேட்கும் பகத் ஒரு ஆலோசனையையும் வழங்குகிறார். அதன்படி இந்தி லிபியை ஆங்கில லிபியாக மாற்றிவிட வேண்டும் என்கிறார். அதிர்ச்சி தரும் இந்த ஆலோசனைக்கு ஆதாரங்களாக பின் வரும் தகவல்களை அடுக்குகிறார்.

ஆங்கிலம் ஏககாலத்தில் நம்நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறது. கணினியின் விசைப்பலகைகளில், அலைபேசியின் தொடு திரைகளில். அவரவர் வட்டார மொழிகளை ஆங்கில லிபியில் எழுதும் பழக்கம் ஏற்கனவே கோடிக்கணக்கான இந்திய மக்களிடம் இருக்கிறது. வாட்ஸப் சாதனத்தில் உரையாடல் இந்தியில் இருந்தாலும், தட்டும் லிபி ஆங்கில லிபியாக இருக்கிறது. எனவே, இதை ஒரு புது விஷயமாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. இன்றைக்கு இந்தித் திரைப்பட விளம்பரங்கள், டீவி விளம்பரங்கள் எல்லாமே பெரும்பாலும் ஆங்கில லிபியால் எழுதப்படும் இந்தி மொழியில்தான் இருக்கின்றன.

ஆனால் தூய இந்திவாதிகள் இதைக் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் இந்தி சுத்தமாக தூய இந்தியில்தான் எழுதப்படவேண்டும் என்கிறார்கள். மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்கள் என்கிறார் பகத். ஏற்கனவே, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகள் தங்கள் மொழிகளை ஆங்கில லிபியில் எழுதுவதை உதாரணம் காட்டுகிறார். ஆதியில் இந்தியாவில் உருதுக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை உருது லிபியில் எழுதவில்லை. இந்தி லிபியான தேவநாகரியில்தான் எழுதினார்கள் என்கிறார். ஒரு மொழியை இன்னொரு லிபியில் எழுதுவதில் தவறே இல்லை என்று வாதிடுகிறார் பகத்.

இன்றைய உலகமயமாக்க சூழலில், இந்தி ஒரு உலகளாவிய அளவில் வெல்வதற்கு இது முக்கியம் என்கிறார் அவர்.

அவர் சொன்ன சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கணினியில் முகநூல், ட்விட்டர்களில் ஆங்கில லிபியில் தமிழ் எழுதுகிறோம். மின் – அஞ்சலில் ஆங்கில லிபித் தமிழில் உரையாடுகிறோம். பேசும் தமிழில் தொண்ணூறு சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்தே பேசுகிறோம். ‘பஸ் இன்னிக்கு லேட்’ என்ற வாக்கியத்தில் இன்னிக்கு என்ற ஒரு வார்த்தை மட்டுமே தமிழ். மற்ற இரு சொற்கள் ஆங்கிலமாக இருக்கிறது. டீவி நிகழ்ச்சிகள் கூட இந்தத் தமிங்லிஷ் மொழியில்தான் நடத்தப்படுகின்றன. நமது மரபணுவிலேயே ஆங்கிலம் காலூன்றிவிட்டதோ என்று சந்தேகம் வருகிறது.

இதைத் தமிழுக்கும் அமல்படுத்தினால் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகிவிடாது. நாம் தற்போது உபயோகித்து வரும் தமிழ் எழுத்துகள் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்த எழுத்து என்று காலங்கள் தோறும் மாறித்தான் வந்திருக்கிறது. இப்போது அதுவல்ல பிரச்சனை. இப்படிச் செய்வதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

தமிழ் படிப்பதில் ஆர்வம் இல்லாத கான்வெண்ட் பிள்ளைகளுக்கும், ஆங்கிலவழிக் கல்வி பயிலும் தமிழ்க் குழந்தைகளுக்கும் தமிழ் மேல் ஆர்வம் வருமா?’ அதுதான் முக்கியம்.  அதை அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. ஆங்கில லிபியில் எழுதப்பட்டத் தமிழ்ப்புத்தகம் தப்பித் தவறி, ஆங்கிலப் புத்தகங்களுக்குள் கலந்து விட்டால் கூட அதைத் தனியே பிரித்து எடுத்து வைத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

தமிழ் பேச மட்டுமே தெரிந்த, எழுதப்படிக்கத் தெரியாத தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, கயானா, பிஜி, ட்ரினிடாட் போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே, ஒரு வேளை ஆங்கில லிபியில் தமிழை எழுதினால் அவர்களால் தமிழைப் படிக்க(?) முடியும். ஒருவேளை, சேத்தன் பகத் சொல்லும் ஆலோசனை இவர்களுக்குப் பயன்படக்கூடும்.

உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனமொழி. அவர்கள் மொழியான மாண்டரின் ஆங்கில லிபிக்கு மாறிவிட்டது. அதை பின்யின் என்கிறார்கள். இருந்தாலும், சீனலிபியிலும் மாண்டரின் மொழியை எழுதுகிறார்கள். ஒருவேளை, இந்தியை ரோமன் லிபிக்கு மாற்றினாலும், பழைய லிபியில் இந்தி எழுதுபவர்களும் இருக்கவே செய்வார்கள். அதை மாற்ற முடியாது. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற திடீர் மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்கு ஆதரவும் கைவிரிப்பும் ஏக காலத்தில் இருக்கவே செய்யும்..

ஒரு காலத்தில் சம்ஸ்கிருதக் கலப்பு என்ற அபாயம் வந்தது. அதையும் மீறி தமிழ் ஜீவிக்கிறது. இப்போது ஆங்கிலக் கலப்பு அபாயம் வந்து அச்சுறுத்துகிறது. பாரதியார் வேறு ஏற்கனவே தமிழ் இனி மெள்ளச் சாகும் என்று பயமுறுத்திவிட்டு சென்றிருக்கிறார். இருந்தாலும் அஞ்சவேண்டியதில்லை. இது போன்ற ஆபத்துகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.  என்ன பிரச்சனை வந்தாலும், தமிழ் சாகாது, ஆனால், மெல்ல மாறும் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment