Friday, February 6, 2015

JAMES JOYCE

* *

நவீன 

எழுத்தின் 

வரைபடத்தை 

மாற்றியவன்
 * *

எம்.ஜி.சுரேஷ்

ஜிம் தனது முதல் நாவலை எழுதியபோது அவனுக்கு வயது முப்பத்தி நான்கு. அதற்கு முன்னால் அவன் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதி இருந்தான். அடுத்து என்ன செய்வது என்கிற கேள்வி அவன் முன்னால் கால் பரப்பி நின்றது. பிழைப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே. பாடகனாகலாமா? ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடலாமா? சினிமா விநியோகத் தொழிலில் இறங்கலாமா அல்லது ஆங்கில நாடகங்கள் தயாரிக்கலாமா… எந்தத் தொழிலும் அவனுக்குச் சரிப்பட்டு வரவில்லை. நடு நடுவில் அவன் எழுதவும் செய்தான். அவன் எழுத்துக்களும் பிரசுரமாகாமல் இழுத்தன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அதிரடியாக ஒரு பெண் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அவள் பெயர் நோரா. ஓர் உணவு விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த அவளுக்கு ஜிம்மை மிகவும் பிடித்துவிட்டது. ஜிம் தனது லட்சியக் காதலியை அவளிடம் கண்டான். போராட்டங்கள் நிறைந்த அவன் வாழ்க்கையில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்ட அவள், வாழ்விலும் தாழ்விலும் அவனுடனேயே இருந்தாள். அவனுடைய உலகப் புகழ் பெற்ற நாவலின் முக்கியக் கதாபாத்திரமாக அவள் இயங்கினாள்.

ஜிம் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘டப்ளினர்ஸ்’ பதிப்பாளர்களால் முதலில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தொடர்ந்து தனது முதல் நாவலான, ‘ஓர் இளம் கலைஞனைப் பற்றிய சொல்லோவியத்’ தை எழுத ஆரம்பித்திருந்தான். அந்த நாவலைத் தொடராக வெளியிட ஒரு லண்டன் பத்திரிகை ஒப்புக்கொண்டது. பின்பு அது புத்தகமாகவும் வெளிவந்தது. அது தந்த உற்சாகத்தில் தனது அடுத்த நாவலை எழுத ஆரம்பித்தான் ஜிம். அதுதான் உலிஸிஸ். அது வரை சாதாரண் ஜிம் என்று குறுகிய வட்டாரத்தில் அறியப்பட்டிருந்த அவன் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற புகழ் பெற்ற மனிதன் ஆனது அப்போதிலிருந்துதான்.

ஆரம்ப கால எழுத்துகள் ஒரு மாதிரி. டப்ளினர்ஸ் வேறு மாதிரி. உலிஸிஸ் முற்றிலும் வேறு மாதிரி. உலிஸிஸ் மூலம் ஜேம்ஸ் ஜாய்ஸ் மட்டுமல்ல, ஆங்கில இலக்கியமும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியது. நவீனஇலக்கியப் பரப்பின் வரைபடம் மாற்றி வரையப்பட்டது.

பிரசுரமான நாளிலிருந்தே உலிஸிஸ் – கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக – சர்ச்சைக்குரிய நாவலாகவே இருந்து வருகிறது. சொல் விளையாட்டு, பகடி, ஒன்றைக் கூறி வேறொன்றை உணர்த்துதல் போன்ற தன்மைகளுடன் இயங்கும் அந்த நாவல் ஒரு முக்கியமான பங்களிப்பை இலக்கிய உலகுக்கு வழங்கி இருக்கிறது. அது நனவோடை உத்தி. இவருக்குப் பிறகு பலர் அந்த உத்தியைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தனர். இதனால் எழுத்துக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது. மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் நனவோடை உத்தியில் பெரிதும் கிளர்ச்சி அடைந்தார்கள். புதுமைப்பித்தன் நனவோடை உத்தியில் எழுதி இருக்கிறார். தொடர்ந்து மௌனி, லா.ச.ரா போன்றோரும் எழுதினார்கள். பல சிற்றிதழ்களில் பலர் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இவையாவும் நவீனஇலக்கிய வகைப்பாட்டுக்குள் வருகின்றன.

நவீனநாவல் உலகில் ஈடு இணையற்ற நாவல் என்று கொண்டாடப்படும் ‘உலிஸிஸ்’ பின்-நவீன இலக்கியப் பரப்பிலும் முதல் இடம் வகிக்கிறது. இதை ‘கதை மீறும் கதை’ என்று பின்-நவீனத்துவம் வகைப்படுத்துகிறது. புகழ் பெற்ற பின் நவீனவாதியான லக்கான் ஜேம்ஸ் ஜாய்ஸின் வாசகர். ஜாய்ஸின் ‘ஃபினிகன்ஸ் வேக் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதப்பட்ட நாவல். ‘நேரற்ற கனவு விவரணையில்’ எழுதப்பட்ட இந்த நாவல் விசித்திர பாணியிலான மொழியில், நேரற்ற விவரணையில், கனவின் தர்க்கம் மீறிய நிகழ்வுகள் போல் உருவாக்கப் பட்டுள்ளது. ‘இதில் கற்பனையும், யதார்த்தமும், குறியீடும் இணைகின்றன’ என்பது லக்கானின் கருத்து. ஃபினிகன்ஸ் வேக் நாவலை,மொழியை மீறும் மொழியில் எழுதப்பட்ட, கதையை மீறும் கதை என்று சொல்லலாம். (metafiction written in a meta language)

மணிக்கொடிக் கால எழுத்தாளர்களுக்குப் பிறகு, தமிழில் ஜாய்ஸை கையில் எடுத்துக் கொண்டவர்களாக பின்-நவீன எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம்.

தொண்ணூறுகளில் சில்வியா என்ற புனைபெயரில் ஓர் எழுத்தாளர் சிறுகதைகள் எழுதினார். அவர்தான் ரமேஷ்-ப்ரேம், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்களுக்கு ஆதர்சம் என்று தோன்றுகிறது. சில்வியாவின் கதைகளைப் படிப்பவர்களுக்கு பின்னவர்களின் எழுத்துகளில் அவரது பாதிப்பு இருப்பது தெரியும். பாலியல் வக்கிரம் தவிர்த்த எழுத்து சில்வியாவினுடையது. பாலியல் வக்கிரத்தைப் பற்றி எழுதலாம். அதில் திளைத்துத் துய்த்து அல்ல; அதிலிருந்து விலகி நின்று எழுத வேண்டும். அந்தத் திறமை சில்வியாவுக்கு உண்டு. அவரது ‘பிரமனைத் தேடி’ என்ற தொகுப்பில் உள்ள சிறுகதைகள் நனவோடை உத்தியில் எழுதப்பட்டுள்ளன. கதாபாத்திரத்தின் சிந்தனையும், கதைசொல்லியின் சிந்தனையும் ஒன்றோடொன்று கலந்து விடுவதை நனவோடை உத்தி எனலாம். புனைவும் எழுதுபவனும் ஒன்றாகிவிடும் இந்த அனுபவம் இலக்கியத்தில் ஒரு புதிய திறப்பு.  இதை சில்வியா தனது கதைகளில் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.

பின்-நவீனத்துவத்துக்கு ஜாய்ஸ் நனவோடை உத்தியை வழங்கி இருக்கிறார். பதிலுக்கு பின்-நவீனத்துவம் ஜாய்ஸுக்கு ‘கதை மீறும் கதை’ சொல்லி (metafiction writer) என்ற அடையாளத்தை வழங்கி இருக்கிறது.


<><><> 

No comments:

Post a Comment