Friday, February 13, 2015

காலங்கள் தோறும்

திருடன் – போலீஸ்

கருத்தியல் 


எம்.ஜி. சுரேஷ்

காகவி காளிதாசனின் ‘சாகுந்தலம்’ என்ற நாடகத்தின் ஆறாம் சர்கத்தில் வரும் ஒரு காட்சி அந்தக் காலக்கட்ட சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறது.

     இரு காவலர்கள் ஒரு மனிதனை,  இரு கைகளையும் கயிற்றால் பின்புறம் கட்டி இழுத்து வருகின்றனர். அப்போது அரசனின் மனைவியின் தம்பி எதிரில் வருகிறான். அவர் தான் நீதிபதி. அவர் முன்னிலையில் இரு காவலர்களும் கயிற்றால் கட்டி இழுத்து வரப்பட்ட மனிதனை அடிக்கின்றனர்.

     ’திருடனே, ராஜாவின் முத்திரை பொறிக்கப்பட்ட இந்த விலையுயர்ந்த மோதிரத்தை எங்கிருந்து திருடினாய்?’ என்று கேட்டு அடிக்கின்றனர். அதற்கு அவன், ‘ஐயா, அதுபோன்ற காரியத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்’ என்கிறான்.

      ’பின்னே, இவரு பெரிய ஐயரு. அதனாலே, உனக்குப் பரிசா ராஜா குடுத்துட்டாரு, இல்லே?’ என்று ஒரு காவலன் ஏளனம் செய்கிறான்.

     அவன் தான் ஒரு மீனவன் என்றும், வலையில் மீன் பிடித்து அதில் தானும் தன் குடும்பமும் வாழ்வதாகக் கூறுகிறான்.

     அதற்குக் காவலர்கள், ’என்ன தூய்மையான தொழில்’ என்று நக்கலாகப் பேசுகிறார்கள்.

     ’ஐயா, நான் ஒரு பெரிய ஆற்று மீனைப் பிடித்தேன். அதை அறுத்தபோது அதன் வயிற்றில் இது இருந்தது’ என்கிறான்.

     நீதிபதி ஒரு காவலனைப் பார்த்து, அருவருப்புடன், ‘இந்த நாற்றம் பிடித்த மீனவனை நாம் நன்கு விசாரிக்க வேண்டும். நாம் நேரே அரண்மனைக்குப் போவோம்’ என்கிறார்.

     உடனே இரு காவலர்களும், அந்த மனிதனை இழுத்துக் கொண்டு போகிறார்கள்.
     அரண்மனை வருகிறது. அரண்மனை வாயிலில் மீனவனை காவலில் வைத்து விட்டு மோதிரத்துடன் நீதிபதி உள்ளே போகிறார்.

     கொஞ்ச நேரம் ஆகிறது.  மன்னரைப் பார்த்துவிட்டு வர நீதிபதிக்கு இவ்வளவு நேரமா ஆகும் என்று ஒரு காவலன் இன்னொரு காவலனிடம் கேட்கிறான். அரசரை உடனே பார்க்க முடியுமா. நேரம் காலம் பார்க்க வேண்டாமா என்கிறான் மற்றவன்.

     ’இவன் கழுத்தில் தூக்குமாலையை மாட்ட என் கை அரிக்கிறது’ என்கிறான் ஒரு காவலன். ’அப்படியெல்லாம் காரணமில்லாமல் ஒரு மனிதனைக் கொல்வது பற்றி நீ யோசிக்கக் கூடாது’ என்கிறான் இரண்டாவது காவலன். அப்போது தன் கையில் ஒரு கடிதத்துடன் நீதிபதி வருகிறார். அதைப்பார்த்த ஒரு காவலன் கைதியைப் பார்த்து, ‘அதோ மன்னரின் தண்டனைக் கடிதத்துடன் நீதிபதி வருகிறார். உனக்கு மரணம் நிச்சயம். என்கிறான்.

     வெளியே வரும் நீதிபதி ஒரு காவலனைப் பார்த்து,’சுசாகா, அந்த மனிதனை விடுதலை செய்’ என்கிறார்.

     ’விடுதலையா!, காவலர்கள் இருவரும் திடுக்கிடுகின்றனர். மீனவனின் கைக்கட்டை சுசாகா என்று விளிக்கப்பட்ட காவலன் அவிழ்த்து விடுகிறான்.

     ’அந்த மோதிரத்தின் மதிப்பு என்னவோ அதற்கு இணையான பரிசுகளை அவனுக்குத் தரச்சொல்லி மன்னர் உத்தரவிட்டிர்க்கிறார்’ என்கிறார் நீதிபதி. அவர் கையில் சில ஆபரணங்கள் இருக்கின்றன.

     காவலர்கள் இருவரும் விழிக்கின்றனர்.

     ’இவன் தூக்குக் கம்பத்தின் கீழ் நிற்பதிலிருந்து, யானையின் முதுகில் உட்காருமளவுக்கு உயர்ந்துவிட்டான்.’ என்று காவலர்களில் ஒருவன் வாயைப் பிளக்கிறான்.

     ’இந்த வெகுமதியைப் பார்த்தால் மன்னர் இந்த மோதிரத்தை மிகவும் சிறந்த அரியவகைக் கல்மோதிரம் என்று நினைக்கிறார் என்று தெரிகிறது.’

     ’அப்படியெல்லாம் இல்லை. இந்த மோதிரத்தைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. அவருக்குப் பிரியமான யாருடைய ஞாபகமோ வந்த மாதிரி இருந்தது. அவர் மனம் கிலேசமடைந்திருந்தது’ என்றார் நீதிபதி.

     ’சரியான நேரத்தில் மன்னருக்கு அணுக்கமாக சேவை செய்துவிட்டீர்கள்’ என்கிறார்கள் காவலர்கள்.

     ’இந்த மீன்களின் ராஜாவுக்கும் செய்ய வேண்டிய சேவையைச் செய்யுங்கள்’ என்றபடி ஆபரணங்களை நீதிபதி தருகிறார்.

     ’அதுதான் நியாயம்’ என்கிறான் முதல் காவலன்.

     ’மீனவனே, என் இனிய நண்பனே. மகத்தான மனிதனே, நாம் நமது நட்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, மது விடுதிக்குச் சென்று மது அருந்துவோம்’ என்று அழைக்கிறார் நீதிபதி.

     அவர்கள் அனைவரும் மேடையை விட்டு உள்ளே போகிறார்கள்.

காட்சி முடிகிறது.
*
இந்த நாடகத்தில் காளிதாசன் சில முக்கியமான செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்.

     ஒருவன் திருடன் என்று பிடிபட்ட உடன் அவனைக் காவலர்கள் அடித்து, அவமானப்படுத்தித் துன்புறுத்துகிறார்கள். அவனுக்குத் தண்டனை வாங்கித்தரத் துடிக்கிறார்கள். அரசருக்குப் பிடித்த விஷயம் ஒன்றைச் செய்து, அவரிடம் பரிசு வாங்கிவிட்டான் என்று தெரிந்ததும் நீதிபதி முதல் காவலர்கள் வரை எல்லோரும் அந்தர் பல்டி அடிக்கிறார்கள். சந்தேகக் கேஸ் திருடன் என்று பிடித்து வரப்பட்ட அவனுடன் சேர்ந்து மது அருந்தும் அளவுக்கு நட்புபாராட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

     நீதிபதி அரசனின் மனைவியின் சகோதரன் என்று குறிப்பிடுகிறார் காளிதாசன். அதாவது அரசி என்று குறிப்பிடவில்லை. அரசனுக்குப் பல மனைவிகள் இருக்கலாம். அரசி என்பவள் ஒருத்திதான் இருக்க முடியும். அரசனுக்கு வேண்டப்பட்டவர்கள் உயர்ந்த பதவிகளில் இருந்ததை காளிதாசன் கிண்டலாகச் சுட்டிக் காட்டுகிறார்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ருஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செகாவ் ஒரு கதை எழுதி இருக்கிறார். தமிழில், ‘பச்சோந்தி’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கதையில் ஒரு போலீஸ்காரன் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருப்பான். அப்போது ஓர் இடத்தில் கூட்டமாக மக்கள் கூடி இருப்பார்கள். என்னவென்று போய்ப்பார்த்தால், ஒரு ஆறு வயதுச் சிறுவனும் ஒரு சின்ன நாய்க்குட்டியும் இருப்பது தெரிகிறது.

     போலீஸ்காரர் என்ன ஏது என்று விசாரிப்பார்.

     ஒருவன் சொல்வான். ‘இந்த நாய் அந்தச் சிறுவனைக் கடித்து விட்டது’

     ’ஐயய்யோ…பாவம் இந்தக் குழந்தையை  நாய் கடித்துவிட்டதா. யார் பொறுப்பில்லாமல் இப்படி நாயைத் தெருவில் விட்டது’ என்று கண்டிப்புடன் கேட்பார் போலீஸ்காரர்.

     ’அது பார்ப்பதற்கு இந்த ஊர்ப்பிரமுகர் வீட்டு நாய் போல் இருக்கிறது’ என்று கூட்டத்தில் இருந்த ஒரு மனிதன் சந்தேகத்தைக் கிளப்புவான்.

     உடனே திடுக்கிட்ட போலீஸ் ‘ஓ அப்படியா, நான் கூட அப்படித்தான் நினைத்தேன். நாயைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது’’ என்று சொல்லிவிட்டுப் பையனைப் பார்த்து, ’ஏன் நாயைத் துன்புறுத்தினாய். அதனால்தான் கடித்திருக்கிறது’ என்று பையன் மேல் பாய்வார்.

     ’இந்த நாயைப் பார்த்தால் அந்தப் பிரமுகர் வீட்டு நாய் போல் தெரியவில்லை. இது தெருநாய்தான்’ என்பார் வேறு ஒரு மனிதர்.

     ’நான் கூட அப்படித்தான் நினைத்தேன்’. என்று சுதாரிக்கும் போலீஸ், ‘இது யாரோட நாய்..யார் இப்படி தெருவில் விட்டது’ என்று கர்ஜிப்பார்.

     அப்போது ஒருவன் சொல்வான். ‘ஐயா, இது பிரமுகர் வீட்டு நாய்தான். நேற்று இந்த நாயை அந்தப் பிரமுகர் வீட்டில் பார்த்தேன்’   உடனே திடுக்கிட்ட போலீஸ் அந்தப் பையனைப் பார்த்துத் திட்டுவார். ‘ஏண்டா உனக்கு அறிவில்லே. பாவம் அந்த நாயோட வாய்லே நீ விரல் வச்சிருப்பே, அதான் கடிச்சுடுச்சு. பாவம் அந்த நாய்’ என்று நாய்க்காக உருகுவார்.

     அதற்குள் வேறு ஒருவன், ‘நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாய் வேறு. இந்த நாய் வேறு’ என்பார்.

     மீண்டும் திடுக்கிட்ட போலீஸ்……….

     என்ற ரீதியில் கதை நகரும். ஒரு நூற்றாண்டுக்குமுன் ஜார் கால ருஷ்யாவில் நிகழும் இந்தக் கதையும் போலீஸ் – திருடன் கருத்தியல் கதைதான். கி.பி. 4ஆம் நூற்றாண்டு காளிதாசன் நாடகக்காட்சியும்  போலீஸ் – திருடன் கருத்தியல்தான்.

இந்தியாவாக இருந்தாலும் சரி, சென்ற நூற்றாண்டு ருஷ்யாவாக இருந்தாலும் சரி. போலீஸ் – திருடன் கருத்தியல் – கால தேச வர்த்தமானமின்றி எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்று தெரிகிறது. பொதுவாகப் பார்க்கும் போது, போலீஸ் சேவை செய்வது அரசுக்கு மட்டுமல்ல, அரசை ஆள்பவர்களுக்கும், நிர்ப்பந்தத்தின் பொருட்டு, ஆள்பவர்களின் அதிகார வளையத்தில் வளைய வரும் ஆசாமிகளுக்கும் சேர்த்துத்தான் என்ற கசப்பான  உண்மையை இந்தக் கதைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

யோசித்துப் பார்க்கும் போது இது என்றில்லை, பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படித்தான் எதிர் – நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. இதை ஆங்கிலத்தில் ஐரனி என்பார்கள். வாழ்க்கையையும், இலக்கியத்தையும் சுவையுள்ளதாக்குவது இந்த ஐரனிதான்.

<><><>     <><>

No comments:

Post a Comment