Saturday, February 21, 2015

**
ஒரு பதிப்பகமும், 

இரு புத்தகங்களும்

**


எம்.ஜி.சுரேஷ்
 * * *
நான் சொல்ல வருவது, 
‘கோட்பாடுகள் யாவும் அனுமானங்களே 
எனவே அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். கோட்பாடுகளுக்கிடையே சிக்கி நசுங்கும் 
மனிதனைக் காப்பாற்றுங்கள் என்பதைத்தான்.
* * *

டந்த ஞாயிறு (15.2.15) அன்று ஒரு டூ-இன்-ஒன் (two-in-one) நிகழ்ச்சி நடந்தது. ஏக காலத்தில் ஒரு பதிப்பகத்தின் பிறந்தநாள் விழாவும், இரு புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடந்தன.

மென்மையான மெல்லிசை காதுகளை வருட, நிகழ்ச்சி ஆரம்பமானது. அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே மற்றும் நன்றி, ஓ ஹென்றி ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவான அன்று கூட்டம் அலைமோதியது. (இந்தக் காலத்தில் ஓர் இலக்கியக் கூட்டத்துக்கு  ஐம்பது பேர் வந்தாலே அதை அலைமோதும் கூட்டம் என்று கொள்ள வேண்டும்.)

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தமிழ்மகன் அனைவரையும் வரவேற்றார். பொக்கிஷம் புத்தக அங்காடியின் பதிப்பாளரான மேக்ஸிம் கேக் வெட்டினார்.

கவிஞர் ஞானக்கூத்தன் புத்தகங்களை வெளியிட்டார். இரு நுல்களில் நன்றி ஓ ஹென்றி குறித்து நகைச்சுவையாகப் பேசிப் பாராட்டிய அவர், அனைத்துக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசியபோது சர்ச்சை எழுந்தது. அனைத்துக் கோட்பாடுகளும் நூலில் நான் தொல்காப்பியத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவரோ பதஞ்சலியின் சமஸ்கிருத இலக்கணம் பற்றிப் பேசினார். என்னுடைய நூலில் “சொல்லையும் பொருளையும், எல்லா மொழிகளும் கயிற்றால் கட்டி வைத்திருக்கின்றன. அமைப்பியம் அந்தக் கயிற்றை வெட்டி எறிந்தது. எனவே, சொல் வேறு பொருள் வேறு“ என்று எழுதி இருந்தேன்.

அதற்கு ஞானக்கூத்தன் சொல்லை வைத்து மட்டும் பொருள்படுத்த முடியாது. சொல்லை ஒட்டி எழும் ஓசையில் கூட பொருள் வரும் என்றார். அதற்கு நான் ஓசை என்ன, மௌனத்தில் கூட அர்த்தம் வரும் என்று சொன்னேன். உதாரணமாக, என் கையை உள்ளங்கை தெரியுமாறு உயர்த்திக் காட்டினேன். இப்போது என் கையைப் பார்க்கும் உங்களுக்கு என்னென்ன அர்த்தங்கள் தோன்றுகின்றன என்று கேட்டேன். ’நில்’ என்பது ஓர் அர்த்தம். ‘யாமிருக்க பயமேன்’ என்று இன்னோர் அர்த்தம். இஸ்லாமிய மதச்சின்னம் என்று ஓசையை மீறிப் பல அர்த்தங்கள் தோன்றுகின்றன. என்று நான் சொன்னேன். நான் எழுதியது மேறக்த்திய தத்துவம் குறித்து. ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்ததோ கிழக்கத்திய தத்துவம் பற்றி.

அடுத்துப் பேசிய முனைவர் கமலா கிருஷ்ணமூர்த்தி தான் பேச வேண்டிய நூலான அனைத்துக் கோட்பாடுகளும் அனுமாங்களே என்பதைப் பற்றிப் பேசாமல், நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய அட்லாண்டிஸ் மனிதன் நாவலைப் பற்றி வெகுநேரம் பேசினார். பின்பு போனால் போகட்டும் என்று அனைத்துக் கோட்பாடுகள் நூலைப் பற்றியும் கொஞ்சம் பேசினார். ’அனைத்துக் கோட்பாடுகளைப் பற்றி மட்டும் எழுதியது போதாது. அவற்றைக் கடந்து நிற்கும் உண்மையைப் பற்றியும் பேசவேண்டும்’ என்றார். ’எந்த உண்மையைப் பற்றிப் பேச வேண்டும்? ஒற்றை உண்மை என்று எதுவும் இல்லை’ என்று அவருக்கு நான் பதில் சொன்னேன். இங்கு இரவு ஒன்பது மணி என்றால், சிங்கப்பூரில் இரவு பதினொன்றரை மணி. அதே போல் லண்டனில், மாலை நான்கு மணி. இங்கு இரவு என்றால் அமெரிக்காவில் பகல். இவை எல்லாமே உண்மைகள். உண்மையும் பன்மைத் தன்மை கொண்டது. எல்லாவற்றையும் மீறிய ஒற்றை உண்மை எதுவும் கிடையாது’ என்று நான் சொன்னேன்.

என்னுடைய கட்டுரையான அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே என்ற நூலில் நான் சொல்ல வருவது, கோட்பாடுகள் யாவும் அனுமானங்கள் என்பதை மட்டும் அல்ல. அதை மட்டும் சொல்வதற்கு ஒரு புத்தகத்தை எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் சொல்லாமல் விடப்பட்ட செய்தி முக்கியமானது. ஜார்ஜ் ஆர்வெல் Animal farm எழுதியதற்குக் காரணம் விலங்குப் பண்ணையைப்பற்றி விரித்துரைப்பதற்கு அல்ல. அதைப் பற்றிச் சொல்வதன் மூலம்  சோவியத் யூனியன் ஒரு விலங்குப் பண்ணை என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். இப்படி ஒன்றைச் சொல்லி வேறொன்றை உணர்த்துவதற்கு ஆங்கிலத்தில் allusion என்பார்கள். தமிழில் மறைமுகக் குறிப்பு என்று குறிப்பிடலாம்.

என்னுடைய நூலில் மறைமுகக் குறிப்பாக நான் சொல்ல வருவது, ‘கோட்பாடுகள் யாவும் அனுமானங்களே எனவே அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். கோட்பாடுகளுக்கிடையே சிக்கி நசுங்கும் மனிதனைக் காப்பாற்றுங்கள் என்பதைத்தான். ஒரு கோட்பாட்டுக்காரர்கள் பாபர் மசூதியை இடிக்கவும் வேண்டாம். எதிரான கோட்பாட்டுக்காரர்கள் மும்பையில் வெடி குண்டு தாக்குதல்களை நடத்தவும் வேண்டாமே. இதைத்தான் என் கட்டுரை மறைமுகமாகப் பேசுகிறது.

இதை நான் இப்போது இப்படி பட்டவர்த்தனமாய்ச் சொல்லும்படி ஆகிவிட்டது.

’வறட்டுத்தனமாகக் கோட்பாடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். பலவிதமான கோட்பாடுகளுக்கும், அரசியலுக்கும் இடையே மாட்டிக்கொண்டு பிதுங்கித் தொங்கிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை என்ற வஸ்துவைப் பாருங்கள். அதற்கு கவனம் கொடுங்கள், அக்கறை காட்டுங்கள்’ என்று கோரிய பாலஸ்தீன அறிவுஜீவியான எட்வர்ட் சேத் சொன்ன சேதியும் இதுதான்.

என்னுடைய நூலில் ஹிட்லரையும், ஸ்டாலினையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கிறேன் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கும் நான் பதில் சொன்னேன். ஓர் ஆட்டின் கழுத்தை அறுக்கும் போது, பிஸ்மில்லா என்று சொல்லி அறுத்தால் என்ன, மாரியாத்தா என்று சொல்லி அறுத்தால் என்ன, ஏசுவே என்று சொல்லி அறுத்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். ஆடு கழுத்தறுபட்டுத் துடித்துச் சாவது நிச்சயம். ஆஷ்விட்ஸ் வதைமுகாமாக இருந்தாலும் சைபீரிய வதைமுகாமாக இருந்தாலும் வதைபட்டது மனித இனம்தானே?... என்று சொன்னேன். இதைப் பற்றி மேடையில் நான் பேசாத சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

சோவியத யூனியனில் லெனின் தலைமைப் பதவிக்கு வந்த போது அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் இருவர். ஒருவர், ட்ராட்ஸ்கி, அடுத்தவர் புக்காரின். தனக்கு அடுத்தபடியாக இவர்கள் இருவரும்தான் சோவியத் யூனியனை தலைமைதாங்கி நடத்த வேண்டும் என்று லெனின் விரும்பினார். அப்போது ஸ்டாலின் எங்கோ இருந்தார். லெனின் மறைந்ததும் ட்ராட்ஸ்கியையும், புக்காரினையும் அப்புறப்படுத்திவிட்டு ஸ்டாலின் தலைவரானார். ட்ராட்ஸ்கியைக் கொன்றார். புக்காரினுக்கு மரணதண்டனை விதித்தார். ஒரு பாவமும் அறியாத புக்காரினின் அப்பாவி மனைவியை வதைமுகாமுக்கு அனுப்பி சித்திரவதை செய்தார். இதையெல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் பெயரால் செய்தார். கடவுளின் பெயரால் தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் தலையை வெட்டுவதற்கும், தொழிலாளர்களின் பெயரால் வேண்டப்படாதவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

ஸ்டாலின் இருந்த போதே ரஷ்யக் கம்யூனிஸ்டுகளின் ஒரு பிரிவினர் அவரை’, ‘ரஷ்யப் புரட்சி நமக்களித்த தீய மேதை’ என்றும் ‘செங்கிஸ்கான்’ என்றும் அழைத்தார்கள். புக்காரினுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட போது, அவர் ஸ்டாலினுக்கு தன் கடைசிக் கடிதத்தை எழுதினார். அதில் அவர் கேட்டிருந்த ஒரே கேள்வி இதுதான். ‘நான் சாகவேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்?’ பாவம் புக்காரின். அவருக்குத் தெரியாது. அதன் பெயர் அதிகாரத்தின் விருப்புறுதி (will to power) அதிகாரத்தின் விருப்புறுதிதான் ஒரு மனிதனை எதுவும்செய்யும் அளவுக்குத் தூண்டுகிறது. அதற்கான  உந்து சக்தியாக இருக்கிறது. தனது அதிகாரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் எதையும் உடைத்து நொறுக்கத் துடிக்கிறது. செங்கிஸ்கான், ஹிட்லர் போன்றோர் செய்தது அதைத்தான். ஸ்டாலின் செய்ததும் அதையே. யாருமே செய்யாத ஒரு கொடிய செயலையும் ஸ்டாலின் செய்தார். ரஷ்ய வரலாற்று நூல்களில் இருந்து புக்காரினின் பெயரை நீக்கினார். அவரது படங்கள், செய்திகள் ஆகியவற்றையும் அழித்தொழித்தார். அதிகாரத்தின் விருப்புறுதி ஒரு மனிதனை எவ்வளவு கீழான தன்மைக்கு ஆளாக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எனவே, மார்க்ஸீயர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் மார்க்ஸீயத்துக்கு மட்டும் வக்காலத்து வாங்குங்கள். ஸ்டாலினுக்கு வேண்டாம்

எழுத்தாளர் எஸ். சங்கரநாரயணனின், ’நன்றி ஓ ஹென்றி’ சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சப்தரிஷி பேசினார். ரசனைக்குப் புகழ் பெற்றவர் ரசிகமணி டி.கே.சி. அவருக்கு வாரிசாக சப்தரிஷி வந்துவிட்டாரோ என்று தோன்றியது. சங்கரநாராயணனின் கதைகளை விட அவர் அதிகமாக சுஜாதாவின் கதைகளைப் பற்றியே பேசினார்.

இறுதியாக நன்றியுரை ஆற்ற வந்த சங்கரநாராயணன் நேரம் கருதி சுருக்கமாக, ஞானக்கூத்தனுக்கு நன்றி, தமிழ்மகனுக்கு நன்றி, முனைவர் கமலா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி, எம்.ஜி.சுரேஷுக்கு நன்றி, சப்தரிஷிக்கு நன்றி, சுஜாதவுக்கு நன்றி என்று பேசி அவையைக் கலகலக்க வைத்தார்.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம்.. காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.

                          <><><><><>


No comments:

Post a Comment